Tuesday, January 31, 2012

தமிழ் படங்களுக்கும் டிஜிட்டல் போஸ்டர்கள் உண்டு

வணக்கம் நண்பர்களே,
சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் MOTION POSTERS எனப்படும் டிஜிட்டல் போஸ்டர்களை பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். அதில் ஹிந்தி படங்கள் டிஜிட்டல் போஸ்டர்களை வெளியிட ஆரம்பித்திருப்பதாகவும், தமிழ்ப்படங்களும் இனிமேல் இந்த வகையான டிஜிட்டல் போஸ்டர்களை வெளியிட ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்...

இனிமேலென்றில்லை... நம் அம்புலி படத்துக்காக ஜூலை 23, 2011 அன்றே (ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் ஆரம்பிக்கும்போது) ஒரு மோஷன் போஸ்ட்ரை வெளியிட்டிருந்தோம்...


MOTION POSTER #01 OF AMBULI


அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 31, 2011 மற்றும் ஜனவரி 29, 2012 அன்று என்று மொத்தம் இதுவரை மூன்று மோஷன் போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறோம்...


                                                      MOTION POSTER #02 OF AMBULI

MOTION POSTER #03 OF AMBULI

சரி, நாங்கள் புதியவர்கள் எங்களது  படம் பெரிய நட்சத்திர படம் இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், இயக்குநர் ஷங்கர் அவர்களின் சமீபத்திய படமான 'நண்பன்' படத்தின் சார்பாகவும் ஒரு மோஷன் போஸ்டர் டிசம்பர் 27, 2011 அன்று வெளிவந்திருக்கிறது...  இதோ...


நாளிதழ்கள் வரலாற்று பதிவுகள் என்றிருக்கும்போது இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Saturday, January 28, 2012

அம்புலி 3D : திரை ஜாலம் இதோ...

வணக்கம் நண்பர்களே,

எங்கள் படத்தின் சார்பாக ஒரு SCREEN MIMING எனப்படும் திரைஜால ப்ரெசென்டேஷன் இதோ...




பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, January 08, 2012

2012 புத்தக கண்காட்சி

 

முதலில் நண்பர் கேபிள் சங்கரின் 'தெர்மகோல் தேவதைகள்', என். உலகநாதனின் 'நான் கெட்டவன்', யுவகிருஷ்ணாவின் 'அழிக்கப்பிறந்தவன்' என்ற புத்தக வெளீயிட்டிற்கு நான் மற்றும் எனது அம்புலி திரைப்படக்குழுவினரின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேபிளார் வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார், ஆனால் திரைப்பட ஃபைனல் கரெக்ஷன் வேலைகளும் அதே நேரத்தில் இடம்பெற்றுவிட்டதால் இந்த புத்தக வெளியீட்டில் பங்கு பெற முடியாதமைக்கு கேபிள்ஜி என்னை மன்னித்துக் கொள்ளவும்... அவர் எப்படியும் நிறைய புக் எழுதத்தான் போகிறார்... கண்டிப்பாக அந்த புத்தக வெளியீடு அத்தனையிலும், மேலும் அவர் எடுக்க போகும் திரைப்படங்களின் விழாக்கள் அத்தனையிலும் நிச்சயம் கலந்து கொள்ளும் ஆசையுடன் காத்திருக்கிறேன்...


இந்த வருட புத்தக கண்காட்சி அனுபவம்...

நானும், நண்பர் ஹரியும், கேமிராமேன் சதீஷ்.G-யும் 6.30 மணிக்கே கிளம்பிவிட்டோம்... வழியில் டிராஃபிக் ஜாம் காரணத்தால் 7.30 மணிக்குதான் போய் சேர முடிந்தது... அதுவும் ஹாரிங்டன் ரோடு -பூந்தமல்லி ஹைரோடு சிக்னலில் நின்றிருந்த நேரம், கண்முன்னே கண்காட்சி வாயில் தெரிய, நீண்ட சிக்னலில் மாட்டிக்கொண்டு தவித்த அந்த 120 செகண்டுகள் மிக நரகமாய் கழிந்தன... க்ரீன் விழுந்ததும் சீறிப்பாய்ந்து உள்ளே நுழைந்தோம்...

