Monday, May 31, 2010

'ஓர் இரவு' கதைகள் - 1






























Signature

Sunday, May 23, 2010

லைலா ஓ லைலா... [ஆல்பம்]


தமிழ்நாட்டை இரண்டே நாளில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய லைலா புயல் மழையில், நனைந்தும் நனையாமலும் கேமிராவில் க்ளிக்கியது...

DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : May 19, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9, 4:3

மண்ணில் பட்டுத் தெரிக்கும் தெய்வநீர்..!


  மழைநீரின் நடனம்..! 


  வரிசையாய் குதித்து தற்கொலை செய்யும் மழைத்துளிகள் 


  மழைத்துளிகளின் மெல்லிய கோட்டோவியம் 


↑  பச்சைத்தண்ணியில் குளிக்கும் பச்சைத்தாவரங்கள் 

  மழையில் உருவான திடீர் குட்டித்தெப்பம் 


  மெல்லிய சாரல் கோடுகள் 



  சுட்டபுண்ணை மழைநீரில் ஆற்றிக்கொண்டிருக்கும் செங்கல்! 



  மேலும் சில மழைக்கோடுகள் 



  நிர்வாணக்குளியலால் வெட்கப்பட்டு திரும்பி நின்றபடி..! 


↑  மே மாதக்குளியலில் முட்செடி 




  நெருங்கி வா என்று மேகங்களை கைநீட்டி அழைக்கும் தென்னைகள்..! 


Signature

Monday, May 17, 2010

பேநா நண்பன் - [சிறுகதை]

2ஆம் ஷிப்ட் முடித்துவிட்டு கிளம்ப கொஞ்சம் லேட்டாகிவிட்டது, அதனால் வழக்கமாக போக வேண்டிய ட்ரெய்னை மிஸ் பண்ணிவிட்டேன்.... இப்போது வரப்போகிற ட்ரெயின்தான் லாஸ்ட் ட்ரெய்ன்... நல்ல வேளை இதையாவது தவற விடாமல் வந்து சேர்ந்தேனே.... என்று என்னை நானே பாராட்டிக் கொண்டிருந்த வேளையில் தூரத்தில் நம்பிக்கை நட்சத்திரமாய் என் கடைசி ட்ரெய்னின் ஹெட்லைட் தெரிந்தது...

ட்ரெய்ன் ஹார்ன், மகாபாரதச் சங்கு போல ஒலித்தது....

பயங்கர காலியாக இருந்த அந்த ட்ரெய்ன் எந்த அவசரமுமில்லாமல் ப்ளாட்ஃபாரத்தில் வந்து நின்றது...

ஏறினேன்...

உள்ளே யாருமில்லை....

அந்த காலி கம்பார்ட்மெண்ட் சற்றே பயமுறுத்தலாக இருந்தாலும்... ஒரு பக்கம், கவர்மெண்ட் நமக்கென்று தனியாக ஒரு ட்ரெய்ன் விட்டிருப்பதை எண்ணி கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொண்டேன்....

அடுத்த ஸ்டேஷன் வந்தது.... என் ஸ்டேஷன் வர இன்னும் குறைந்தது 20 நிமிடாவது ஆகும் என்பதால் ரொம்பவும் ஆசுவாசமாக இருந்தேன்....

வந்துநின்ற ஸ்டேஷனில் ஒருவன் மட்டும் ஏறினான்... சுற்றும் முற்றும் பார்த்தான்.... ஏனோ என் எதிரில் வந்து உக்காந்தான்.... சே..! இவ்வளவு இடம் இருந்தும் இங்கேயே வந்து உக்காந்து நம்ம ப்ரைவசிய கெடுக்கிறானே என்று கொஞ்சம் கோபம் வந்தது...

நான் என் ஆஃபீஸ் பையிலிருந்து இன்றைய DC பேப்பர்-ஐ எடுத்து சு டோ கு புதிரிருந்த பக்கத்தை திருப்பினேன்...

சு டோ கு ஒன்றின் விடையைக் கண்களால் கணித்தேன்.... ஆனால் அதை பேப்பரில் எழுத என்னிடம் பேனா இல்லை.... என் எதிரில் உக்காந்திருப்பவனிடம் பேனா இருந்தது....
கேட்கலாமா... வேண்டாமா....?

ஏதோ ஒருவித ஈகோ என்னை தடுத்தது... ஆனால் நான் அவன் சட்டைப் பாக்கெட்டிலிருக்கும் பேனாவையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டான்...

அவனே பேனாவை எடுத்துக் கொடுத்தான்....

'இந்தாங்க சார்... யூஸ் பண்ணிக்கோங்க....' என்று பேனாவை என்னிடம் ஈகோயில்லாமல் கொடுத்தான்

அசடு வழிந்துக் கொண்டே 'தேங்க்ஸ்...' என்றேன்...
அது இங்க் பேனா என்பதை கையில் வாங்கியதும் தெரிந்துக் கொண்டேன். இப்பவும் இங்க் பேனா உபயோகிப்பவர்கள் இருக்கிறார்களா என்று என்னுள் நானே கேட்டு வியந்துக்கொண்டேன்.

ட்ரெய்ன் படுவேகமாக போய்க்கொண்டிருந்தது...

அந்த இங்க்பேனாவின் மூடி மிக அழுத்தமாக மூடப்பட்டிருந்தது.... அதை திறக்க முயற்சி செய்து முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்....

'கொடுங்க சார் நானே ஓபன் பண்ணித் தர்றேன்....' என்று அவனே கேட்டான்

'நோ.. நோ... நானே பண்ணிக்கிறேன்....' மறுபடியும் என் ஈகோதான்...

பலமனைத்தையும் பிரயோகித்து... ஒரு வழியாக திறந்துவிட்டேன்....

அந்த நேரம் பார்த்து ட்ரெய்னின் வேகம் காரணமாக காற்று பலமாக வீசியது... என் மடியிலிருந்த அந்த சு டோ கு பேப்பர் திசைக்கொரு பக்கம் பறந்தது.... அதை பிடிப்பதற்காக என் கைகளை பலத்த வேகமாக அசைக்க... ட்ரெய்ன் ஏதோ காரணமாக 'சடன் பிரேக்'கடித்து நின்றது....

ஒரு சின்ன நிசப்தம்...

என் கைகள் பேப்ரை பிடித்திருந்தது... ஆனால்.... ஆனால்....

பேப்ரை விலக்கி பார்த்ததும்.... அய்யோ....

என் கையிலிருந்த பேனாவின் கூர்முனை... என் எதிரில் உக்காந்திருந்தவனின் தொண்டையில் ஆழமாக இறங்கியிருந்தது... அவன் வார்த்தை ஏதும் வராமல் கண்களை விரித்துக் கொண்டு திணறியபடி 'ஹக் ஹக்' என்று விழிகளை அகலவிரித்தபடி என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்...

அடக்கடவுளே.... அந்தப் பேனாவை அவன் தொண்டையிலிருந்து எடுக்க முயற்சி செய்தபோது, அவன் தொண்டைக்குழியிலிருந்து இரத்தம்... அவன் சட்டை முழுவதும்.... பேனாவை எடுக்காமல் அப்படியே விட்டபடி ட்ரெயின் வாசலுக்கு வந்தடைந்தேன். திரும்பி பார்த்தேன். அவன் சீட்டில் படுத்தபடி துடித்துக் கொண்டிருந்தான்.

சே... இப்படியா நடக்க வேண்டும்....

