Showing posts with label சாராயம். Show all posts
Showing posts with label சாராயம். Show all posts

Saturday, January 16, 2010

"கிரகணம்" - சிறுகதை


சைட் அடித்தல், எஸ்.எம்.எஸ் படித்தல், சிட்டி டிராஃபிக்கில் பைக் ஓட்டுதல், நவீன 3D படங்களை பார்த்து இரசித்தல், வெளிச்சம், நிறங்கள், இயற்கை இப்படி எல்லாவற்றையும் பிரவீன் நேற்றுவரை தனது இரண்டு கண்களாலும் இரசித்து கொண்டுதான் இருந்தான். திடீரென்று இப்படி தனது கண்கள் குருடாகிப் போகுமென்று எதிர்ப்பார்த்திருக்கவில்லை...

முதல் நாளே இ(கு)ருட்டு வாழ்க்கை அவனை மிகவும் பயமுறுத்தியது...

பொங்கலைக் கொண்டாட நண்பனது கிராமத்துக்கு போகாமல் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்காது... என்ன செய்ய! விதி என்றுதான் சொல்ல வேண்டும்

நண்பண் ஒருவன் அருகில் புலம்பிக்கொண்டிருந்தான் "சே! ஆஃபீஸ்ல லீவு கொடுக்காம இருந்திருந்தா உன் கண்ணு தப்பிச்சிருக்கும்..."

"அதான் ரேடியோவுல அவ்ளோ சொன்னாங்கல்ல, கிரகணத்தை வெறுங்கண்ணால பாக்க கூடாதுன்னு, அப்புறம் யார்டா உன்னை பாக்க சொன்னது..", இன்னொரு நண்பன் செல்ஃபோனில் புலம்பினான்

"ஹய்யோ ப்ரவீன், உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே! இனிமே உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பா..?" அம்மாவின் அழுகை

இப்படி எல்லாவற்றையும் கடந்து தனது அறைக்குள் வந்தான். காலில் கம்ப்யூட்டர் டேபிள் முட்டியது...

"இனி இந்த கம்ப்யூட்டரை வைத்து நான் என்ன செய்வது" பிரவீனின் மனசாட்சி பேசியது. "இனி இது உதவாது... இல்லை... நான்தான் இனி ஒண்ணுத்துக்கும் உதவாதவன் ஆகிவிட்டேன்... காலம் முழுக்க குருடனாக இருக்க வேண்டியதுதான்."

எஃப் எம் ரேடியோவை தடவி தடவி பெரும்பாடு பட்டு சொடுக்கினான்.

"கங்கண சூரிய கிரகணத்தை காண வந்திருந்த இந்தியாவை சேர்ந்த பல விஞ்ஞானிகள் கருத்தரங்கை முடித்து கொண்டு சந்தோஷமாக தத்தம் ஊருக்கு திரும்பினர். அவர்களுடன் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், இந்த கிரகணம் மிகவும் பயனுள்ளதாய் இருந்ததாக தெரிவித்தனர். மேலும்..." டொக்கென்று எஃப் எம்-ஐ ஆஃப் செய்தான்.

கட்டிலில் படுத்தான்... மனதை ரீவைண்டு செய்தான். நடந்ததை நினைத்துப் பார்த்தான்

15ஆம் தேதி...
கங்கண சூரிய கிரகணம் உச்சத்தில் இருந்த 1.20 மணிக்கு...
மடிப்பாடி கிராமத்தில் தனது நண்பன் ஒருவனின் அறையில் பிரவீன் இருந்தான்.


"ஹேய், பிரவீன் கிரகணசூரியன் அழகா இருக்குடா, வந்து பாருடா... " என்று ஒருவன் அழைக்க

அறைக்குள்ளிருந்த பிரவீன், "டேய் அதான் பாக்கக்கூடாதுன்னு டிவில சொன்னாங்கல்ல அப்புறம் என்ன வந்து பாருடாங்கிறே?"

"ரொம்ப பயப்படாதேடா டிவில வந்து பாக்கத்தான் உன்னை கூப்டேன்"

"டிவிலியா" என்று கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.

"ஓ உனக்கு கிரகணம்னா அவ்வளவு பயமா..?" நண்பன் உசுப்பிவிட்டான்

"சே! சே! பயமெல்லாம் ஒண்ணுமில்லடா.." என்றான் பிரவீன

"பயமில்லாமத்தான் உள்ள ரூமுலருந்து கிரகணத்தை பாக்கமாட்டேன்னு கத்துனியா..?", இது இன்னொரு நண்பன்

"நான் எங்கேடா கத்துனேன், தவிர எனக்கென்னடா பயம்.."

