Friday, August 29, 2014

"ஜம்போ 3D" : புள்ளையார் சுழியுடன் இன்று புதிய ப்ராஜெக்ட்


நண்பர்களுக்கு வணக்கம்... இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... அம்புலி 3D மற்றும் 'ஆ' படத்தை தொடர்ந்து... 'ஜம்போ 3D' என்ற புதிய படத்தை உங்கள் வாழ்த்துக்களுக்கடன்... இன்று இனிதே துவங்குகிறோம்.. 

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, August 10, 2014

'ஆ'மயம் 19 - டிரெய்லர் வெளியீடு

'ஆ' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா RKV ஸ்டுடியோவில் நல்லபடியாக நடந்தேறியது...

டிரெய்லர் இதோ...


அனைத்து ஊடக நண்பர்களுடன் சேர்ந்து, விழாவை சிறப்பிக்க... தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு.கே.ஆர். அவர்கள் வந்திருந்தார்..அவரோடு எங்கள் நலன்விரும்பி 'லஷ்மி மூவி மேக்கர்ஸ்' திரு. சுவாமிநாதன் அவர்கள்... திரு.எம்.எஸ்.பாஸ்கர்... வந்திருந்து வாழ்த்தினர்.. சிறப்பு விருந்தினர்களும், எங்கள் குழுவினர்களும் ஓரிரு வார்த்தைகள் பேச டிரெய்லர் அரங்கேற்றப்பட்டது...

விழாவை நல்லபடியாக ஏற்பாடு செய்து நடத்திக்கொடுத்த.. பி.ஆர்.ஓ. திரு.சுரேஷ் சந்திரா, திரு.அப்துல நாசர் மற்றும் அவரது குழுவினர்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலமாக(வும்) எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவின் முக்கிய தொகுப்பு இதோ...



டிரெய்லரை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... டிரெய்லர் பிடித்திருந்தால்.. டிரெய்லரையும் உங்கள் ஊடகங்களில் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, July 13, 2014

'ஆ'மயம் 18 - மானாட மயிலாட நிகழ்ச்சியில் இன்று 'ஆ' பாடல் வெளியீடு

இன்று 'ஆ' படக்குழுவினருக்கு ஹேப்பி சண்டே.. காரணம், இன்று எங்கள் படத்தின் பாடல் வெளியீடு.. கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் நடக்கவிருக்கிறது...


இந்த நிகழ்ச்சியில் 'ஆ' படத்தின் ஹீரோ கோகுல், ஹீரோயின் மேக்னா, வில்லன் சிம்ஹா, காமெடியன் பாலா, டைரக்டர்க்ள் நான் & நண்பர் ஹரி, கேமிராமேன் சதீஷ், இசை அமைப்பாளர்கள் K வெங்கட் பிரபு ஷங்கர், சாம் CS, கொரியோகிராஃபர் SANDY என்று அனைவரும் குழுவாய் கலந்து கொண்டு உரையாடியுள்ளோம்.

கலா மாஸ்டர், குஷ்பு மற்றும் நமீதா.. மூவரும் இந்நிகழ்ச்சியின் சார்பாக எங்களிடம் படத்தை பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளோம்.

'ஆ' படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. இந்த மூன்று ட்ராக்குக்கும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டேன்ஸ் ப்ர்ஃபாமென்ஸ் நடைபெறும்.. 

நிகழ்ச்சியை பற்றிய ஒரு சின்ன ப்ரொமோ வீடியோ இதோ....


அடுத்த பதிவில் பாடல்களை பற்றிய மேலும் விவரங்களை பகிர்கிறேன்...

(தொடரும்)


Signature

Friday, July 11, 2014

'ஆ'மயம் 17 - இன்று நள்ளிரவு 12 முதல் 'ஆ' ஆடியோ (SINGLES)


'ஆ'  ஒரு ஹாரர் படம் என்பதால்... Themeக்கு ஏற்றபடி சிங்கிள் ட்ராக் வெளியிட்டை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று முடிவானதும்... எப்படி செய்யலாம் என்று ஆளுக்கொரு ஐடியாவை யோசித்து கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் மக்கள் தொடர்பாளர் திரு.சுரேஷ் சந்திரா அவர்கள் ஒரு அருமையான ஐடியாவை கூறினார். நள்ளிரவு 12 மணிக்கு பாட்டை FMல் ஒளிபரப்பலாம் என்றதும், எங்கள் அனைவருக்குள்ளும் 'அடடே' என்று ஒருமித்தமாக பல்பு எரிந்தது... அவர் ஐடியாவை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், அதை செயல்முறைப்படுத்த SURYAN FM-ல் பேசி ஏற்பாடு செய்தும் கொடுத்துவிட்டார்... அதன் பலனாய்.. இதோ இன்று நள்ளிரவு 12 மணிக்கு... பேய்களின் PEAK TIMEல் SINGLES BREAK...



இந்த சிங்கிள்ஸ் பாடலை பற்றி சில விவரங்கள்

'கண்ணாடிதான்டா..'  என்ற இந்த பாடலை எழுதி பாடியவர் 'கானா பாலா'... இன்றைய தேதிக்கு 'கானா பாலா'வை 'உள்ளூர் ஹனி சிங்' என்றே கூறலாம்... அந்தளவுக்கு அவர் சிங்கிள்ஸ் பாடலில்லாத தமிழ்ப்படமே இல்லை... ஆனால் 'ஆ' படத்தில் வழக்கமான காதல் கானாவாக இல்லாமல்... பத்து வருடம் கழித்து சந்திக்கும் பள்ளிக்கால நண்பர்களின் REUNION PARTYயில் பாடப்படும் GET-TOGHETHER GAANAவாக அமைத்திருக்கிறோம்... பள்ளிக்கால நினைவுகளை அலசும் பாடல்வரிகளை அற்புதமாக எழுதிக்கொடுத்து பாடியிருக்கிறார் கானா பாலா...



அடுத்த பதிவில் இந்த பாடல் பற்றிய கூடுதல் விவரங்களை பகிர்கிறேன்...

TRIVIA
கானா பாலா, இந்த பாடல் வரிகளை எழுதி முடித்ததும் தன் பள்ளி நண்பர்களை சந்திக்கும் ஆவல் மிகவும் ஏற்பட்டதாக கூறினார்... இதனால், ஃபோனில் இருக்கும் நம்பரை வைத்து மேலும் சில நம்பரை தேடிப்பிடித்து பள்ளி நண்பர்களோடு ஃபோனில் பேசியதாக கூறினார்...


Signature

Monday, July 07, 2014

'ஆ'மயம் 16 - டீசருக்குள்ளே ஒரு Surprise Gift

'ஆ'மயத்தில் ஜப்பான் படப்பிடிப்பு குறித்த சில சுவாரஸ்யமான அனுபவங்களை என் நினைவுகளுக்கு எட்டியவைர நினைத்து நினைத்து பகிர்ந்திருக்கிறேன்... இன்னும் ஓரிரு அத்தியாயங்களில் ஜப்பான் படப்பிடிப்பு அனுபவங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது அதை தொடர்ந்து வேறு இடங்களில் நடந்த படப்பிடிப்பு அனுபவங்களை தொடர்கிறேன்... அதற்குமுன், 'ஆ' திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர்.. இதோ உங்கள் பார்வைக்கு...


பார்வையாளர்கள் பணிவான கவனத்திற்கு... இந்த டீசர் ட்ரெய்லரை நன்றாக பாருங்கள்.. குறிப்பாக சொல்லப்போனால், ஸ்மார்ட் கண்களுடன் பாருங்கள்... அப்படி பார்ப்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைசான கிஃப்ட் காத்திருக்கிறது...