டிக்கெட் கவுண்டரிலிருந்து உள்ளே நுழைந்ததும், குமுதம் விளம்பர பலகை வரவேற்றது... 'குமுதம்' பேனர் பார்த்ததும் பெ.கணேஷின் புத்தகங்கள் நினைவுக்கு வந்தன, ஸ்டால் நம்பரை குறித்துக் கொண்டு மெல்ல நகர்ந்தோம்... எங்கு நுழைவது... என்ன எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்துடன் அங்குமிங்கும் கண்ணில் மாட்டிய புத்தக அட்டைகளை பார்த்துக் கொண்டு நகர ஆரம்பித்தோம்... முதலில் நுழைந்தது 'அந்திமழை.காம்' ஸ்டாலுக்குள்... (ஸ்டால் எண் ஞாபகமில்லை)... அதிகம் சினிமா சம்பந்ப்பட்ட புத்தகமே இருந்தன...இந்த வருடம் நான் வாங்கிய முதல் புத்தகம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் எழுதிய 'மக்கள் திலகம் - எனது பார்வையில்'...

பிறகு, 'அடூர் கோபாலகிருஷ்ணனின் எனது சினிமா அனுபவங்கள்' தமிழாக்கம் சுகுமாரன்... அங்கேயே வைரமுத்து அவர்களின் 'கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' மற்றும் நம்ம கேபிள் சங்கரின் 'சினிமா வியாபாரம்' (ப்ளாக்கில் படித்திருந்தாலும், நிச்சயம் சேகரித்து வைக்க வேண்டிய தகவல்கள்), அங்கேயே செழியன் அவர்கள் எழுதிய 'பேசும் படம்'... ரவிக்குமாரின் 'மிகைநாடும் கலை' என்று சினிமா சம்பந்தபட்ட புத்தகங்களை இந்த ஸ்டாலிலேயே முடித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது... பில் போடுபவர் 'நீங்க சுகுமாரன் படிச்சிருக்கீங்களா..?' என்று கேட்டார்... 'இல்லை இப்போதுதான் அவரது தமிழாக்கம் எடுத்திருக்கிறேன்' என்றேன்... 'இதைப் படிச்சு பாருங்க' என்று 'வேழாம்பல் குறிப்புகள்' என்று புத்தகத்தை கொடுத்தார்... பெற்றுக் கொண்டேன்...

அங்கிருந்து தமிழ் ஆராய்ச்சி தொல்லியல்துறை ஸ்டாலுக்குள் செம்ம வேட்டை நடந்தது... யோ.கில்பட் எழுதிய 'ஔவையார் பாடல்களின் கருத்துக்கள்', 'நல்ல தமிழ்ப் பெயர்கள்' (கதை எழுதும்போது ஒருத்தருக்கு பெயர் சூட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது... என்பதால் இந்த புத்தகம்)... முனைவர். ராசு பவுன்துரை எழுதிய 'பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்', மரு.முனைவர் செ. பிரேமா எழுதிய 'இசை மருத்துவம்', ரா. பாலசுப்பிரமணியம் எழுதிய 'தமிழர் நாட்டு விளையாட்டுக்கள்', நா. சுப்பிரமணியம் எழுதிய 'கல்வெட்டு சொல் அகராதி'...
நேரமாகிக் கொண்டே போனதால், சில குறிப்பிட்ட ஸ்டால்களை மட்டும் விசிட் செய்ய முடிவெடுத்தேன்.

ஆங்காங்கே கண்ணில் சிக்கியவைகளில்
சாண்டில்யனின், மலைவாசல், ஜல தீபம் (1,2,3), ஜெயமோகனின் குறுநாவல்கள் மற்றும் ஆல்டைம் ஃபேவரைட் சுஜாதா அவர்களின் 'விவாதங்கள் விமர்சனங்கள்', 'இதன் பெயரும் கொலை', 'என் இனிய இயந்திரா', 'சுஜாதாவைக் கேளுங்கள்', 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்', 'சுஜாதாட்ஸ்', 'ஆரியபட்டா', 'ஏன்? எதற்கு? எப்படி' பாகம் - 2', '21ஆம் விளிம்பு', 'இரயில் புன்னகை', 'ஓலைப்பட்டாசு', '6961', 'கருப்புக் குதிரை' என்று இந்த முறையும் என் லிஸ்டில் லீடிங் இவர்தான்... வாழ்க சுஜாதா சாரின் புகழ்...