வெளியே திடீரென்று சங்கு ஒன்று சத்தமாய் ஒலித்தது... இல்லையில்லை அது சங்கு இல்லை ட்ரெய்ன் ஹார்ன் சத்தம்....

பதட்டத்தில் என் மூளை தப்பாக வேலை செய்கிறது....

அடுத்து என்ன செய்வது... அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட வேண்டும்...

அடுத்த ஸ்டேஷன் வந்தது...
இறங்கினேன்...

ஒருவன் அதே கம்பார்ட்மெண்டில் ஏறினான்...

என்னைத் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே ஏறினான்... என் உள்ளே வேறு பயம் தொற்ற ஆரம்பித்தது... ஒரு வேளை இவன் என்னை நாளை போலீசில் அடையாளம் காட்டிவிட்டால் என்ன செய்வது..?

ஓடிப்போய் மீண்டும் ட்ரெய்னில் ஏறினேன்.... நான் நினைத்தது போலவே அவன் துடித்துக்கொண்டிருந்தவனின் தொண்டையிலிருந்து பேனாவை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்.... எடுத்ததும், காயம்பட்டவன் சரிந்து விட்டான்... அடக்கடவுளே இறந்துவிட்டான்!

இவன் பேனாவுடன் திரும்பி என்னிடம் வந்தான்....

'டேய்..! நீதானே இவனைக் கொண்ணே...? உண்மையைச் சொல்லுடா..?' என்று என்னை மிரட்டினான்.

எனக்குள் திடீரென்று ஒரு வேகம்... கொஞ்சமும் யோசிக்காமல் அவனை பிடித்து ட்ரெய்னுக்கு வெளியே தள்ளி விட்டேன்... ஓடுகின்ற ட்ரெய்னில் இருந்து விழுந்த அவன் உடல் துண்டு துண்டாய் சிதறியது....
'ஆஆஆஆஆஆஆஆஆஆஆ.......' என்று அவன் அலறிய சத்தம் மலைப்பள்ளத்தாக்கில் கேட்பதுபோல் கேட்டு அடங்கியது.
சே... ஒரே இரவில் நான் இப்படி 2 கொலைகள் செய்வேன் என்று சத்தியமாக நினைத்து பார்க்கவில்லை....

2 வாரங்களுக்குப் பிறகு...

அதே ஸ்டேஷன்...

இரண்டு வாராம மிகவும் சிரமப்பட்டு ஓரளவுக்கு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தேன்.... மீண்டும் ஆஃபீசில் இன்று லேட் ஆனதால் இன்று அதே ட்ரெய்னை பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது...

வழக்கம் போல் ட்ரெய்ன் காலியாக வந்தது...

ஏறினேன்... அதே சீட்டில் ஜன்னல் பக்கம் இல்லாமல், நடுப்பக்கம் உட்கார்ந்தேன்... உள்ளே ஒரு இனம் புரியாத நடுக்கம்...

அடுத்த ஸ்டேஷன்.... யாரும் ஏறவில்லை... ட்ரெய்ன் மெதுவாக ஊர்ந்து அந்த ஸ்டேஷனை தாண்டியது....

என் தோளில் ஒரு கை விழுந்தது...
ஆஆஆஆ... அலறியடித்துத் திரும்பினேன்.... அவன்தான்... அவனேதான்... எனக்கு பேனா கொடுத்தவன்தான்.... அய்யோ பேயாக வந்திருக்கிறான்....

கத்தலாமா வேண்டாமா என்று நான் நினைக்கும்போது அவனே பேசினான்....

'பயப்படாதீங்க பாஸ்.... நான்தான்...' என்று சிரித்தபடி என்னெதிரில் வந்து உட்கார்ந்தான்.
'எனக்கும் ஒண்ணும் ஆகல.... ஜஸ்ட் ஒரு சின்ன இன்ஜூரி... இதோ பாருங்க பேண்டேஜ் போட்டிருக்கேன்... இன்னும் 2 நாள்ல சரியாயிடும்...' என்று அவன் தன் கழுத்தைக் காட்ட, அங்கே ஒரு பேண்டேஜ் மட்டும் ஒட்டப்பட்டிருந்தது...

நிம்மதி பெருமூச்சு விட்டேன்....

'ஆமா..! என் பேனா உங்ககிட்டத்தான் இருக்கா..?' என்று கேட்டான்...

அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது... அய்யோ... நான் இவனைக் கொன்றதை போலீசில் சொல்லிவிடுவான் என்று நினைத்து அநியாயமாக இன்னொருவனை ட்ரெயினிலிருந்து தள்ளி துண்டு துண்டாக சிதறடித்து சாகடித்தேனே...!
முகத்தில் மிரட்சி காட்டாமல் 'சாரி சார் அது எங்கேயோ மிஸ் ஆயிடுச்சி...' என்றேன்....

'பரவாயில்லை பாஸ் விடுங்க..' என்றவன்... வந்து நின்ற அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிட்டான்....

மீண்டும் தனியாக ட்ரெய்னில் போய்க் கொண்டிருந்தேன்....

என் காலடியில் ஏதோ இருந்தது எடுத்தேன்... பேனாவின் மூடி... அதே பேனாவின் மூடி.... இதன் பேனாவை கடைசியாக எங்கே பார்த்தோம்... என்று நினைவுக்கூர்ந்தேன்.


அன்று நான் ட்ரெயினிலிருந்து தள்ளிவிட்டவன், தன் கையோடு அந்தப் பேனாவை கடைசியாக கையில் வைத்திருந்ததை நினைக்கும்போது எனக்குள் ஏதோ ஒரு பய அமிலம் உழன்று என்னை கலவரப்படுத்தியது...

அப்போது திடீரென்று...

'டேய்...' என்று கர்ஜனையான ஒரு குரல்....

ட்ரெயின் ஜன்னலுக்கு வெளியே கேட்டது... எட்டிப்பார்த்தேன்....

அய்யோ... நான் ட்ரெய்னிலிருந்து தள்ளிவிட்டவன்தான்... இப்போது பார்க்க முகம் அழுகி... அகோரமாய்...

ஓடும் இரயிலில் ஜன்னலுக்கு வெளியே கம்பிகளைப்பிடித்தபடி, அடிப்பட்ட இரத்தக்காயங்களுடன் என்னைப் பார்த்து கோரைப் பற்களுடன் முறைத்துக் கொண்டிருந்தான்....

அவனின் கைகளில் 3 விரல்கள்தானிருந்தது... கையில்... அதே பேனாவை பிடித்துக் கொண்டு, கூர்முனையை என்பக்கம் திருப்பி,  குத்துவதற்கு என்னை நோக்கி கையை ஓங்கினான்...

ச்ச்ச்சக்க்க்க்க்க்...!?!


என் தொண்டைக்குழியில் அந்தப்பேனா கச்சிதமாக இறங்கியது.

ஆஆஆஆஆஆ...

- முடிவு -


Signature

Wednesday, May 12, 2010

பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டுவரும் - [ஆல்பம்]

மாநகரம் மறந்து புறநகருக்கு குடிபெயர்ந்த சில பறவைகளை, கேமிராவில் சிறைப்பிடித்திருக்கிறேன்...

DETAILS
Camera : Kodak Z1012 IS
MP : 7.5
Aspect Ratio : 16:9

↑  1. மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்..! 


↑  2. உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல... 

↑  3. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு... 

↑  4. அழகு... நீ நடந்தால் நடையழகு..! 

↑  5. மஞ்சள் முகமே வருக... 

↑  6. பறந்தாலும் விடமாட்டேன்..! 