பார்த்துவிட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. இந்த டீசர் பிடித்திருந்தால்.. உங்களது வலைதளங்களிலும் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Thursday, July 03, 2014

'ஆ'மயம் 15 - Black & White முஸ்தஃபா முஸ்தஃபா



உலகின் வெவ்வேறு மூலையில் வாழ்ந்து வரும் இருவர்... வேலைநிமித்தமாய் சந்தித்துக் கொள்ளும் வெகுசில நாட்களில்... அவர்களுக்குள் ஒரு முஸ்தஃபா முஸ்தஃபா நட்பு ஏற்பட்டு... எங்கள் படக்குழுவினர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்கள். அந்த இருவர்... பாலா & கெஞ்சி (ஜப்பானியர்). இவர்கள் இருவரும் 'ஆ' ஜப்பானிய படப்பிடிப்பின்போது, திக்'கோ திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டார்கள்

காதல் மட்டும்தான் அற்புதமானதா..? காதலில் மட்டும்தான் அற்புதகங்கள் நிகழுமா...? இல்லை.. இது நட்பிலும் நிகழும் என்பதற்கு இந்த ப்ளாக் & வயிட் ஃப்ரெண்ட்ஸ்தான் சாட்சி... இருவருக்கும் மொழி வேறு, நாடு வேறு, கலாச்சாரம் வேறு.. இப்படியிருக்க... ஷூட்டிங்கிற்காக சந்தித்த வெகுசில நாட்களில் இருவரும் இப்படி ஒரு நட்பாய் இருக்கமுடியுமா என்று வாய்பிளக்க வைத்த ஒரு நட்புக்காக கதை...

பாலா கெஞ்சிக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதும்... அவர் இவருக்கு ஜப்பானிய மொழி சொல்லிக்கொடுப்பதும்.. அவர் நடித்த ஷாட்டுக்கு இவர் கைத்தட்டுவதும், இவர் நடித்த ஷாட்டுக்கு அவர் 'சாய்க்கோ' என்று ஜப்பானிய மொழியில் பாராட்டுவதும்.. ப்ரேக் டைமில் இருவரும் இருநாட்டு வளநலங்களை பற்றி பேசி சிலாகித்து கொள்வதும்... நம் நாட்டு ரஜினி ஸ்டைலை பற்றியும், ஜப்பானின் சுத்தம் மற்றும் நேரத்தவறாமை பற்றியும்... என்று இவர்களது நட்பு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டிருந்தது...


கலகலப்பாக போய்க்கொண்டிருந்த அவர்களது நட்புக்கதை... நாங்கள் ஷூட்டிங் முடிந்து ஒரு சின்ன ஃபேர்வெல் பௌலிங் கேம் விளையாடி பிரிந்த போது... இவர்கள் இருவர் மட்டும் விரைவாக விளையாடி முடித்து.. அவர்களுக்கு மட்டுமே புரிந்த அந்த தமிழும் ஜப்பானும் கலந்த மொழியில் நட்பு பாராட்டி வந்தனர்...



பௌலிங் முடிந்து அனைவரும் புகைப்படம் பரிமாறிக்கொண்ட போது... இவர்களது முகம் மட்டும் விட்டுப்பிரியப்போகும் வாட்டத்தை கொண்டிருந்ததை நாங்கள் அனைவரும் காண நேரிட்டது... இருவரும் பிரியும்போது கண்ணீருடன் விடை கொடுத்து கொண்ட அந்த செண்டிமெண்ட் காட்சி இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை... உண்மையில் இந்த நட்புக்கு முன்ஜென்ம முடிச்சு ஏதோ ஒன்று இருக்க வேண்டும்... அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்... இவர்களுக்காகவாவது நாங்கள் மீண்டும் ஜப்பான் போய் படம் எடுத்தால் நன்றாக இருக்குமோ? என்று எங்களை யோசிக்க வைத்த இந்த நட்புக்காக கதை... என்றென்றும் தொடர, இந்திய, ஜப்பானிய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்...

(தொடரும்)


Signature

Friday, June 27, 2014

'ஆ'மயம் 14 - CROCIN என்கிற மசால் தோசை



முதல்முறை கடல் கடந்து வெளியூர் போகும்போது புதிய உணவு வகை, புதிய நீர் என்று சில அசௌகர்யங்கள் ஏற்படுவது வழக்கம்.. அந்த அசௌகர்யங்கள் நாளடைவில் வளர்ந்து, நம்மூரை மிகவும் ஞாபகம் வர செய்து ஜூரமாய் வெளிப்பட்டு விடும். அதே போலத்தான், 'ஆ' படத்தில் 'சிங்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த பாலா'வுக்கும் ஜப்பான் பயணம் மேற்கொண்டதும், முதலில் குதூகலமாய் இருந்தாலும், ஓரிரு நாளிலேயே மேற்சொன்ன ஜூரம் தொற்றிக்கொண்டது.

அப்படி ஒன்றும் கடுமையான ஜூரம் இல்லை.. ஆனால், மருந்து கொடுத்தாலும் தீராத வகையான ஜூரம்... ஷூட்டிங் என்னமோ பாதிப்பில்லாமல் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.. ஷெட்யூல்படி ஒரேயொரு காட்சியில் மட்டும் பாலாவை நடிக்கவைக்கமுடியாமல் போனது... அவரில்லாத அந்த காட்சியில்... 'அவனுக்கு ஜூரம்டா... சுஷூ* சாப்பிட்டு சுருண்டு படுத்துட்டான்..' என்று டைலாக் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தது..  இனி எப்படி சமாளிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தோம்.

எங்களது ஜப்பான் ஷூட்டிங்கிற்கு உதவிய திரு.ஹரி நாராயண் அவர்களின் GOVINDA'S RESTAURANTக்கு சென்றிருந்தோம்... அது ஜப்பானில் அரிதாக கிடைக்கக்கூடிய PURE VEGETARIAN வகைகளில் மிகவும் பிரசித்தமான INDIAN RESTAURANT அங்கு நம்மூர் மசால் தோசையை சுடசுட  கொண்டு வந்து பாலாவின் முன்னால் வைத்ததுதான்... பாலாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது பாருங்கள்... ஆனானப்பட்ட மருந்து மாத்திரையில் குணமாகாத ஜூரத்தை ஒரு மசால் தோசை போக்கியது... அந்த மசால் தோசை புண்ணியத்தால் ஷூட்டிங் மேலும் சிறப்பாக தொடர்ந்தது...


'இது மசால் தோசையல்ல... என் ஜூரத்தை போக்க வந்த CROCIN' என்று பாலா சொன்னது இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை.. 

பிறகென்ன, ரெகுலராக நாங்கள் அங்கேயே சாப்பிட ஆரம்பித்தோம் என்று சொல்லித்தானா தெரியவேண்டும்...

(தொடரும்)

---------------------
* Sushi - ஜப்பான் டிஷ்


Signature

Wednesday, June 25, 2014

'ஆ'மயம் 13 - உலகம் சுற்றும் வாலிபன்



எக்சாம் எழுதும்போது அடிஷனல் ஷீட் வாங்கி பார்த்திருக்கிறேன்.. 'ஆ' படத்தின் கதைநாயகன் கோகுல் தனது பாஸ்போர்ட் புக்-கில் அடிஷனல் புக் வாங்கி வைத்திருப்பவர்... அந்தளவுக்கு உலகத்தில் பல ஊர் சுற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். இவரை உலக சுற்றும் வாலிபன் என்று சொல்வது சாலப்பொருந்தும்.  எங்கள் குழுவில் இவருடன் எப்போது ஃபோன் பேசினாலும், 'இந்தியாவுல இருக்கீங்களா..?' என்றுதான் பரிகசித்துதான் பேச ஆரம்பிப்போம்...