இந்திரா சௌந்தர்ராஜனின் 'என் யாத்திர அனுபவங்கள்...' ஏதோ ஒரு பாக்கெட் நாவலில், இவரது சதுரகிரி யாத்திரையில் 'ரகசியமாய் ஒரு ரகசியம் (இதுதான்  மர்ம தேசம் 'ரகசியம்' என்று 'விடாது கருப்பு'க்கு முன்பு தொலைக்காட்சி தொடராய் வந்தது) என்ற நாவல் எழுதுவதுக்கான உந்துதல் பற்றி படித்து மலைத்துப் போயிருந்ததால் இதிலும் அப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கப்பெறலாம் என்ற ஆசையில் இப்புதகத்தை எடுத்தேன்...

விகடனில், 'புதுப்பொலிவு (ஆக்சுவலி பழைய க்ளாசிக் லுக்கில்) பொன்னியின் செல்வனை' காண ஆவலுடன் உள்நுழைந்து ஆவலாக எடுத்துப் பார்த்தேன். மணியம் படங்களுடன் பார்க்கவே அட்டகாசமாக இருந்தது. விலை. 1200 ரூபாய் (டிஸ்கவுண்ட் போக 5 பாகங்களும் சேர்த்து). என்னதான் இருந்தாலும், கல்கியிலிருந்து வாராவாரம் பக்கங்கள் கிழித்து சேகரித்து பைண்டிங் செய்து என் நண்பர் கணேஷ்ராம் கொடுத்த  அந்த பழைய லுக்-ஐ அடித்துக் கொள்ள முடியாது...  கொடுமை என்னவென்றால், இப்புத்தகத்தை கண்ணால் கண்டபோதும் வாங்க முடியவில்லை... காரணம், ஆன்லைனில் முன்னமே நான் பணம் செலுத்தி பதிவு செய்திருந்தேன். ஆனால், புத்தகம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை, கேட்டதற்கு 'வந்துவிடும் சார்... ஒரு நாளைக்கு 300 புத்தகம் டெலிவரி செய்து கொண்டிருக்கிறோம், பொறுமையாய் இருங்கள் ப்ளீஸ்.. ' என்று விடையளித்தார்கள்... நான் கண்காட்சிக்கு முன்னமே வாங்கிவிடலாம் என்றெண்ணி பதிவு செய்தது தவறாய்ப் போய்விட்டது... கண்காட்சியிலேயே வாங்கியிருந்தால் 150 குறைவாகவும் (ஆன்லைனில் 1350 ரூபாய்), விரைவாகவும் கிடைத்திருக்கும்... 

இதோ படித்துவிட்டு தந்துவிடுகிறேன்... என்று போன முறை சில புத்தகங்களை என்னிடமிருந்து வாங்கிச் சென்ற நண்பர்கள் திருப்பித் தராமல் நட்பின் அடையாளமாய் வைத்துக் கொண்டதில் என் கலெக்ஷனில் சில புத்தகங்கள் மீண்டும் தேவைப்பட்டது... அவற்றையும் தேடிப்பிடித்தேன் மதனின் 'மனிதனும் மர்மங்களும்', 'கி.மு.கி.பி.', 'ஹாய் மதன் கேள்வி பதில்கள் பாகம் 1, 2, 3, 4, 5', செழியனின் 'உலக சினிமா 1, 2, 3(புதிது)'...  பிறகு  வாலி அவர்களின் அட்டகாசமான 'நினைவு நாடாக்கள்' முழுப்புத்தகமாய் கிடைத்தது.