↑  7. நீலநிறம்... வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்... காரணம் சொல் கண்ணே..?


இவங்களைப் பார்க்கும்போது ஞாபகம் வந்த பாடலை கேப்ஷனாக போட்டிருக்கிறேன். உங்களுக்கும ஏதாவது பாடல் ஞாபகம் வந்தா சொல்லுங்களேன்..?

Signature

Saturday, May 08, 2010

எனக்கு பிடித்த 10 படங்கள் - [தொடர்பதிவு]


என்னை இந்தத் அருமையான தலைப்புக் கொண்ட தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ரகு-விற்கு மிக்க நன்றி..!

ரு திரைப்படத்தை திருப்தியாக பார்ப்பது ரசிப்பது என்பது ஒரு கலை...

ஒருவிதமான வாசனை கலந்த ஏசியின் குளிர்ச்சி நிரப்பப்பட்ட ஒரு அரங்கில்... அரையிருட்டில் மிதமான வெளிச்சத்தில் நமக்கென்று காத்திருக்கும் இருக்கையை தேடிப்பிடித்து... சாய்ந்தமர்ந்து... ஒரு 2 நிமிடத்திற்குப் பிறகு, திரையில் வந்தவர்களுக்கு "WELCOME" என்று ஒரு SLIDE போடுவார்களே அதைப் பார்த்துவிட்டு, சில விளம்பரப்படங்களைப் பார்த்துவிட்டு... எப்போது படம் வரும்... என்று ஒருவித எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்து... சென்ஸார் சான்றிதழிலிருந்து தொடங்கி விடாமல் படம் பார்க்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு படம் பார்த்த திருப்தி இருக்கும்.

அதுவும் வெகுநாட்களாக காத்திருந்து ரிலீசான பெரிய ஸ்டார்களின் படமோ அல்லது ப்ராமிஸிங் டைரக்டரின் படமோ அல்லது அட்டகாசமான ஆங்கிலப்படமோ என்றால் சொல்லவே வேண்டாம். திரையரங்கிலும் திருவிழாதான்.

இப்படி நான் எல்லாப்படங்களையும் பார்த்ததில்லை என்றாலும், இப்படி பார்க்க வேண்டும் என்றுதான் ஆசை...

தற்போது இதுபோல் காத்திருப்பது, திரு.மணிரத்னம் அவர்களின் 'ராவணன்' படத்திற்கு...
சரி தலைப்புக்கு வருவோம்...

 
நெஞ்சில் ஒர் ஆலயம் (1962)
திரைப்படத்தில் பலரும் க்ளாஸிக் க்ளாஸிக் என்று ஒரு வார்த்தை அடிக்கடி உபயோகிப்பார்களே... அந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புகட்டிய படம் இது... எத்தனை முறை பார்த்தாலும், அப்படியே மெய்மறந்து பார்க்கும் ஒரு உன்னத அனுபவத்தை இந்தபடம் பலமுறை எனக்கு கொடுத்திருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் GEM...

கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா மூன்று பேரும் போட்டி போட்டுக்கொண்டு கலக்கியிருப்பார்கள்...
 
  • 'என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..'
     
  • 'வருவாயென நான் தனிமையில் நின்றேன்...' (எங்கிருந்தாலும் வாழ்க... பாடலின் சரணம்)
     
  • 'ஒருவர் வாழும் ஆலயம்' (கோரஸ்)

காதலில் கண்ணியம் காட்டிய இந்தத் திரைப்படம்... என்றும் என்றென்றும் என் ஃபேவரைட்...

 
 ஔவையார் (1963)
'10 கமாண்ட்மெண்ட்ஸ்' என்ற ஒரு ஆங்கிலப் படத்தில்,  மோஸஸ்-க்கு கடல் இரண்டாகப் பிளந்து வழிவிடும் காட்சியை பிரம்மிப்பாக எடுத்திருப்பார்கள். அதற்கு இணையாக, நம் நாட்டிலும், ஒரு பிரம்மாண்ட காட்சியாக, இந்தப்படத்தின் கடைசிக் காட்சிகளில் ஔவையார் பாடலுக்கு பூமி வாய்ப்பிளந்து இரண்டாகப் பிளக்கும் காட்சியைப் எடுத்திருப்பார்கள்.

அதுமட்டுமின்றி, பல யானைகள் மிரண்டு ஓடுவதுபோல் ஒரு அற்புதமான போர்களக்காட்சியை படம்பிடிதிருப்பார்கள் பாருங்கள். இன்றும் பார்த்து பார்த்து வியக்கும்படி படமாக்கியிருப்பார்கள். இப்படி பல பிரம்மாண்டங்கள் இருந்தாலும், கூடுதல் அழகாக, தமிழ் கொஞ்சி விளையாடும் இந்தப் படம், எனக்கு பிடித்த ஔவைப் பாட்டியைப் பற்றிய கதை என்பதால் மிகவும் பிடித்துப் போனது.


ஆயிரத்தில் ஒருவன் (1965) 
எம்.ஜி.ஆர் அவர்களின் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் ஆங்கில சரித்திரப்படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலும், அன்புக்கு அடங்கும் தன்மையும், சமயத்தில் சீரிப்பாயும் விதமும், கத்திசண்டையும், அரேபியன் ஸ்டைலில் இசையும், ஒரு சிந்துபாத் கதையை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது. இன்றும் இந்தப்படம் பார்க்கும் போது குழந்தையாய் மாறி ரசிக்க ஆரம்பித்துவிடுகிறேன்.
 
            • 'அதோ அந்தப் பறவை போல ஆட வேண்டும்...
            • 'ஓடும் மேகங்களே...'
            • 'ஏன் என்ற கேள்வி...'  என்று பாடல்களும் அட்டகாசம்.


திருவிளையாடல் (1965)
இந்தப் படத்தின் ஒலிச்சித்திரத்தை ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் கோவிலில் போட்டு போட்டு, பார்க்கும் முன்பே இந்தப் படத்தின்மீது ஒரு தனி எதிர்ப்பார்ப்பு உண்டாகிவிட்டது. எப்போது முதல்முறை பார்த்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால், முதல்முறை பார்த்தபோது, வசனத்தை உச்சரித்துக்கொண்டே பார்த்தேன். அந்தளவுக்கு வசனங்கள் மனனம் ஆகியிருந்தது. ஆனாலும், அட்டகாசமான கிராஃபிக்ஸ் காட்சிகளில் கடவுளைக் காட்டியவிதம் (அந்தகாலத்திலேயே) அருமை... அதுவும் சிவபெருமானின் இண்ட்ரொடக்ஷன்... வாத்தியங்கள் முழங்க, ஆடல் பாடலுடன் அட்டகாசமான ஆரம்பமாகயிருந்தது பிரமிக்க வைத்தது (இதெல்லாம் ஆடியோ கேசட்ல சொல்லவேயில்லியே என்றிருந்தேன்).

 
அதே கண்கள் (1967)
ஒரு த்ரில்லர் படம் எப்படியிருக்கும் என்று எனக்கு கற்றுத்தந்த படம். தொடர்கொலைகள், சுற்றியிருக்கும் அனைவரும் வில்லன் நடிகர்கள், யார் கொலைகாரன் என்று ஏகத்துக்கும் அட்டகாசப்படுத்தியிருந்தார்கள். இன்று நான் எனது கதைகளுக்கு கடைசியில் எதிர்பாராத ட்விஸ்டுகளை வைப்பதற்கு இந்தப்படமும் ஒரு முக்கியக் காரணம். அந்த 'சடன் டெத் ஸ்டோரி ரைட்டிங் ஸ்டைல்'ஐ (சுஜாதா அவர்கள் சொன்ன Definition) இந்தப் படத்தில் காட்சிப்பாடமாக நான் கற்றுக்கொண்டேன்.