Gokul

இவர் இதற்கு முன்னமே நான்கு முறை ஜப்பானிற்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இவரும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஜப்பானில் நிகழ்ச்சி நடத்திய வரலாறும் உண்டு என்று தெரிந்தது.. இதனால், கோகுலுக்கு அந்த ஊரில் ரசிகர்கள் அதிகம்... நம்மூர் தமிழ் மக்கள் மட்டுமின்றி, அந்த ஊர் நேட்டிவ் ஜப்பானிய மக்களிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு என்று அங்கு சென்றபோதுதான் பார்க்க முடிந்தது...

Aaaah Team Nori & Tamami

கோகுல் ஜப்பான் வந்திருப்பது தெரிந்து, அதுவும் ஷூட்டிங் செய்ய வந்திருப்பது தெரிந்து, பல பேர் (ஜப்பானியர்கள் உட்பட) வெகு தூரத்திலிருந்து வந்து அவரை பார்த்து பேசி வாழ்த்திவிட்டு செல்வது தினமும் நடந்து கொண்டிருந்தது. அதில் குறிப்பானவர்... தமாமி  மற்றும் நோரி என்ற ஜப்பானிய நண்பர்கள்... இவர்கள் நம்மூர் கணக்குப்படி சுமார் செங்கல்பட்டு அளவு தூரத்திலிருந்து  அவர்கள் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு வந்து அவரிடம் பேசி வாழ்த்திவிட்டு ஃபோட்டோவெல்லாம் எடுத்து கொண்டு சென்றது ஆச்சர்யமாக இருந்தது.

During Hat Mime Performance

இதுமட்டுமின்றி, நாங்கள் ஜப்பானியர்களோடு ஷூட் செய்துக்கொண்டிருக்கும்போது, ஷூட்டிங் இடைவேளையில் இவரது ஃபேமஸ் மைமிங்கான 'ஹேட் மைம்' செய்து காட்டினார்.. அதை பார்த்த மாத்திரத்திலிருந்து, அங்கிருந்த நடிகர்கள் 12 பேரும் இவருக்கு புது ரசிகர்களாகிவிட்டார்கள். Proud to be his friend...

(தொடரும்)


Signature

Monday, June 23, 2014

'ஆ'மயம் 12 - பேய் பயம்


படத்தில் நடிக்க வந்த ஜப்பானியர்களிடம்.. முறையே வணக்கம் வைத்து அவர்களுடன் நடிப்பதற்கு முன் சற்றே கலந்துரையாடினோம்... யார் முதலில் பேசுவது என்று இருந்த தயக்கத்தை நான் உடைத்தேன்.. 'அனைவருக்கும் கொனிச்சிவ்வா...' (வணக்கம்) என்றேன்... அவர்கள் அனைவரும் அவர்கள் முறைப்படி குனிந்து வணக்கம் வைத்தார்கள்...

அடுத்ததாக, 'நீங்கள் நடிக்கப்போவது ஹாரர் படம்' என்று கூற... கொல்லென்று சிரித்தார்கள். எங்களுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது... ஒரு பெண் நடிகை எங்களிடம் ஜப்பான் மொழியில் ஏதோ சொல்ல... அது புரியாமல் நாங்கள் பேய் முழி முழிக்க... உடன் இருந்த நண்பர் திரு.கௌரி ஷங்கர்.. மொழிப்பெயர்த்தார்... அவர்களில் பலருக்கு பேய் என்றால் பயங்கர பயமாம்... அவர்கள் இதுவரை முழுதாக எந்த ஹாரர் படத்தையும் பார்த்ததில்லையாம்... இடையிடையே கண்கள் மூடிக்கொள்வார்களாம்... அட பெண்கள்தான் அப்படி என்றால், கூட நடித்த ஆண்களும் அதையேத்தான் கூறினார்கள்.


ஜப்பானில் ஹாரர் படங்கள் ஃபேமஸ் என்றுதானே  இவ்வளவு தூரம் வந்து படமாக்க விரும்பினோம்.. இப்படி வந்தவர்கள் பயந்தால் எப்படி..? என்று முழித்திருக்க... 'கோழி குருடா இருந்தா என்ன..? குழம்பு ருசியா இருந்தா சரி..' என்ற கவுண்டர் தியரிப்படி, 'நடிகர்களுக்கு பயம் இருந்தால் என்ன... பார்ப்பவர்களுக்கு பயம் வந்தால் சரி...' என்று ஷூட்டிங்-ஐ தொடர்ந்தோம்... அவர்களது பேய் பயம் திரையில் தெரியும்படி நன்றாக நடித்து கொடுத்ததால், அவுட்புட்-ல் ஆல் இஸ் வெல்... அது போதுமே..!!!

குறிப்பாக, பேபி மியாபி என்ற குட்டிப்பெண் பேயைக்கண்டு பயப்படுவது போலவும்... பிறகு அவளே (சாரி.. கதை சொல்லக்கூடாது) அசத்தினாள்.. இரவு ஷூட்டிங்கில் தூங்காமல் நடித்து கொடுத்த அந்த பேபி மியாபி, சென்றமுறை அம்புலியில் நடித்த 'நான் கடவுள்' ராஜேந்திரன் கதாபாத்திரத்தின் மகளாக வரும் செவ்வந்தி (பேபி ப்ரியா) கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தினாள்...

(தொடரும்)


Signature

Thursday, June 19, 2014

'ஆ'மயம் 11 - நடுக்கம்


ஜப்பான் என்றால் எது ஃபேமசோ இல்லையோ நில நடுக்கம் பூகம்பம் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மிகவும் ஃபேமஸ். நாங்கள் ஷூட் செய்தபோது பெரிய அளவில் இல்லை என்றாலும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் மட்டும் நடந்தது...


ஜப்பானில் ஒரு வீட்டில் ஷூட்டிங் செய்துக்கொண்டிருந்தோம். அந்த வீட்டின் நடுவே அழகாக ஒரு மினி விளக்கு அமைக்கபட்டிருந்தது... அந்த காட்சி ஷூட் செய்து முடித்ததும். அந்த வீட்டு ஓனர் திரு.முரளி மற்றும் திருமதி. வள்ளி முரளி அவர்கள், இப்போது ஒரு சின்ன நிலநடுக்கம் வந்து சென்றது என்று பேசிக்கொண்டனர்..

எங்களுக்கு உடனே 2012, DAY AFTER TOMORROW போன்ற விஷூவல்கள் உள்ளுக்குள் தோன்றி கிலியை ஏற்படுத்த... முகத்தை மட்டும் தைரியமாக வைத்துக் கொண்டு, 'எங்களுக்கு எதுவுமே நிலநடுக்கம் தெரியவில்லையே' என்று கேட்டதற்கு, ஜப்பானில் உள்ள பெரும்பாலான வீடுகள் நிலநடுக்கத்தையும், பூகம்பத்தையும் தாங்கும்படியாய் விசேஷ அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால் நடுக்கம் ஏற்படும் போது நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாது என்று கூறினார்.

பின்னே எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, நாங்கள் ஷூட் செய்த வீட்டின் நடுவே தொங்கும் அந்த விளக்கில் ஒரு சின்ன செயின் தொங்கிக் கொண்டிருந்தது.. (லைட் ஸ்விட்ச்தான்) அந்த செயின் ஆடினால், நிலம் நடுங்கி கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம்.

செயின் தெரிகிறதா..? 























நிலநடுக்கத்தையும்,  பூகம்பத்தையும், இன்னபிற இயற்கை சீற்றங்களையும் அறிய எத்தனையோ வகையிருக்கிறதில்லையா... அதுபோலதான் இதுவும்.. என்று கூறினர்.. அனைவரும் அந்த செயினையே கொஞ்ச நேரம் சத்தமின்றி பார்த்துக் கொண்டிருந்தோம்.. அது மெல்ல ஆடுவது போலவே எங்களுக்கு தெரிந்து கொண்டிருந்தது...

