'ஆ'கு பெயர்
சில வருடங்களுக்கு முன்பு, சுஜாதா அவர்களின் நாவல்களை back to back வாசித்துக்கொண்டிருந்த சமயம், தேடித் தேடி அவரது நாவலை வாங்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒருமுறை ஒரு நாவல் வாங்கி வந்து ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தேன்... அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், நாவலின் தலைப்பை ஏதாவது ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பார்கள். அந்த தலைப்பு 'ஆ'...
அட்டகாசமான அமானுஷ்ய நாவல்... எனக்கு அந்த நாவலின் கதை பிடித்திருந்தாலும், மற்ற சுஜாதாவின் நாவல்களின் தலைப்பை தாண்டி இந்த நாவலின் தலைப்பு அப்படி பிடித்து போனது... 'ஆ'... இதைவிட ஒரு ஹாரர் கதைக்கு தலைப்பு வைக்க முடியுமா என்று தெரியவில்லை... தலைவர் எப்படி யோசித்தாரோ... அவரது ரசிகன் என்ற முறையில் தலைவர் சுஜாதாவிற்கு நன்றி... அந்த தலைப்பு, வெகுநாட்களாகவே என்னுள் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருந்தது... அம்புலியை தொடர்ந்து அடுத்த ஹாரர் கதை.. அதுவும், உலகில் உள்ள வெவ்வேறு ஊரில் நடக்கும் ஹாரர் என்று முடிவானதும்... நீண்ட நாட்களாகவே என் மனதிலிருந்த இந்த தலைப்பை எனது நண்பர் ஹரியிடமும் தயாரிப்பாளர் V. Loganathan அவர்களிடமும் கூற, ஒருமனதுடன், அனைவருக்கும் பிடித்துப்போய் 'ஆ' என்று வைத்துவிட்டோம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இத்தலைப்பை பதிவு செய்ய முயன்ற போது ஏற்கனவே இதை வேறொரு கம்பெனியினர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறவுஉம்... ஒரு வாரமாக யோசித்தும் வேறெந்த தலைப்பும் சிறப்பாக தோன்றவில்லை.. தோன்றியதும் 'ஆ' அளவிற்கு ஈர்க்கவில்லை.. பிறகு, அந்த முன்பதிவு செய்த கம்பெனிக்காரர்களிடமே பேசி... சம்மதிக்க வைத்து.. தலைப்பை பெற்றுக்கொண்டோம்...
டிஸ்கி : தலைப்பு மட்டுமே தலைவரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதே தவிர, அந்த கதைக்கும் இந்த திரைப்படத்தின் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்...