விகடனிலிருந்து வெளியேறியதும் செக்யூரிட்டிகள் விசிலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்... கடையை மூடுமாறு ஸ்பீக்கரில் அறிவிப்பு கேட்க தொடங்கியது...
ஓடோடிச் சென்று குமுதம் ஸ்டாலுக்குள் நுழைந்தேன்...
வழியில் கண்ணில் சிக்கிய, நான் போக நினைத்த உயிர்மை, கிழக்கு, டிஸ்கவரி, வனிதா பதிப்பகம், நன்னூல்.காம் போன்ற ஸ்டால்கள் ஒவ்வொன்றாய் மூடிக்கொண்டிருந்தார்கள்... 

நல்ல வேளை, குமுதம் சில நபர்களுடன் திறந்தேயிருந்தது...  'பெ. கணேஷ்' புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டதும், 'சித்தர் சுவாமிகள்', 'A to Z டெக்னிக்கல் ரகசியம்', 'ங்ஙகா... சிறுகதைத் தொகுப்பு' மூன்றும் வாங்கிக் கொண்டதும்...  விசில் சத்தத்துக்கு நடுவே வெளியேறினோம்...

வெளியேறியதும், நான் வாங்க நினைத்து மறந்த இன்னும் பல புத்தகங்கள் கண்முன் வந்து மறைந்தன... நிச்சயம் மீண்டும் வர வேண்டும்...

பின்குறிப்பு : எனது மொபைலில் மெமரி கார்டு பிரச்சினை என்பதால் ஃபோட்டோ எடுக்க முடியவில்லை...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Monday, January 02, 2012

அம்புலி 3D : புத்தாண்டு மேஜிக் போஸ்டர்

வணக்கம்,

கடினங்களை கடந்த வருடமே கடந்துவிட்டதால்...
இனி வரும் இந்த புதிய வருடம்...
இனிமைகளை வாரி இரைத்திட...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

எனது பள்ளிக்காலத்தில் ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்த கிறித்துவ மத நண்பர்கள், கையில் ஒரு துண்டுபிரச்சார சீட்டை கொடுத்தார்கள்... அதில் கருப்பு வெள்ளையின் கலவையில் ஒரு டிசைன் இருந்தது... அதை 30 விநாடிகள் உற்றுப்பார்த்துவிட்டு வானத்தை பார்க்கும்படி போட்டிருந்தது... அப்படி செய்ததும் துண்டு சீட்டில் நாம் பார்த்த அந்த டிசைன் வானத்தில் இயேசு கிறித்துவாய் தெரியும்... இதைப்பார்த்தும் நானும் எனது நண்பர்களும் மலைத்துப் போனோம்...

அடடே..! வானத்தில் இயேசு தெரிகிறார் என்று கொண்டாட ஆரம்பித்தோம். அன்று அந்த துண்டுச்சீட்டுக்கு அப்படி ஒரு டிமாண்ட் இருந்தது... அனைவரும் வீட்டிற்கு கொண்டு போய் பெற்றோர்களிடமும் அதைக் காட்டி அவர்களையும் ஆச்சர்யப்படுத்தினோம்... சுமார் ஒரு வாரத்திற்கு பள்ளியில் இதே பேச்சாய் இருந்தது...


இதுதான் அந்த டிசைன்...

இன்று அப்படிப்பட்ட இல்யூஷன் வகை டிசைன்களை இண்டர்நெட்டிலும் நிறைய  காணக்கிடைக்கிறது... ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், பின் லேடன், ஒபாமா... இப்படி பல பிரபலங்களின் முகங்களை இந்த வகை இல்யூஷன் டிஸைன்களில் நீங்களும் ஃபேஸ்புக்கில் கண்டிருக்கலாம்...

அந்த வகையில், அம்புலி படத்திற்கு ஒரு டிசைன் செய்ய எண்ணி செயல்படுத்தியிருக்கிறோம்... நேற்றைய புத்தாண்டு சிறப்பு டிசைனாக தமிழ் நாளிதழ்களில் வெளியான டிசைன் இதோ உங்கள் பார்வைக்கு...

தமிழ் நாளிதழ்களில் அம்புலி புத்தாண்டு சிறப்பு டிசைன்

டிசைனைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Popular Posts