ஈஸ்ட்மென் கலர் இந்தப்படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ் என்றுதான் சொல்லவேண்டும் அந்தளவுக்கு ஒரு ஹிட்ச்காக் பட லுக்-ஐ கொண்டுவந்திருப்பார்கள். அன்று பயந்தும், இன்று வியந்தும் பார்க்கும் படம் இது.

இசையிலும் ராக் ஸ்டைலில், கண்ணுக்கு தெரியாதா... ஓஹோ எத்தனை அழகு... என்று கலக்கியிருப்பார்கள்...

 
காசேதான் கடவுளடா (1972)
எங்கள் பெரியப்பா வீட்டில் அவர்கள் புது கலர்டிவி வாங்கியபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அன்று மதியம், அசைவ சாப்பாட்டை வெளுத்துக்கட்டி முடித்து சாவதானமாக புது டிவி பார்க்க அமர்ந்தபோது, இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. இந்த படம் ப்ளாக் & ஒயிட் படம்தான் என்றாலும் சிரிக்க வைத்து என்னை கட்டிப்போட்டது. அதற்கு முக்கியக் காரணம், நாடகபாணியில் அமைந்த இப்படத்தின் திரைக்கதை. குறிப்பாக தேங்காய் சீனிவாசன் அவர்களின் சென்னை Modulation டைலாக்கும், நடிப்பும் அட்டகாசமான நகைச்சுவையாய் என்னை மிகவும் ஈர்த்தது.

க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க... கலாட்டா அதிகமாகிக்கொண்டே போக, அனைவரும் நகைச்சுவையில் புரட்டி எடுத்தார்கள். வயிறுவலிக்க சிரித்துப்பார்த்த படமான இதுவும் என் ஃபேவரைட்.

 
சலங்கை ஒலி (1983)
இந்தப்படம் நேரடித் தமிழ்ப்படம் இல்லையென்றாலும், இது ஒரு மாற்றுமொழிப்படம் என்று நான் கருதவேயில்லை... அந்தளவுக்கு இந்தப்படம் அமைந்தது சிறப்பு. சமீபத்தில் கணேஷ் என்ற எனது நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்திப் பரிந்துரைக்க, டிவிடி வாங்கிப் பார்த்தேன். இரவு 11.30 மணிக்கு பார்க்க ஆரம்பித்த இந்தபடத்தை, வெளியுலக இரைச்சலின்றி, அமைதியான சூழ்நிலையில் நான் பார்த்தபோதிலும், மனதளவில் சத்தமாக அழுதுக்கொண்டிருந்தேன். எனக்கும் தெரியாமல் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. கன்னப்பிரதேசங்கள் ஈரமாய் நனைந்தபடி பார்த்து முடித்தேன். நான் எந்த்ப படத்தைப் பார்த்தும் இப்படி ஃபீல் ஆனதில்லை.

வறுமைச் சூழலில் வாழும் ஒரு கலைஞனின் வாழ்க்கையும், அவன் அந்தக் கலையின்பால் கொண்டிருக்கும் பக்தி, அதை  அவனுக்குள் புடம்போடப்பட்டு வெளிக்கொணர முடியாமல் தவிக்கும் தவிப்பையும், ஒரே ஒரு மேடைக் கிடைக்காமல், கிடைக்கும்போதும் அரங்கேற முடியாமல், காதலும் கைகூடாமல், ஆனாலும், சோகத்தை வெளிக்காட்டாத ஒருவித நகையுணர்வோடு வாழும் அந்தப் பாத்திரம். வாய்ப்பே இல்லை..! கமல் அவர்கள் மீதும், இயக்குனர் K. விஸ்வநாதன் அவர்கள் மீதும் பெரும் மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

'தகிடததிமி..' என்ற அந்தப் பாடல் இன்றும் எங்காவது கேட்கும்போது, கண்களை மூடிக்கொண்டு, அந்தப் கற்பனைக் கலைஞன் கதாபாத்திரத்துக்கு மரியாதை செலுத்தத் தோன்றுகிறது.

 
 குணா (1991)
இந்தப் படம் வெளியான புதிதில் பார்க்கவே தோன்றவில்லை... ஏனோ தெரியவில்லை..! கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது, ஜூரத்திற்காக வீட்டில் லீவ் போட்டு படுத்திருக்கும்போது போரடிக்கிறதே என்று டிவியில் இந்தப் படத்தைப் பார்த்தேன்... படம் பார்த்து முடித்தும், ஜூரம் போய்விட்டது.  அந்தளவுக்கு மருந்தாய் அமைந்தப் படம். கமல் அவர்கள் தனது கெட்டப்-ஐ முற்றிலுமாக மாற்றி கருப்பாக, அரைபைத்தியம்போல் நடிப்பில் பொளந்துக் கட்டியிருப்பார்.

இன்றும் கொடைக்கானல் போகும்போதெல்லாம், குணாவும், அபிராமியும் ஏதோ ஒரு கிடுகிடு பள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. இந்தப் படத்தைத் தழுவி இதுநாள் வரை பல படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படத்தை பார்க்கும்போதெல்லாம் மணம் கணத்துவிடுகிறது. 'உன்னை நானறிவேன்' என்ற பாடலின் இறுதியில், ரேகா போனபிறகு, தூங்கிக்கொண்டிருக்கும் கமலின் அருகில் வந்து S. வரலட்சுமி இரண்டே வரிகள் பாடுவார்... அந்த இரண்டு வரிகள் டிவிடியில் பல முறை ரீவைண்டு செய்துக் கேட்டிருக்கிறேன். அப்படி ஒரு காந்தக்குரல்...


கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்த படம். முதலில் இந்தப் படத்தின் தலைப்பு... விளம்பரம் வந்த நாளிலிருந்து ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே வந்தது. காலேஜை கட்டடித்துவிட்டு, திருவொற்றியூரில் ஒரு தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆரம்ப காட்சிகளில், நந்திதா தாசும், சக்ரவர்த்தியும் ஒரு குளத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, மனைவி தனக்குப் பிடித்த விஷயங்களை கூறிக்கொண்டே வருவாள். கமலஹாசன், சாமி, பள்ளியில் லவ்லெட்டர் கொடுத்த பையன், பிறகு கணவன் என்று கூறிக்கொண்டேவர, பிறகு..? என்று கணவன் கேட்க, மனைவி மண்ணை எடுத்துக் காட்டுவாள். பயங்கர நெகிழ்ச்சியான காட்சி அது...

அதே போல், ஒரு காட்சியில் கர்ப்பிணியாக இருக்கும் அந்த இலங்கைப்பெண், சாப்பிடும்போது, எங்கோ வெடிக்கும் வெடிகுண்டு சத்தத்தில் வீட்டில் அதிர்வு தெரிய விளக்கு அணைந்து அணைந்து எரியும், அப்போது, அந்த வீட்டிலிருப்பவர்கள் தவிக்கும் தவிப்பு... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பாத்திரப்படைப்பும், அந்த பாத்திரத்திற்கான தேர்வும் மிக நேர்த்தியாக இருக்கும். நந்திதா தாஸ் அந்த இலங்கைப் பெண் வேடத்தில் கனக்கச்சிதமாக பொருந்தியிருப்பார். பிரகாஷ்ராஜ் அவர்களும் சிங்களத்தாராக சப்போர்ட்டிங் கேரக்டரில் மிகவும் அழகாக நடித்திருப்பார். 