அந்த ஹாலில் அடுத்து கேட்ட சத்தம்... 'பேக் அப்'


Signature

Saturday, June 14, 2014

'ஆ'மயம் 10 - சினிமா (எ) சாத்தான்காரர்கள்


ஜப்பானில் ஸ்டுடியோவில் பெரும்பாலும் இரவு நேர ஷூட்டிங்தான் போய்க்கொண்டிருந்தது... சீர் என்றால் அப்படி ஒரு சீரான அமைப்பு அந்த ஸ்டுடியோ க்ரியேச்சூரில். இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரை ஃப்ளோர் எங்கள் வசம். இரவு 10:55க்குதான் ஃப்ளோர் சாவி கையில் கொடுக்கப்படும்... உள்ளே செல்லும்போது, நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கும் பொருட்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. குண்டூசியானாலும் சரி, X-Ray Machine ஆனாலும் சரி, புத்தர் சிலையானாலும் சரி... அது எவ்விடத்திலிருக்கிறதோ அதை ஃபோட்டோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காலை மீண்டும் ஃப்ளோரை ஒப்படைக்கும்பொழுது.. அந்தந்த பொருட்களை அதே இடத்தில் (ஃபோட்டோவை பார்த்து) அடுக்கி வைத்துவிட்டு.. சுத்தமாக அறையை காலி செய்து 7:55க்கு சாவியை திருப்பி கொடுத்துவிட வேண்டும். இதில் கொஞ்சம் பிசகினாலும், வாடகை கூட்டப்படும், பொருட்களின் சேதாரத்திற்கேற்ப ஃபைன் போடப்படும்.

FUMIKO MASE

இந்த விதிமுறைகள் எல்லாம் பயமுறுத்துவதற்காக அல்ல... வேலை சுத்தமாக இருக்க மட்டுமே.. எனவே இதை பின்பற்றுவதில் தவறொன்றுமில்லை.. காரணம், நாங்கள் சென்னையில் ஒரு பிரதான பகுதியில் இருக்கும் ஒரு ஸ்கூலை ஷூட்டிங்கிற்கு கேட்டபோது, சினிமாக்காரர்கள் எல்லாம் சாத்தான்கள்.. அவர்களுக்கு ஸ்கூல் கொடுக்கூடாது.. என்று கூறினார்கள். எங்களுக்கு அவமானமாகிவிட்டது.. ஏன் இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்க, ஏற்கனவே அந்த ஸ்கூலை ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஷூட்டிங்கிற்கு கொடுக்கவும், அவர்கள் ஷூட்டிங் நடத்தியபோது, அவ்விடத்தை போதுமானளவிற்கு சேதாரம் விளைவித்து, அசுத்தம் செய்துவிட்டு போயிருப்பதே இவர்களின் சாத்தான் பயத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படது. எனவே, மேலே சொன்ன விதிமுறைகள் ஒருவகையில் நம்மை சாத்தானாக்காமல் காப்பாறும் வல்லமை படைத்தது...

Knock Knock - Its a wrong Door
நாங்கள் புக் செய்திருந்த ஃப்ளோர் அந்த பில்டிங்கின் கடைசி மாடிக்கு ஒரு அடுக்கு கீழே இருந்தது... எங்கள் கேமிராமேன் இரவு இடைவேளையில் சுமார் 2:30 மணிக்கு ப்ரேக் முடித்துவிட்டு ஷூட்டிங் ஃப்ளோர்தான் என்று தப்பாக நினைத்து ஏதோ ஒரு ஃப்ளோரை தட்ட.. அறைக்கதவை ஒரு சுமோ மனிதர் (ஜப்பானிய மல்யுத்த குண்டு வீரர்) திறந்திருக்கிறார்.


அவர் கண்களில் அப்படி ஒரு தூக்கம கலைந்த கோபம் கொப்பளித்திருக்கிறது. 'என்ன' என்று கேட்க.. சதீஷ் (கேமிராமேன்) பணிவாக ஷூட்டிங் என்று கூறியிருக்கிறார். அவர், 'ஸ்டுடியோ கீழே' என்று கோபமாக கைகாட்டிவிட்டு கதவை படார் என்று கோபத்துடன் சாத்திவிட்டு ஏதோ புலம்பியபடி போயிருக்கிறார்... ஒரு நிமிடம் அவர் தன்னை தொடைபிடித்து தூக்கி மல்யுத்த ஸ்டைலில் படிகளில் உருட்டிவிட்டுவிடுவாரோ என்று பயந்ததாக பிறகு சதீஷ் தெரிவித்தார்...

Image Courtesy : http://www.akiodesigns.com

(தொடரும்)


Signature

Thursday, June 12, 2014

'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்



ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்று ஒரு ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் தங்குமிடத்திலிருந்து 1.30 மணி நேரம் பயணித்து ஸ்டுடியோ சென்றடையவேண்டும். சென்றோம். ஏற்கனவே, இமெயில் மூலம் இந்தியாவிலிருந்தபடியே ஜப்பானிய நடிகர்களுக்கான தேர்வு நடத்தியிருந்ததால் சிரமம் இருக்கவில்லை... 

இந்தியாவிலிருந்து நாங்கள் கிளம்பும்போதே திரு.ஹரி நாராயண் சொல்லியிருந்த முக்கியமான வாக்கியமே அங்கும் எங்களுக்கு தெரிவிக்கபட்டது. அதென்னவென்றால்... ஜப்பானியர்கள்... PUNCTUALITYக்கு மிகவும் பெயர் போனவர்கள்... அதனால், எக்காரணத்தைக் கொண்டும், ஜப்பானியர்களுடன் பழகும்போது, காலதாமதம் என்ற ஒன்றை அடியோடு மறந்துவிடவேண்டும் என்று கூறினார்கள்.. அது 100% உண்மை... நாங்கள் ஸ்டுடியோ சென்றடைவதற்கு 15 நிமிடம் முன்னாலேயே ஜப்பானிய நடிகர்கள் அனைவரும் அங்கு ஆஜர்... 

எங்களது ஜப்பானிய நடிகர்கள் அனைவரும் ஒரு தியேட்டர் குரூப்பை சேர்ந்தவர்கள்... சிரித்த முகத்தோடு எங்களை அவர்கள் பாணியில் வரவேற்றார்கள்... ஃபுமிகோ, ஆயாகோ, ஷிராகா, சாக்யோ, பேபி மியாபி, யூகி, etc. என்று அனைவரோடும் நடந்தேறிய பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு, ஸ்டுடியோவிற்குள் நுழைந்தோம்... ஸ்டுடியோ இரவு 11 மணியிலிருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்ததால், 10.55க்கு எங்களுக்கான ஃப்ளோரின் சாவி கொடுக்கப்பட்டது... உள்நுழைந்தோம்... எங்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த ஹாஸ்பிட்டல் செட்-அப்-ஐ பார்த்து... பணியை துவங்கினோம்... நடிகர்களுடன் அவர்களோடு கதையைப் பற்றி கலந்துரையாடினோம். ஜப்பானிய மொழியில் எங்களுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் திரு.கௌரி ஷங்கர் மற்றும் திரு.மனோஜ் உதவினர்...

ஜப்பான் நண்பர்களுடன்...

