(Photo Courtesy : http://guide2chennai.blogspot.com)
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிட்டிய ரயில் பயணம்
ஜன்னலுக்கு வெளியே, நினைவுகளையும் பின்னுக்கு தள்ள
முப்பது நிமிட முத்துக்குளியலில்... முத்தாய் கிடைத்தன
சில ஞாபகங்கள்...
கல்லூரிக் கால பருவ மழையில் நண்பர்களுடன் செலவு செய்த
நட்பெனும் சில வருடங்களின் சில்லிடும் சாரல்கள்...
உண்டோம்...
உறங்கினோம்...
உறக்க கத்தினோம்...
காதலித்தோம்...
கானம் பாடினோம்...
காற்று வாங்கினோம்...
எப்போதாவது படித்தோம்...
முப்போதும் பழகினோம்...
வேற்றாரரையும் உற்றாராய் அணுகினோம்...
இப்படி நாங்கள் சில நிமிடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த
வாடகை வீடு
ரயில்..!
இரண்டு கால்களும் தண்டவாளங்களாக
தலைக்குமேலே 'மாணவன்' என்ற மின்சாரக் கம்பி பாய்ச்சிய சக்தியில்
கைகள் கோர்த்து கொண்ட சந்திப்புகளாய் (ஜங்ஷன்)
நட்பெனும் பயணம் மேற்கொண்டோம்...
அவ்வப்போது கல்லூரி எனும் பணிமனையில் ஓய்வெடுத்திருந்தபோதிலும்
தொடர்வண்டியாய் தொடர்ந்தது எங்கள் பயணம்...
ஒரு சமயம் ரயிலிறங்கினோம்...
எதற்கு..?
ரயில் சுவற்றில் மட்டும் கிறுக்கிய எங்கள் பெயர்களை
வாழ்க்கை சுவடுகளும் சுவைக்கட்டும் என்று...
இப்படி அன்று வாழ்க்கையை சுவைக்க கற்றுத்தந்த ரயில்
இன்று எங்கள் நினைவுகளை சுமந்து எங்கள் நெஞ்சில் கனக்கிறது...
தடம்புரளா எங்கள் நட்பெனும் காதலின் நினைவுச் சின்னம்
ரயில்..!
அன்புடன்
ஹரீஷ் நாராயண்