'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற மெட்டை ஆங்காங்கே ஒரு பெண் ஹம் செய்வதுபோல் வரும் பின்னனி இசையில் மெய்சிலிர்க்கும்.

எனக்கு இன்றுவரையும் மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்தில் இடம்பெறும், 'வெள்ளைப்பூக்கள் உலகம் என்றும் மலரவே...' என்ற பாடல்தான். (இன்றும் எனது காலர்ட்யூன் இதுதான்).

ஹேட்ஸ் ஆஃப் டு மணி சார்...

அன்பே சிவம் (2003)
இந்தப் படம் பல நபர்களின் ஃபேவரைட் வரிசையில் இடம்பெற்றிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை... கார்டூனிஸ்டு & விமர்சகர் 'மதன்' அவர்களின் விகடன் கேள்வி-பதில் பகுதிகளின் ரசிகன் நான். அவரது நடைகளை அவரது புத்தகத்தில் வியந்திருக்கிறேன். அதே போல், அவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதுகிறார் என்று தெரிந்ததும், இந்தப் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன். ஆவல் வீண் போகவில்லை...

கல்லூரி வகுப்பை கட்டடித்துவிட்டு பாரத் தியேட்டரில் பார்த்தேன்.

இந்தப் படம் ரிலீஸாகும்போது, விஷூவல் ட்ரீட்மெண்ட், அது இது என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார்கள். ஆனால் பார்த்தபிறகு தெரிந்தது, உண்மையில் இந்தப் படம் விஷூவல் ட்ரீட்மெண்ட்தான் என்று.

நான் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, என்னிடம் சிறு சிறு மாற்றங்களை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். அதீத கஷ்டங்கள் வரும் காலக்கட்டங்களில் என்னை நான் நல்லசிவத்தோடு ஒப்பிட்டு நிம்மதியடைவேன். அந்த கதாபாத்திரத்தின் கஷ்டத்தைவிடவா இது பெரிது! என்று தோன்றும், எனக்கருகில் நல்லசிவம் அமர்ந்துக் கொண்டு வாழ்க்கையின் யதார்த்தங்களை போதிப்பதுபோல் தோன்றும்.

னக்கு பிடித்த 10 படங்கள் மட்டுமல்ல, கூட ஒரு இலக்கம் சேர்த்தாலும் மகிழ்ச்சியோடு எழுதுவேன். இருந்தாலும், படிப்பவர்களின் நலன்கருதி 10-த்துடன் நிறுத்திக்கொள்கிறேன்...

சினிமாவை நிஜவாழ்க்கையில் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள்! ஆனால், எனக்குப் பிடித்த இந்தப் படங்களில் வரும் சில கதாபாத்திரங்களை நிஜத்தில் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருப்பதாய் ஒரு சௌகர்யத்துக்காக நம்புவதாய் எழுதியிருக்கிறேன். இதை சில இடங்களில் சுட்டிக்காட்டியிருப்பது அதீதம் என்று தோன்றினால், தயவு செய்து மன்னித்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். என்ன செய்றதுங்க..! சினிமாவின் பாதிப்பு எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸாகவே இருக்கிறது.

இந்தத் தலைப்பைத் தொடருமாறு, இந்த நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்


Signature

Thursday, May 06, 2010

மாயக்கரை - [சிறுகதை]


னநடமாட்டம் நிரம்பியிருந்த அந்த கல்யாண ஹாலுக்குள், ஒரே இரைச்சலாய் ஏதேதோ சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இந்த இரைச்சலிலும் இசைத்துப் பாடத்தெரிந்த  எங்களது ‘சுபராஜகீதம் ஆர்கெஸ்ட்ரா’ குழுவினர், அசத்தலாய் இளையாராஜாவின் இன்னிசையை பாடிக்கொண்டிருந்தனர். நானும் இந்த ஆர்கெஸ்ட்ராவைச் சேர்ந்தவன்தான். பெயர் மாயக்கண்ணன். எனது வேலை, புல்லாங்குழல் இசைப்பது... கொஞ்சம் பாப்புலரான இந்த ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் சேர என் திறமை மட்டும் காரணமல்ல, என் கண்பார்வையின்மையும் ஒரு முக்கியக் காரணம். இந்த ஆர்கெஸ்ட்ராவின் ஓனர், T. கிருஷ்ணகுமார், அவருக்கு என் போன்ற மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை அதிகம். என்போன்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உண்மையில் நினைப்பவர்.

அனுதாபம் காட்டாமல் அன்பு செலுத்துவதில் வல்லவர். இன்று அவர் புண்ணியத்தில் என் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இவரும் வாய்ப்பளிக்காமலிருந்திருந்தால், ஏதாவது ட்ரெயினிலோ அல்லது ரயில்வே ப்ளாட்ஃபாரத்திலோ புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்திருப்பேன்.

இதோ, இன்றைய ரிசப்ஷனின் கடைசிப் பாடலை ஆர்கெஸ்ட்ராவின் பிரத்யேக பாடகர் ஒருவர் பாடிக்கொண்டிருக்கிறார்.

'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா.. குக்கூ.. குக்கூ.. குக்கூ..'

இந்த பாடலில் பெரும்பாலான பகுதி புல்லாங்குழல் கூடவே வந்துக்கொண்டிருக்கும். எனவே என் பகுதியை ரசித்து வாசித்தேன்...

என் வாசிப்புக்கு அடுத்தவர் எப்படி ரசிக்கிறார்கள் என்று என்னால் பார்க்க முடியாவிட்டாலும், உணர முடியும். வாசிக்கும்போது, அந்த பேரிரைச்சலிலும், ஒரு அமைதி நிலவும், அப்படி அமைதி தெரிந்தால், ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். இப்போது அந்த அமைதியை என்னால் உணர முடிந்தது. உற்சாகம் பிறந்தது.

கைத்தட்டலுடன் பாடல் முடிந்தது.

ரசித்து கேட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி கூறி எங்களது ஆர்கெஸ்ட்ரா குழுவினர் மண்டபத்திலிருந்து கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். மேடையிலிருந்து இறங்கும்போது, ஒரு சிலர் கைகொடுத்தனர், ஆணா, பெண்ணா என்று அறியமுடியாது அத்தனை ஸ்பரிசத்துக்கும், மனமார நன்றிகள் சொல்லிக்கொண்டு இறங்கும்போது, தவறி விழுந்தேன். நிறைய கைகள் என்னைத் தாங்கிப்பிடித்து, தூக்கி நிறுத்தியது.

ஆர்கெஸ்ட்ரா ஓனர் பதறி வந்து விசாரித்தார்...

'என்ன மாயா..? என்னாச்சு..?'

'தெரியாம விழுந்துட்டேன் சார்..?' என்றேன்.

'அட என்னப்பா... அடி ஏதும் இல்லியே..?'

'இல்லைங்க..?' என்றேன்.

'சரி, டேய், மாயாவை பத்திரமா கூட்டிட்டு போய் வண்டியில ஏத்துங்க... நான் போய் பேமண்ட் பாத்துட்டு வந்துர்றேன்... இன்னும் 15 நிமிஷத்துல எல்லா சாமானையும் ஏத்தி, வண்டி ரெடியா இருக்கணும்... சரியா..?' என்று மிரட்ட, ஆளுக்கொரு வேலையாய் அனைவரும் இறங்கி செய்தனர். என்னை இரண்டு பக்கமும் இரண்டு பேர் சூழ்ந்து பிடித்துக் கொண்டு பத்திரமாக அழைத்து சென்றனர்.