இந்த இடத்தில் நடந்த ஒரு ஹாஸ்யத்தை சொல்ல வேண்டும்

ஷூட்டிங் நடுவே ப்ரேக்கின் போது... நானும் ஹரியும் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி ஏதாவது குடிக்க அந்த ஊர் காஃபி டீ கிடைக்குமா என்று அலைந்து ஒரு சூப்பர் மார்கெட்டிற்குள் நுழைந்தோம்... ஒரே ஒரு நபர்தான் இருந்தார்.. அங்கு ஹாட் காஃபியை வாங்கிக்கொண்டு கேமிராமேன் சதீஷூக்கு ஃபோன் செய்ய... அவர் தனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வருமாறு கூறினார்... ஆனால் ஸ்ட்ரிக்டாக வெஜிடேரியன் ஐட்டம்தான் வேண்டும் என்று கேட்க... அந்த கடைக்காரரிடம்  வெஜிடபிள் பர்கர் கேட்டோம்.. அவர் நடந்து சென்று ஒரு அலமாறியிலிருந்து பர்கரை எடுத்து எங்களுக்கு குனிந்தபடி பணிவோடு கொடுத்தார்... அதை உற்றுப்பார்க்க.. அதில் இறைச்சி இருப்பது தெரிந்தது... 'இது என்ன என்று கேட்டேன்..' 'அது பன்றி இறைச்சி' என்றார்... 'நான் உங்களிடம் வெஜிட்டபிள் பர்கர்தானே கேட்டேன்' என்று கூற... அந்த இறைச்சியோடு சேர்ந்து ஒட்டப்பட்டிருக்கும் கோஸ் கேரட் இத்யாதிகளை காட்டி 'இதோ இதில் வெஜிடபிளும் இருக்கிறதே' என்றார்... 'நோ தேங்க்ஸ்' என்று அவருக்கு புரியாத ஆங்கிலத்தில் கூறிவிட்டு... வெளியேறினோம்... இதை கேமிராமேனிடம் கூற... அவர் ஏக்கப்பெருமூச்சு விட்டதை பார்த்து, அருகில் இருந்த கேமிரா அசிஸ்டெண்ட் மணிகண்டன் இந்தாங்க இதை சாப்பிடுங்க என்று தனது சிப்ஸ் பேக்கெட்-ஐ நீட்டினார்... ஒருவழியாக வெஜிட்டேரியனில் ஏதோ ஒன்று கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் இருவரும் அதை சாப்பிட்டு கொள்ள மீண்டும் ஷூட்டிங்-ஐ தொடர்ந்தோம்.. அடுத்த நாள் அந்த சிப்ஸ்... ஃபிஷ் ஆயிலில் செய்யப்பட்டது என்று தெரிந்தது... :)

(தொடரும்)


Signature

Saturday, June 07, 2014

'ஆ'மயம் 08 - Video Blog Episode 01 : Tokyo Diary

'ஆ' திரைப்படத்தின் மேக்கிங் போது எடுத்த சின்ன சின்ன வீடியோக்கள், வீடியோ பதிவாய் இதோ உங்கள் பார்வைக்கு

Episode 01 - Tokyo Diary


அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Friday, June 06, 2014

'ஆ'மயம் 07 - ஆ கதைகள் 1, 2 & 3

டிஸ்கி : 'ஆ' ப்ரொமோஷனுக்காக எழுதப்பட்ட குட்டிக்கதைகள். இந்த கதைகளுக்கும், படத்தின் கதைக்கும் திகிலைத்தவிர எந்த சம்மந்தமும் கிடையாது...

ஏற்கனவே 'ஓர் இரவு' பப்ளிசிட்டியின் போது 'ஓர் இரவு கதைகள்' என்று குட்டி குட்டி ஹாரர் கதையை முயன்றிருந்தேன்... இருப்பினும்.. முயற்சிக்கு Expiry Date கிடையாது என்பதால்.. மீண்டும் அதே குட்டி குட்டி ஹாரர் கதை முயற்சி... இந்த 'ஆ' கதைகள்



கதை #01 : 666

பென்னி அன்று மிகவும் சந்தோஷமாய் இருந்தான்.. 6 மாதம் முன்பு புக் செய்திருந்த அவனது பைக் இன்று எந்த நிமிடமும் டெலிவரி செய்யப்படும்...

டைம் பார்த்தான்... 6 மணி அடிக்க இன்னும் 6 நிமிடம் இருந்தது...

நேரத்தை போக்குவதற்காக... FACEBOOK திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்... அதில் ஒரு ஹாரர் திரைப்படத்தின் புகைப்பட பகிர்வு இருந்தது. அதில், 666 என்ற சாத்தானின் எண் பற்றிய குறிப்புகள் இருந்தது... அந்த புகைப்படத்தை குறைந்தபட்சம் 6 பேருக்காவது பகிர வேண்டும் என்றும்.. இல்லாத பட்சத்தில்... அந்த சாத்தான் எண் பேய்வடிவம் கொண்டு இதை படிக்கும் நபரை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும்... எச்சரிக்கை இருந்தது... பென்னி சிரித்தான்... Close செய்தான்... திடீரென்று பின்னாலிருந்து டங் டங் என்ற கடிகார பெல்.. 6 முறை ஒலித்து அடங்கியது... பயத்துடன் திரும்பி கடிகாரத்தை பார்த்தான்... அதில் 666 என்றிருந்தது... '6 மணி',' 6ஆம் தேதி', '6 மணி' என்று தெரிந்தது... ஏதோ ஒரு வித பயுணர்வு அவனுள் உழன்றது... ஒரு சின்ன இடைவெளியில் தன்னைத்தானே சுதாரித்து கொண்டு மீண்டும் Facebookல் தனது GirlFriendடன் Chat செய்ய விரும்பி அவளுக்கு செய்தி அனுப்பினான்.. அப்போது, பின்னாலிருந்து காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது...

சந்தோஷத்துடன் ஓடி சென்று கதவை திறக்க... அவன் எதிர்ப்பார்த்து காத்திருந்த புது பைக் டெலிவரி ஆனது... அதை மகிழ்ச்சியுடன் சுற்றி சுற்றி பார்த்து சிலாகித்துக்கொண்டான்... முடிவாய் பென்னி பார்த்த ஒருவிஷயம் அவனை கலவரமடைய வைத்தது... அது... வண்டியின் நம்பர் ப்ளேட்... "TN 20 EV 6666" என்றிருந்தது...

பென்னி, "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

கதை #02 ; பரிசு

அந்த மலைதேசத்து வளைவுப்பாதையில்... அடிக்கும் பேய்மழையை பொருட்படுத்தாமல் முகில்-ன் கார் வேகமாக போய்க்கொண்டிருந்தது...

காருக்குள் இயங்கும் ஏசி-யையும் தாண்டி முகில்-க்கு வியர்த்துக் கொண்டிருந்தது...

தனது மனைவிக்கு Surprise Birthday Giftஆக கொடுப்பதற்காக வாங்கிய அதே காரில், அவளது பிணத்தை ஏற்றி செல்வான் என்று அவன் எள்ளளவும் நினைத்து பார்க்கவில்லை...

என்ன செய்ய.. விதி... விளையாடியது..

பிறந்தநாளதுவுமாக அவளுக்கு கிஃப்ட் கொடுக்க surpriseஆக அவன் வீட்டுக்குள் நுழைய... அவளது துரோகம் கண்முன்னே... முகிலுக்கு தெரியவர... ஷண நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது...

விளைவு... பின்சீட்டில் அவள் பிணம்...

துரோகம்... ஆத்திரம்... ஏமாற்றம் என்று மாறி மாறி அவனுள் கோபம் பொங்கி கொண்டிருக்க... ஒரு ஓரமாய் அவள் மீது கொண்டிருந்த காதல் வலித்தது.. அவளை மிகவும் Miss செய்வதாய் உணர்ந்தான்... திடீரென்று அவன் மனதில் ஒரு Vibration... மொபைல் ஒலித்தது... வண்டி ஓட்டியபடி எடுத்து பார்த்தான்...

அவன் மனைவி நம்பரிலிருந்து... 'ONE SMS RECEIVED' என்று தெரிந்தது...

அவள் பிணத்தை காரில் புதைக்கும்போது... அவள் மொபைலையும் உள்ளே வைத்து கட்டியது நினைவுக்கு வந்தது... பிறகு எப்படி..?

குழப்பத்துடன் SMSஐ படித்தான்...