"அப்ப ஒண்ணு பண்ணு, கிரகணத்தை உன் டிஜிட்டல் கேமிராவுல ஃபோட்டோ எடுத்துட்டு வா..?" என்றான் ஒரு விஷமி நண்பன்

'ஃபோட்டோவா... எதுக்கு..?" என்று பிரவீன் சற்று தயங்கவே செய்தான்

"ஆ... ஃப்ரேம் போட்டு, பிரவீன் பயமில்லாதவன்னு ஒரு சர்டிஃபிகேட் கொடுக்கத்தான்.."

"என்னடா, ரொம்பத்தான் ஓட்டுறீங்க... ஃபோட்டோத்தானே... இதோ எடுத்துட்டு வர்றேன்" என்று தனது டிஜிட்டல் கேமிராவை எடுத்துக் கொண்டு மாடியேறினான்.

ஒரு நிமிடம்...

இரண்டு நிமிடம்...

மூன்று நிமிடம்...


.
.
.
.
ஏழு நிமிடத்திற்கு பிறகு பிரவீன் இறங்கி வந்தான்.


"இந்தாங்கடா நீங்க கேட்ட ஃபோட்டோ, சூரியனை டைரக்டா பாத்தே ஃபோட்டோ எடுத்தேன்... ஆனா ஃபோட்டோல லென்ஸ் ஃப்ளேர் அடிக்குது. சரியா விழவேயில்ல.." என்று பிரவீன் பெருமையாக ஃபோட்டோவை அனைவருக்கும் காட்டினான்.

அனைவரும் அவன் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

பிரவீனுக்கு அனைவரும் அவனை உற்றுப் பார்த்து கொண்டிருந்தது என்னவோ போல் இருந்தது...

"என்னடா அப்படி பாக்குறீங்க..?"

"டேய் உன் கண்ணுல என்னமோ கறுப்பு கலர் பரவியிருக்கு..?"

"என்னடா சொல்றீங்க..?"

"கண் எதாவது வலிக்குதா..?"

"இல்லியே..'

"அப்படியே இரு.." என்று கூறி ஒருவன் அவனை நெருங்கி வந்து அவன் கண்ணை உற்று பார்த்தான்

"டேய், உன் கண்ணுல கருப்பு கலர்ல ஏதோ பரவிக்கிட்டே இருக்குடா..?"

பிரவீன் தனது கண்களை கசக்கி கொண்டான்...

"ஹே பிரவீன், போய் கண்ணாடில பாருடா.." என்றான்

பிரவீன் பதறியடித்துப் போய் கண்ணாடியில் பார்த்தான்...

சாதாரணமாகத்தான் இருந்தது... பின்னாலிருந்து நண்பர்கள் சிரித்தார்கள்

"மாப்ளை பயந்துட்டாண்டா..." என்று கோரஸாக கத்தினார்கள்...

அறையே சிரிப்பில் களை கட்டியது...

மாலை அனைவரும் கிராமத்தில் தோப்பு, மலைக்கோயில், சந்தை, ஜல்லிக்கட்டு என உலா வந்தனர். பொழுது சாயும் வரை அன்றைய மாட்டுப் பொங்கல் திருநாளை நண்பர்கள் நன்றாகவே கொண்டாடினர்.

ஆனால்...

அன்று இரவு, அவர்களது கிராமத்து நண்பன், அனைவரையும் ஒரு தென்னந் தோப்புக்கு அழைத்து சென்றான். அங்கே கள்ளத்தனமாக காய்ச்சும் சாராயத்தை அனைவரும் சியர்ஸ் சொல்லி குடித்தனர். பிரவீனுக்கு அது மிகவும் பிடித்து போகவே, அளவுக்கு அதிகமாக குடித்தான்... அதில் அளவுக்கதிகமாக கலக்கப்பட்டிருந்த மெத்தனாலினால் போதையில் மட்டையாகி சுமோவில் ஏறியவன் மறுநாள் காலை சென்னையில் தனது வீட்டில் வந்து இறங்கும்போது... அவனுக்கு விடியல் தெரியவில்லை...

காலில் விழுந்து, அழுது, கெஞ்சி, உண்மையை மறைக்க உடன் வந்த நண்பர்கள் பழியை கங்கண சூரிய கிரகணத்தின் மீது போட்டார்கள்...

Signature

Popular Posts