எனக்கு சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒரு கூட்டத்தில் நாம் வந்து சேர்ந்தது, நான் என்றோ செய்த புண்ணியம்தான் என்று பெருமிதப்பட்டுக்கொண்டே போய் வண்டியில் ஏறி அமர்ந்தேன்.

விடிவதற்குள் ஊர்திரும்ப வேண்டும். நாளை மாலையும் கச்சேரி உண்டு, ஏதோ கோவிலில் என்று நினைக்கிறேன்.

சொன்னபடி 15 நிமிடத்தில் ஓனர் வண்டிக்கு வந்து சேர்ந்தார். எங்கள் அனைவருக்கும் சம்பளக் கவர் கொடுத்தார்.
 
எனக்கான கவர் கொடுத்தார். அதில் கணம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. கண்டிப்பாக நான் வழக்கமாக வாங்கும் பணத்தைவிட, இந்தமுறை அதிகம் கொடுத்திருக்கிறார் என்று புரிந்தது.

வண்டி கிளப்பச்சொல்லிவிட்டு, ஓனர் தனது காரில் கிளம்பச்சென்றார். எங்கள் வண்டியும் கிளம்பியது.

இரவு ஏற்கனவே மணி 11ஐத் தாண்டிவிட்டதாக மண்டபத்தில் ட்ரம்மர் ஜோசப் சொன்னார். இப்போது எப்படியும் 12.30 இருக்கும் என்று தோன்றியது.

'டேய் ஜேசுதாஸ் வாய்ஸ் வழக்கமா ரிஷிதானே பாடுவான் இன்னிக்கு என்ன 'கல்யாண தேன்னிலா...' என்னை பாடச்சொல்லிட்டே..' என்று மணி என்ற பாடகர் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.

'இல்லண்ணா, மாஸ்டர்தான், இன்னிக்கி கொஞ்சம் சேன்ஞ் பண்ணி பாடச்சொன்னார்..'

'உடனே அவர்மேல பழியைப்போட்டுடு..'

'நெஜம்மா சொன்னாருண்ணா..?'
 
'பொய் சொல்லாத... எப்போ சொன்னாரு..?'
 

'ஹஸிலி ஃபிஸிலி பாட்டு போயிட்டிருக்கும்போது...'

இப்படி நண்பர்கள் வண்டியில் பேசிக்கொண்டு வர... இந்த செல்ல சண்டைகளைக் கேட்டபடி நான் அப்படியே தூங்கிப்போனேன்.

முழிப்பு வந்தபோது, வண்டி அமைதியாக போய்க்கொண்டிருந்தது. குறட்டைசத்தங்கள் மட்டும் விதவிதமாய் கேட்டுக்கொண்டிருக்க... நான் எப்படியும், 2 மணி நேரம் தூங்கியிருப்பேன் என்று தோன்றியது.

வண்டி திடீரென்று அங்குமிங்கும் வளைந்து நெளிந்து சடன் ப்ரேக் அடிக்கபட்டு நின்றது...

நான் பதறினேன்... 'என்ன டிரைவரண்ணே..? என்னாச்சு வண்டி S போடுது..?'

'ஒண்ணுமில்லப்பா... கொஞ்சமா கண்ணசந்துட்டேன்..'

'என்னங்கண்ணே..?' என்றேன் கொஞ்சலான மிரட்டலுடன்.

'இரு... வண்டிய ஒரு ஓரமா போடுறேன்... கொஞ்ச நேரம் தூங்குனாத்தான் வேலைக்காகும்... நானும் ஊருக்கு போய் தூங்கிக்கலாம்னு பாத்தா... பிரச்சினையாயிடும்போலருக்கு...'

'வேண்டாண்ணே... கொஞ்ச நேரம் தூங்கணும்போல இருந்துச்சுன்னா தூங்கிடுங்க..' என்றேன்.

வண்டியை ஓரமாக எங்கோ போய் நிறுத்திவிட்டார். மீண்டும் பயங்கர அமைதி...  நானும் தூங்க முயற்சித்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை...

வண்டியை விட்டு இறங்கினேன்...

சில்லென்ற காற்று, இதமாக வீசியது. தூரத்தில் அலைகள் சத்தம்... ஏதோ கடற்கரை சாலையில் பயணப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது.

யாரையாவது எழுப்பிக்கொண்டு, கடல்வரை செல்வோமா என்று தோன்றியது. யாரை எழுப்புவது என்று யோசித்துப் பார்க்க, அனைவரும் தூங்கிக்கொண்டிருப்பதை நினைத்ததும்...  வேண்டாம்... யாரையும் எழுப்ப வேண்டாம்... நாமே செல்வோம். என்று எனது புல்லாங்குழல் வைத்திருக்கும் ஜோல்னாப் பையை எடுத்து மாட்டிக்கொண்டு, அலைகள் சத்தம் வந்த திசையை நோக்கி, செருப்பை மாட்டாமல், வெறும் காலில் நடந்தேன்.

சற்று தூரத்தில், சில்லென்ற மணல் என் கால்களில் படர்ந்தது...

சிலிர்த்தது...

இன்னும் நடக்க நடக்க, அலைகளின் சத்தம் அருகே கேட்டுக்கொண்டே வந்தது. உள்ளுக்குள் பரவசம் பாய்ந்தது.

திடீரென்று காலில் கடல்நீர் பட்டதும் மீண்டும் சிலிர்த்துப்போனேன்....

'ஹ்ஹ்ஹா....'  என்று சிரித்துக்கொண்டேன்.

ஒரு 5 நிமிடம் அப்படியே நின்றேன்... கடலை அனுபவித்தேன்.

ஒரு பத்தடி பின்னால் வந்து மணலில் அமர்ந்தேன். கண்முன் தெரியும் காட்சி எப்படியிருக்கும் என்று யூகிக்க முயன்றேன்... நான் பிறவியிலிருந்தே கண்தெரியாதவன் என்பதால், காட்சிக்கு வடிவம் கொடுக்க முடியவில்லை.. எப்படியெல்லாமோ இருக்கும் என்று மட்டும் தோன்றியது.

மண்டபத்தில் சிலர் இன்று பௌர்ணமி என்று பேசிக்கொண்டார்கள், அப்படியென்றால் நிலா பெரியதாய் வானில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரி எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். பையிலிருந்து புல்லாங்குழல் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.
 
அமைதியான கடற்கரையில் நானும்.... தனிமையும்... எனது புல்லாங்குழலும்...

அந்த இசை.... அலை சத்தத்ததின் பின்னனி இசையோடு சேர்ந்து ஒரு ரம்யமான சூழலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

என்ன பாட்டு வாசிப்பது என்று குழம்பிக்கொண்டிருந்த நேரம், என்னையுமறியாமல், என்னுள்ளிருந்து, ஒரு தனியான ராகம், இதுவரை நான் மனதளவிலும், சேர்த்துவைக்காத ஒரு புது மெட்டு வெளிவந்துக் கொண்டிருந்தது. எப்படி... ஏன்... என்று தெரியாமல் அந்த கடற்கரையோரம் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.