"MISS YOU TOO DARLING... JOINE ME" (தமிழாக்கம்... உன்னை பிரியமுடியாது கண்ணா... நீயும் என்னுடன் சேர்ந்துவிடு) என்றிருந்தது..

பயத்துடன் மெல்ல.. நிமிர்ந்து காரின் மேலிருக்கும் Rear View கண்ணாடியை பார்த்தான்

அதில் கோரமாய் அவன் மனைவியின் பிணம் அவனையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

கதை #03 : எனக்கு பிடித்த புக் (மீள்பதிவு)

புத்தகங்களைவிட தூசி அதிகம் படிந்திருந்த அந்த பழைய புத்தக கடைக்குள் ரவி நுழைந்தான்...
வெகுநேரமாய் அங்குமிங்கும் தேடியபடி இருந்தவனை நோக்கி கடைக்காரர் வந்தார்...

ரவி அவனிடம், "ஏதாவது திகில் கதை நாவல் இருக்கா..?" என்று கேட்க

கடைக்காரன் ஒருவித மர்ம சிரிப்புடன் மேல் அலமாறியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து கொடுத்தான்

ரவி அதை ஆர்வத்துடன் பார்த்தபடி, 'இந்த புக்.. நல்லா திகிலா இருக்குமா..?"

கடைக்காரன், "நானே பலமுறை படிச்சி பயந்துருக்கேன் சார்.."

ரவி ஏளனமாக சிரித்தபடி "ஹாஹ்ஹா... அப்படியா.. அப்படி எத்தனைவாட்டி படிச்சி பயந்திருக்கீங்க..?" என்று கூற

"சாகுறதுக்கு முன்னாடி 4 தடவை.. செத்ததுக்கப்புறம் 3 தடவை படிச்சிருக்கேன்" என்று கூறியபடி வெளிச்சத்திற்கு வர, புத்தக கடைக்காரன் கண்கள் இருக்குமிடத்தில் வெற்றிடமாய் இருந்தது...

ரவி, "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

(தொடரும்)

Image Courtesy : http://wilsonkhoo.wordpress.com


Signature

Wednesday, June 04, 2014

'ஆ'மயம் 06 - ஜப்பான்ல கூப்டாக


ஜப்பான் என்றதும் எனக்கு 'ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக..' என்ற கோவை சரளா அவர்களின் குரல்தான் நினைவுக்கு வரும்.. தமிழ் சினிமாவில் ஜப்பான் என்றால் கல்யாணராமன் படத்தில் .தெத்துப்பல்லோடு கமல்ஹாசன் கண்முன் தெரிவார்... ஹாரர் படம் என்று  வந்துவிட்டால் எனது டாப் 10 ஹாரர் பட வரிசையில் ரிங்கூ (பிறகு ஆங்கிலப்படமாக ரீமேக்கபட்ட The Ring) என்ற படம்  நினைவுக்கு வரும். அந்த படத்தை தொடர்ந்து நான் பார்த்த பல ஜப்பானிய ஹாரர் படங்கள் கண்முன் வந்து செல்லும். அப்படி ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த J-Horror வகை படங்கள் எடுக்கப்பட்ட இடத்தில் நாமும் ஒரு ஹாரர் படத்தை எடுக்க வேண்டும் என்று செய்த முயற்சியின் விளைவாய் அமைந்தது எங்கள் ஜப்பான் பயணம்.  

'ஆ' படத்தின் ஒரு காட்சிப்படம்

இந்த முயற்சிக்கு எங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்தவர் MSG Groups நிறுவனர் திரு.ஹரி நாராயண் அவர்கள். ஜப்பான் தமிழ் சங்கத்தின் சார்பாக இவர் ஏற்கனவே கோகுல்-ஐ வைத்து பல கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார. இதனால், கோகுலின் ரசிகர்கள் ஜப்பானில் அதிகம். அதில் ஹரி சாரும் ஒருவர். அவர் கோகுல் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால், அவரது வளர்ச்சிக்கு என்னால் முடிந்தமட்டும் உதவி செய்கிறேன் என்று கூறி.. சொல்லிய வண்ணம் செயல்படுத்தி காட்டினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடினமாக கிடைத்த ஜப்பான் படப்பிடிப்பு பர்மிஷன் மற்றும் விசாவிற்கு பிறகு, ஒரு நன்னாளில் ஜப்பானில் தரையிறங்கினோம்... அமைதியாக இயங்கும் ஏர்போட்டிலிருந்து வெளிவந்ததும் நண்பர் திரு.கௌரி ஷங்கர், திரு. முரளி, திரு. கார்த்திக் & விக்கி என்று ஜப்பானிய தமிழ் சங்க நண்பர்கள் எங்ளை குடும்பத்தினராய் பாவித்து வரவேற்றனர். அதுவும் கோகுலை கண்டதும், அவர்கள் குதூகலமடைந்து பேசி பழகியது, அவரது முந்தைய கலைநிகழ்ச்சிகளின் வெற்றியை பறைசாற்றியது.

அருமையான க்ளைமேட்டில் ஒரு சிறு பயணத்தில் எங்கள் தங்குமிடத்திற்கு வந்தடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த பில்டிங்-ன் பால்கனியிலிருந்து பார்த்தால் சீரான 'அராகாவா' நதியோட்டம் என்று ரம்யமான ஒரு சூழல். ஒரு பரபரப்பான சிட்டிக்கு நடுவே ஒரு அமைதியாய் ஓடும் ஆறு பார்க்க அவ்வளவு அழகு... ஒருவேளை சென்னையில் கூவம் சுத்தமாக இருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று குழப்பத்தோடு அன்றிரவு உறங்கினேன்.

அடுத்த நாளிலிருந்து பரபரப்பாக எங்களது ஷூட்டிங் வேலைகளை துவக்க ஆரம்பித்தோம். ஷூட்டிங் நடத்த வேண்டிய இடங்கள், தேர்வு செய்திருந்த ஜப்பானிய நடிகர்களோடு சந்திப்பு.. அவர்களோடு கதையாலோசனை என்று எங்களது வேலை துவங்கியபோதும், நாங்கள் பயணப்பட்ட இடத்தில் ஜப்பானின் சில அதிசய பழக்கவழக்கங்களை காண நேரிட்டது.. அதில் முக்கியமாக பலர் சைக்கிள் ஓட்டி செல்வதை காண நேர்ந்தது.. கோட் சூட் என்று அணிந்து ஒரு ஆபிசராய் தெரியும் நபர் கூட, கூச்சப்படாமல்(?) சைக்கிள் ஓட்டி செல்கிறார்... சைக்கிள் ஜப்பானில் கொண்டாடப்படுவது தெரிந்தது... அவர்களின் இளமையான தோற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருக்க வேண்டும்.



நாங்கள் ஷூட்டிங்கிற்காக கேட்டிருந்த ஒரு ஹாஸ்பிடல் கடைசி நேரத்தில் பர்மிஷன் இல்லாமல் மறுக்கப்பட்டது. காரணம், ஒரே ஒரு கடைசி பேஷண்ட் இருக்கும்வரையிலும் அந்த ஹாஸ்பிட்டல் ஷூட்டிங்கிற்கு வழங்கப்படக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் என்றார்கள்...

(தொடரும்)



Signature

Monday, June 02, 2014

www.aaaahmovie.com : Aaaah Movie's Website Launched

Hello Friends,

Happy to announce that we have launched "Aaaah" film's official website.

URL : www.aaaahmovie.com

Please visit the site for more updates about the film.

More things are awaiting to be unveiled. Stay tuned...

Regards
HARESH NARAYAN


Signature

Tuesday, May 27, 2014

'ஆ'மயம் 05 - 'ஆ' படத்தின் DIGITAL MOTION POSTER


இந்த MOTION POSTER (MOSTER என்றும் சொல்கிறார்கள்) என்ற கான்செப்ட் சில வருடங்களுக்கு முன்பு TERMINATOR SALVATION என்ற படத்திற்கு செய்து வெளியிட்டிருந்தார்கள்.. (அதற்கு முன்பே பல படங்களுக்கு வந்திருந்தாலும் நான் முதலில் பார்த்தது இதுதான்) அது பார்த்த மாத்திரத்தில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் உயிரோடு அசைவுடன் + இசையுடன் இருந்தால் எப்படியிருக்கும்.. அதுதான் மோஷன் போஸ்டர்கள்...

ஒரு படத்தின் டீசர் கொடுக்க வேண்டிய விளைவை கிட்டத்தட்ட இந்த மோஷன் போஸ்டர்கள் கொடுத்துவிடுகின்றது... ஒரு நாவலின் மிக சுவாரஸ்யமான வரிகளை கோடிட்டு காட்டுவது போல், ஒரு படத்தின் சரியான Mood-னை வெளிப்படுத்த.. இந்த மோஸ்டர்கள் உபயோகப்படுகின்றன...

வருங்காலங்களில் இது போன்ற மோஷன் போஸ்டர்கள் டிஜிட்டல் பேனர்களாய் பொது இடங்களில் மாட்டப்படலாம்.. அப்போது, பார்ப்பதற்கு 'ஹாரி பார்ட்டர்' படத்தில் வரும் அசையும் புகைப்படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதுபோல் தோன்றலாம்..

ஏற்கனவே அம்புலியில் இதை முயன்றிருந்தோம்.. தமிழில் வெகு சில படங்களுக்கே இந்த DMP (DIGITAL MOTION POSTER) வெளியானது... சட்டென நினைவுக்கு வருவது... ஏழாம் அறிவு, நண்பன், சமீபத்தில், விடியும்முன் போன்ற படங்களின் Motion Posters'தான்...

இதோ.. .'ஆ' படத்தின் முதல் Motion Poster.. படத்தின் தீம் மியூசிக்கின் பின்னனியுடன்...
#Aaaah Digital Motion Poster 001

'ஆ' படத்தில் வரும் ஐந்து கதைக்கும் தனித்தனியே மோஷன் போ்ஸ்டர் செய்து வெளியிட உத்தேசம்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Monday, May 26, 2014

"ஆ"மயம் 04 - அடுத்த படம் பற்றிய முன்னறிவிப்பு


'ஆ' படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்ததுமே, நண்பர்கள் சிலர், "முதல் படம் 'அம்புலி' அடுத்த படம் 'ஆ' என்று நீங்கள் அகரவரிசைப்படி தலைப்பு வைத்துவருகிறீர்கள்... சூப்பர்..." என்று வாழ்த்தினர்... அப்போதுதான், எங்களுக்கே தெரியாமல், அகர வரிசையில் எங்கள் படங்களின் தலைப்புகள் அமைந்திருப்பது தோன்றியது. ஆனால், உண்மையில் அகரவரிசைப்படி வைக்கவேண்டும் என்று வைக்கவில்லை.. காரணம், ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது என்பதே ஒரு பெரிய வேலை... அதுவும், ஏற்கனவே தலைப்பு வைப்பதற்கு சில எழுதப்படாத விதிகள் சினிமாவில் உண்டு...

1. பாசிடிவ் டைட்டிலாக இருக்க வேண்டும்
2. கதைக்கு சம்மந்தப்பட்ட டைட்டிலாக இருக்க வேண்டும்
3. எல்லா வயது மக்களுக்கும் பிடிக்கும்படியும், வாயில் சுலபமாக நுழையும்படியும் இருக்க வேண்டும்
4. இதில் மூன்றெழுத்து, இரண்டெழுத்து... போன்ற Seasonal Sentiments
5. புரியும் வார்த்தையாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் சங்க கால தமிழில் புரியாத வார்த்தையாக இருந்தால் அதற்கு தனியாக விளக்கம் கொடுத்து புரிய வைக்க மெனக்கெட வேண்டும்
6. ஏற்கனவே பலருக்கும் தெரிந்த அல்லது விளம்பரப்படங்களில் வந்த ஃபேமசாக சொற்றொடராக இருத்தல் நலம்...
7. கேளிக்கை வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழில் இருக்க வேண்டும்... இது அனைவருக்கும் பொருந்தாது,  தமிழ்ப்பற்றாளர்கள் விதிவிலக்கு

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தலைப்பை தேடுவதற்குள் தலை சுக்குநூறாய் வெடித்துவிடும். இதில், அகர வரிசை என்ற வரையறைக்குள் சிக்கிக்கொண்டால், மேலும் கஷ்டமாகிவிடும் என்பதால், அடுத்த படத்திற்கு 'இ' என்ற முறையில் தலைப்பு அமையுமா என்று தெரியிவில்லை.. ஆனால், நிச்சயமாக 'இ' என்ற எழுத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது மட்டும் தெரிகிறது...

இதையெல்லாம் தாண்டி ஒரு கூடுதல் சமாச்சாரம் உண்டு, அதாவது, எனது முதல் 'அம்புலி' இல்லை... 'ஓர் இரவு' தான் (இந்த படத்திற்கு முதலில் 'இரா' என்று தலைப்பு வைத்து பிறகு 'ஓர் இரவு' என்று மாற்றியது தனிக்கதை)... 'ஓர் இரவு'-ஐ தொடர்ந்து அகரவரிசைப்படி வைத்திருந்தால், 'ஔ' எழுத்தில்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும்... யோசித்து பாருங்கள் 'அம்புலி' படத்திற்கு 'ஔ'வில் தலைப்பு வைத்திருந்தால் என்ன வைத்திருக்க முடியும்.... இந்த எழுத்தில் ஏதாவது மாற்றுத்தலைப்பு தோன்றினால் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Tuesday, May 20, 2014

"ஆ"மயம் 03 - அதென்ன ஹாரர் ஆந்தாலஜி?


All time classic திருவிளையாடல் படத்தில் சிவபுராணக்கதைகளை ஔவை பாட்டி சொல்ல சொல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக்கதையா வரும்... தருமியின் கதை ஒன்று, தட்சண் யாகம் நடத்திய கதை ஒன்று, ஹேமநாத பாகவதர் கதை ஒன்று, இப்படி பல கதைகள் வரும்... இதுதான் Anthology Film அல்லது Omnibus Film என்பார்கள்.




இது போன்ற கதைகூறும் பாணி நமது தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பக்திப்படங்களுக்கே இருந்து வந்தது... திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் இப்படி பல படங்கள் உதாரணத்திற்கு கூறலாம். ஹாரரில் இதை முதல் முயற்சியாக செய்துள்ள படம்தான் 'ஆ'.

ஆந்தாலஜி என்ற வார்த்தைக்கு தமிழ்ச்சொல் என்ன என்று ஒரு நண்பர் கேட்டார்... உண்மையில் எனக்கும் தெரியவில்லை... யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து பகிருங்கள். ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையைத்தான் தமிழ்ப்படுத்த வேண்டும் என்று இல்லை.. அவர்களே OmniBus Film என்று புதுவார்த்தையில்தான் இதை alternateஆக கூறுகிறார்கள். எனவே, தமிழில் என்னவாக சொல்லலாம் என்று வல்லுனர்கள் பரிந்துரைத்தால், அவர்களுக்கு MY SINCERE THANKS.

பிறமொழிகளில் இந்த திரைக்கதைவடிவம் பலவாறு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக ஹாலிவுட்டில் 80களில் ஆந்தாலஜி ஹாரர் படங்கள் மிகவும் பிரபலம். ஹிந்தியில் Ram Gopal Varma ஆந்தாலஜி ஹாரர் படமான "Darna Mana Hai" என்ற படத்தின் மூலம் ஹாரர் ஆந்தாலஜிக்கு வித்திட்டார், அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும், அதன் இரண்டாம் பாகமாக "Darna Zaroori Hai" என்று வெளியிட்டார். அதுவும் ஹிட்.