போதும் நிறுத்தினேன். அலைகளின் சத்தம், இன்னும் கொஞ்சம் வாசியேன் என்று என்னிடம் கெஞ்சி கேட்பது போல் தோன்றவே... மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் அதே பரவசம். இந்தமுறை வாசித்துக்கொண்டிருக்கும்போது, யாரோ என் பின்னால் வந்து நிற்பதை என்னால் உணர முடிந்தது. வாசிப்பதை நிறுத்திவிட்டு திரும்பினேன்...

'யாரது..?' என்று கேட்டேன்... அமைதி

'யாராவது இருக்கீங்களா..' என்று மீண்டும் கேட்டபடி கைகளால் துழாவிப் பார்க்க ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.. பதறியடித்த கைகளை பின்னுக்கிழுத்துக்கொண்டேன்...

'கேக்கறேன்ல..? யாரது..?' என்று கேட்க...

'ப்ப்ப்ர்ர்ர்ப்ப்ப்ர்ர்ர்' என்று குதிரை கணைக்கும் சத்தம் கேட்டது...

குதிரையா..? மீண்டும் கைகளை நீட்டி, ஆம்.. இம்முறை குதிரையின் முகத்தை தொட்டேன்... தடவிக்கொடுத்தேன்...

அதுவும் வாஞ்சையாக் என்மீது முகம் உரசியது...

'என்னடா... என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்க... என் பாட்டு கேட்க வந்தியா..' என்று அதனுடன் பேசினேன்...

'ப்ப்ப்ர்ர்ர்ப்ப்ப்ர்ர்ர்' என்று மீண்டும் கணைத்துக் காட்டியது...

எனக்கு அந்த குதிரை மீது ஏறவேண்டும்போல் ஆசையாக இருந்தது. தடவித்தடவி முதுகையடைந்தேன். குதிரை நல்ல உயரம். கட்டுமஸ்தான தேகம். நல்ல ஜாதிக்குதிரை போல் தோன்றியது.

ஒரே எம்பு எட்டி குதித்து அந்த குதிரை மீது ஏறி அமர்ந்தேன். மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டேன்.

குதிரை ஓடாமல், மெல்ல நடந்துசென்றது. என்னை நம் ஆட்கள் தேடுவார்களே என்று எனக்குள் ஒரு சின்ன பயம் தோன்றியது. ஆனாலும் இந்த ரம்யமான சூழலை விட்டுவிட்டு திரும்ப மனம் வரவில்லை...

நான் குதிரை மீது அமர்ந்தபடியே எனது புல்லாங்குழலை எடுத்து எனக்குள் பிரவாகமெடுத்து ஓடும் இசையை புல்லாங்குழல் ஓட்டைகளில் வழியாக  வடித்தெடுத்துக்கொண்டிருந்தேன்.

குதிரை மெல்ல நடக்க நடக்க... அலைகள் சத்தம் அதிகமாகியது. அலைகள் சத்தத்திற்கேற்றபடி நானும் எனது இசையில் வேகம் கொடுத்தேன். இப்போது, அலைகள் சத்தம் என் முதுகுப்பக்கம் கேட்டது. குதிரை மேலும் நடந்துபோய்க்கொண்டிருக்க... அலைகள் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வந்து... ரொம்பவும் தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. குதிரை நின்றது. நான் இசைப்பதை நிறுத்தினேன்.

இறங்கினேன்... குனிந்து தொட்டுப்பார்க்க, ஈரமான பாறைகள் புலப்பட்டது.

'ஏய்... என்னை எங்கே கொண்டுவந்திருக்கே நீ..' என்று குதிரையிடம் கேட்டேன்... அது முகத்தை மட்டும் என் கைகளில் படும்படி ஆட்டியது.

'என்னடா..? என்ன இடம் இது..' என்று மீண்டும் குதிரையிடம் கேட்டபடி முன்னேறினேன். இடத்தை தொட்டுத்தொட்டுப் பார்க்க, ஒரு கல்வெட்டு போன்ற பாறை தட்டுப்பட்டது. அதை தடவிப்பார்க்க அதில் ஏதோ எழுதியிருந்தது...

தடவிப்பார்த்து படிக்க நான் ஏற்கனவே பழகியிருந்ததால்.... படிக்க முயன்றேன்...

'ஆ..ஜா...னு..ப..வ... வி...ர....பு...த்...தி....ர....ஞ....சு....வே..ழ...வ..ம்...ச...' என்று ஏதோ நீண்டுக்கொண்டே போக, என்னால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை...

'என்ன இடம்ப்பா... இது..?' என்று குதிரையைப் பார்த்து கேட்க...

'இது என் இடம்தான்... பயப்படாதீரும்..' என்று திடீரென்று ஒரு பதில் குரல் வந்தது...

'யாருங்க... அது..?'

'நான்தான்... இது என் இடந்தான்..'

'நான்தான்னா... நீங்க யாருங்க... உங்க பேரு... என்ன..?'

'வேழவளவன்..'

'பேரு நல்லாயிருக்குங்க... என் பேரு மாயக்கண்ணன்..' என்றேன்.

'பொருத்தமான பேருய்யா...உம்ம பேரு..'

'நன்றிங்க..'

'நல்லா இசைக்கிறீரு... அதான்... சீலன்-ஐ விட்டு உம்ம கூட்டியாரச்சொன்னேன்.'

'சீலன் யாருங்க..'

'நீர் ஏறி வந்தீரே..'

'குதிரையா..?'

'ஆமாம்..'

'குதிரைக்கு நல்ல பேருங்க...'

'ஹாஹ்ஹா... கொஞ்சம் எனக்கோசம் இசையுமேன்... கேட்டுக்குறேன்..'

'வாசிக்கிறேன்... எனக்கு என்ன கொடுப்பீங்க..?' என்றேன் உரிமையோடு.

'ஹாஹ்ஹா... என்ன வேணும் உமக்கு..?'

'சும்மாதாங்கய்யா கேட்டேன்.. கம்பீரமான குரல்ல, அன்பா கேட்டீங்கள்ல.. அதுக்காகவே இசைக்கிறேங்க..' என்று கூறி மீண்டும் புல்லாங்குழல் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இம்முறை எனது சொந்த மெட்டுக்களுக்கு பதிலாக, இளையராஜாவின் பாடலை ரசனையோடு வாசித்தேன்.

சுமார் 15 நிமிடமாக வாசித்து முடிக்க, நிறுத்தினேன்.

'ஐயா... ரொம்ப நாளாச்சுய்யா இந்தமாதிரி ஒரு இசையைக்கேட்டு.... உமக்கு நான் ஏதாவது கொடுக்கணும்...' என்று அவர் பேசிக்கொண்டிருக்க, எனக்கு பின்னாலிருந்து குரல் கேட்டது...

'மாயக்கண்ணன்..?... மாயக்கண்ணன்...? மாயா..?' இது எனது குழுவின் மணி என்ற பாடகரின் குரல்தான், கூடவே ஏதோ மோட்டர் படகு ஓடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.

'நான் இங்கதான் இருக்கேன்...’ என்று கத்திவிட்டு, மீண்டும் அந்த வேழவளவனிடம் திரும்பி ‘ஐயா... என்னை என் நண்பருங்க தேடுறாங்க... நான் போய்ட்டுவரேங்க... எனக்கு பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..' என்று கூறிவிட்டு திரும்பி நடந்துக்கொண்டிருக்க...

'மாயக்கண்ணன்.. அப்படியே இருங்க... நடக்காதீங்க...' என்று என் நண்பரின் குரல் கட்டளையாக கேட்டது...