அம்புலி 3D படத்திற்கு இயக்குநர் திரு.ஸ்ரீதரன் சாரை, எங்கள் கலையுலக ஆசானாக உணர்ந்து செயல்பட்டோம், அதுபோல் இப்படத்திற்கு எங்கள் ஆசான் இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்தான். காரணம், அவரது திரைப்படங்கள் அத்தனையும் ஒருவகையில் ஆந்தாஜியாகத்தான் இருக்கும். நவராத்திரி, நவரத்தினம், மேலே குறிப்பிட்ட பக்தி படங்கள் என்று பல படங்களில் இதே பாணியை கையாண்டு வெற்றிப்பெற்றவர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்.

Ace Film Director Mr. A. P. Nagarajan (ImageCourtesy thehindu.com)

பொதுவாக ஒரு படத்தை ஃபுல் மீல்ஸ் என்று கூறினால், ஆந்தாலஜியை வெரைட்டி மீல்ஸ் என்று கூறலாம். ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன், நாயகி, வில்லன், க்ளேமேக்ஸ் என்று கொண்டு போவதால், படம் விறுவிறுவென்று ஓடும்.. மேலும் படத்தில் நிறைய திருப்பங்கள், நிறைய சிறப்பம்ச காட்சிகளோடு திரைக்கதை வடிவமைக்கும் வசதி இந்த ஆந்தாலஜி படங்களில் உண்டு. 

50 ஓவர்கள் மேட்ச் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் 20 ஓவர்கள் மேட்ச்சும் ஹிட் ஆனது போல், இந்த ஆந்தாலஜி பாணி படங்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப்பெற்று ஆந்தாலஜி படங்கள் நிறைய வரும் என்ற நம்பிக்கையுடன் 'ஆ'வை உங்கள் முன் விரைவில் சமர்ப்பிக்கின்றோம். 


Signature

Friday, May 16, 2014

"ஆ"மயம் 02





'ஆ'கு பெயர்

சில வருடங்களுக்கு முன்பு, சுஜாதா அவர்களின் நாவல்களை back to back வாசித்துக்கொண்டிருந்த சமயம், தேடித் தேடி அவரது நாவலை வாங்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒருமுறை ஒரு நாவல் வாங்கி வந்து ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தேன்... அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், நாவலின் தலைப்பை ஏதாவது ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பார்கள். அந்த தலைப்பு 'ஆ'...


அட்டகாசமான அமானுஷ்ய நாவல்... எனக்கு அந்த நாவலின் கதை பிடித்திருந்தாலும், மற்ற சுஜாதாவின் நாவல்களின் தலைப்பை தாண்டி இந்த நாவலின் தலைப்பு அப்படி பிடித்து போனது... 'ஆ'... இதைவிட ஒரு ஹாரர் கதைக்கு தலைப்பு வைக்க முடியுமா என்று தெரியவில்லை... தலைவர் எப்படி யோசித்தாரோ... அவரது ரசிகன் என்ற முறையில் தலைவர் சுஜாதாவிற்கு நன்றி... அந்த தலைப்பு, வெகுநாட்களாகவே என்னுள் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருந்தது... அம்புலியை தொடர்ந்து அடுத்த ஹாரர் கதை.. அதுவும், உலகில் உள்ள வெவ்வேறு ஊரில் நடக்கும் ஹாரர் என்று முடிவானதும்... நீண்ட நாட்களாகவே என் மனதிலிருந்த இந்த தலைப்பை எனது நண்பர் ஹரியிடமும் தயாரிப்பாளர் V. Loganathan அவர்களிடமும் கூற, ஒருமனதுடன், அனைவருக்கும் பிடித்துப்போய் 'ஆ' என்று வைத்துவிட்டோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இத்தலைப்பை பதிவு செய்ய முயன்ற போது ஏற்கனவே இதை வேறொரு கம்பெனியினர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறவுஉம்... ஒரு வாரமாக யோசித்தும் வேறெந்த தலைப்பும் சிறப்பாக தோன்றவில்லை.. தோன்றியதும் 'ஆ' அளவிற்கு ஈர்க்கவில்லை.. பிறகு, அந்த முன்பதிவு செய்த கம்பெனிக்காரர்களிடமே பேசி... சம்மதிக்க வைத்து.. தலைப்பை பெற்றுக்கொண்டோம்...

டிஸ்கி : தலைப்பு மட்டுமே தலைவரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதே தவிர, அந்த கதைக்கும் இந்த திரைப்படத்தின் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்... 


Signature

Wednesday, May 14, 2014

"ஆ"மயம் 01



'ஆ' திரைப்படம் குறித்து வெளியான செய்திகளையடுத்து, நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்... மிக்க நன்றி..

குறிப்பாக வலையுலக நண்பர்களில், 'மெட்ராஸ்பவன்' சிவகுமார் முதலில் ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்ததோடு படத்தை பற்றிய செய்தியை ஜில்மோரில் எழுதி வெளியிட்டார்... மேலும் அவர் கூறியபோதுதான் உண்மைத்தமிழன் அவர்கள் Tamilcinetalkல் ஏற்கனவே படத்தை பற்றி எழுதிவிட்டது தெரியவந்தது. அவருக்கும் நன்றி... நண்பர் ரஹீம் கஸாலி ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.. அவரோடு ஏற்கனவே இத்திரைப்படத்தை குறித்து ஓர் இரவு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன்... கதைப்படி, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் அமானுஷ்ய அனுபவங்களை தொகுத்து திரைவடிவம் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருந்தபோது, மலேசியாவில் இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டேன், கஸாலி அவர்கள் ஏற்கனவே மலேசியாவில் வசித்தவர் என்பதால், அவருடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தேன். அந்த உரையாடல நடந்த நாட்களை அழகாய் நினைவுகூர்ந்தார்...

பிறகு, Bingleguy, என்ற நண்பர் எங்கள் குழுவின் நலன்விரும்பி வசந்தராமன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்... படத்தின் பெயர்விளக்கத்தை பற்றி எழுதும்படியும் கேட்டுள்ளார்.. நிச்சயம் எழுதுகிறேன்...

மேலும் சில நண்பர்களிடமிருந்து, கேணிவனத்தை எப்போது திரைப்படமாக எடுப்பீர்கள் என்ற கேள்வியும் எழுந்தது... வழக்கம்போல், முயற்சிகளை கைவிடாமல் மேற்கொண்டு வருகிறேன்... இம்முறை பல வலையுலக நண்பர்கள், வலைப்பூவில் வாழ்த்தாமல், ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்... ஃபேஸ்புக்கில் 'ஆ' படத்தை பற்றிய செய்திகளையும், புகைப்பட பகிர்வுகளையும் தெரிந்துக்கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன்...




இதுவரை நாளிதழ்களிலும், இணையத்திலும் வெளியான 'ஆ' பற்றி செய்திகளின் தொகுப்பினை இப்பதிவில் இணைத்துள்ளேன்...









Signature

Sunday, May 11, 2014

"ஆ" தமிழில் முதல் திகில் ஆந்தாலஜி திரைப்படம்


அனைவருக்கும் வணக்கம்,

2012ல் முதல் தமிழ் ஸ்டீரியோஸ்கோபிக் 3D திரைப்படமாக வெளியான 'அம்புலி'யை தொடர்ந்து எனது அடுத்த திரைப்படமாக ''ஆ" என்ற முதல் திகில் ஆந்தாலஜி திரைபடத்தை இயக்கியுள்ளேன். இதில் ஐந்து விதங்களான ஹாரர் கதைகள் இந்தியா, ஜப்பான் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. திரைப்பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளன... படத்தின் விவரங்கள் மற்றும் உருவாக்க அனுபவங்களை விரைவில் உங்களுடன் பகிர்கிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Popular Posts