'ஏன்..? என்னாச்சு...?' என்று பதிலுக்கு கேட்டேன். ஆனால், மோட்டார் சத்தத்தில் அது அவருக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.... அவர் மீண்டும், 'மாயக்கண்ணன் முன்ன ஒரு அடிகூட எடுத்துவைக்காதீங்க... தண்ணியிருக்கு' என்று சத்தம் போட்டார்...

'தண்ணியா..?' நான் குழம்பினேன்... அப்படியே நின்றிருந்தேன்...

மோட்டார் சத்தம் என்னை நெருங்கும் சத்தம் கேட்டது... அருகில் வந்து அடங்கியது..

'என்ன மாயக்கண்ணன், சொல்லாமக்கொள்ளாம இப்படித்தான் கடலுக்குள்ள இறங்கி இப்படி பாறைமேல வந்து உக்காந்து புல்லாங்குழல் வாசிப்பீங்களா.. நீச்சல் தெரியுமா உங்களுக்கு..?' என்று கேள்விமேல் கேள்வி அடுக்கிக்கொண்டே போனார்...

'என்ன சொல்றீங்க... நான் எங்க நீந்திவந்தேன்... நான் பாட்டுக்கு, கரையில உக்காந்து புல்லாங்குழல் வாசிச்சிட்டு இருந்தேன். ஒரு குதிரை வந்தது... அதுல ஏறி உக்கார, அது இங்க கொண்டாந்து விட்டுருச்சு... ஆனா, தண்ணியில இறங்கவேயில்லியே..' என்று கூறினேன்... படகு கரைபக்கம் திரும்பி போய்க்கொண்டிருந்தது. படகுக்காரன் பேச்சை ஆரம்பித்தான்...

'என்னங்க சொல்றீங்க... நீங்க எங்க இருந்தீங்க தெரியுமா.. கடலுக்குள்ள கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்துல தெரியிற பாறையில நின்னுட்டிருந்தீங்க..' அதெப்படி தண்ணியில நனையாம அவ்வளவு தூரம்... சரி... அதுவும்... குதிரைமேல உக்காந்துபோயிருந்தாலும்... நனையாம எப்படி..?' என்று படகு ஓட்டியபடி குழம்பிக்கொண்டிருந்தான்..

'என்ன மாயக்கண்ணன், நாங்கள்லாம் பயந்துட்டோம். உங்களை காணாம, இந்த லோக்கல் மீனவரோட உதவியோட உங்களை தேடிக்கிட்டிருந்தோம். நல்ல வேளை, உங்க புல்லாங்குழல் இசையை கேட்டுத்தான் நீங்க இப்படி கடலுக்குள்ள நின்னுட்டிருக்கிறது தெரிஞ்சுது.. உடனே இவரோட படகை எடுத்துக்கிட்டு உள்ளே வந்துட்டேன். ஆனா, நீங்க எப்படி டிரஸ்நனையாம..?' என்று அவரும் குழம்பிக்கொண்டிருந்தார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை... அப்படியென்றால் அந்த வேழவளவன் யார்... அந்த சீலன் என்கிற குதிரை யார்... அந்த கல்வெட்டு என்ன... என்று யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தேன்.
 
அந்த மீனவரிடம்... 'நான் நின்னுட்டிருந்த பாறை ஏதும் விசேஷங்களா..? அங்க என்ன இருக்கு..?' என்றேன்

'அதுவா... அந்த பாறையில ஒரு சமாதிக்கோவில் இருக்கு.. யாரோ ராஜாவோட காலத்து சமாதிக்கோவிலாம்.. அப்போ, கடல் அலை ரொம்ப உள்ள இருந்துச்சாம்... அதனால அது கடற்கரை சமாதிக்கோவிலா கட்டியிருந்தாங்களாம். எங்கப்பாரு சொல்வாரு... இறந்துப்போற நம்ம தலைவருங்களுக்கு கரையோரம் சமாதி கட்ற மாதிரி அந்த காலத்துல யாரோ ராசாவுக்கு கட்டியிருக்காங்க... அங்கப்போய் நின்னுக்கிட்டு... என்னங்க நீங்க..' என்று கூற எனக்கு புரிந்துப்போயிற்று...

என் இசையை ஒரு இறந்துப்போன ஒரு ராஜாவின் ஆன்மா கேட்டதை நினைத்து பெருமை படுவதா, இல்லை, பயப்படுவதா என்று தெரியவில்லை... மீண்டும் வண்டிக்கு வந்தடைந்தேன். ஃபோனில் ஓனருக்கு ஒருவர் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்... அனைவரும் நலம் விசாரித்து முடித்து, டிரைவரும் தெம்பாக எழுந்து பேசிக்கொண்டிருக்க... மீண்டும் வண்டி கிளம்பியது...

எனக்கு நடந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டிருக்க.. நன்றாக தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது...

தூங்கிப்போனேன்.

கனவில் அந்த ராஜா... சொன்ன வார்த்தைகள் வந்துப்போனது...

'அருமையான இசை...! உமக்கு பரிசு நிச்சயம் உண்டு..'

தூக்கம் கலைந்தது... ஊர் நெருங்கிவிட்டதை டிராஃபிக் சத்தங்களும், டீசல் வாசனையும் உணர்த்திக்கொண்டிருந்தது.... தூக்கம் கலைந்தாலும், வண்டியின் உலுக்கலில் கண்கள் திறக்க மனம் வராமல் தூங்குவதாக நடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்துக்குமேல் நடிப்பு அலுப்புதட்டவே, மெல்ல கண்களைத் திறந்தேன்.

முதல்முறையாக ஏதோ ஒரு உணர்வு.... கண்கள் கூசியது... கண்களிலிருந்து ஒருவிதமான எரிச்சலால் நீர் வழிந்தது... துடைத்துக்கொண்டு மீண்டும் பார்க்க முயன்றபோது... மீண்டும் ஒரு புது உணர்வு....

'உமக்கு பரிசு நிச்சயம் உண்டு..' என்று காதில் கேட்டது...

கண்களை கசக்கிக்கொண்டு, அகலமாய் கண்கள் திறந்துப்பார்த்தேன்.

முதல் முறையாக உலகம் தெரிந்தது..!

- நிறைவு -


Signature

Sunday, May 02, 2010

பயணத்தில் க்ளிக்கியது - 2 [ஆல்பம்]


றவினர் திருமணத்துக்காக சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வழியில் க்ளிக்கிய புகைப்படங்களில் சிலவற்றை, இங்கு பகிர்ந்துள்ளேன்.

DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : May 01&02, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9

பயணம் இனிதே ஆரம்பம்


வழியில்... விழியில் மாட்டியது


திருமலை அடிவாரம்


மலைப்பாதை துவக்கம்

சபாஷ் போட வைத்த, சாலை மற்றும் காடு பராமரிப்பு


வெயிலில் வாடும் திருமலைக்காடு


தொலைநோக்குப் பார்வை 1


தொலைநோக்குப் பார்வை 2


நீலம் காட்டியபடி சரியும் சாலையோரக் காடு


இறங்கும் வழியில் ஒரு (நீரில்லா) பாலம்


திருப்பதி நகரம், கழுகுப்பார்வையில்


கடவுளின் கைவினைப் பாறைகள்
(சென்னை திரும்பும் வழியில்)


வழியில் - மலைக்க வைக்கும் மலை முகடு
(சென்னை திரும்பும் வழியில்)


சமயச்சின்னம் தாங்கிய ஒரு சங்குப்பாறை


கடந்து வந்த மலை


யணம்..! தொடரும்..!


Signature

Popular Posts