Saturday, April 27, 2013

கூண்டு [சிறுகதை]




2 மணி நேரத்திற்கு முன்னால்...

'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின பணத்தை திருப்பி கொடுத்துடு.. இல்லன்னா நடக்கிறதே வேற..' என்று காளிதாஸ் தான் இருக்குமிடம் ஹாஸ்பிடல் அறை என்பதையும், தான் ஒரு பேஷண்டிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து கத்திக்கொண்டிருந்தான். அவ்வளவு கோபம்...

ஆனால் அவனுக்கெதிரே பேஷ்ண்டாய் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த கணேஷிடம் அவன் கோபத்தை சட்டை செய்யாத ஒருவிதமான ஏளனம் தெரிந்தது.

'காளி நீ எப்டி கேட்டாலும் என்னான்ட இப்ப பணமில்ல...'

'கடங்கார நாயே... 2 லட்சத்தை திருப்பிக் கொடுக்க வக்கில்லாத உனக்கெல்லாம் எதுக்குடா xxxxxxxxxx' என்று காளி மேற்கொண்டு பேசியதை டைப் செய்ய முடியாதளவிற்கு கொச்சைத்தனம் நிரம்பியிருந்தது

அதை கேட்ட கணேஷிற்கு தன்னிலை மறந்து கோபம் வந்தது... கட்டிலிலிருந்து எழுந்துவிட்டான்... உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ சகிதங்களையும் மறந்து தன்னிடம் மிச்சமிருந்த கொஞ்சநஞ்ச சக்தியையும் பிரயோகித்து காளிதாஸின்மீது கோபமாய் பாய்ந்தான். அந்த அறையில் அடிதடி நடந்தேறியது... 


2 மணி நேரத்திற்கு பிறகு

அந்த ஹாஸ்பிடலின் 7வது தள லிஃப்ட் தனது நீண்டவாயை திறந்து கொண்டது.

உள்ளே ஒரு குடித்தனமே நடத்தலாம் என்றளவுக்கு பெரிய இடம்கொண்ட லிஃப்ட் அறை கண்கூசாத ட்யூப்லைட் வெளிச்சத்துடன் வரவேற்றது.

வார்டுபாய் நிதின் தான் தள்ளிவந்த ஸ்ட்ரெட்சருடன் உள்ளே நுழைந்தான்... ஸ்ட்ரெட்சரில் பிணமாய் கணேஷ்...

வார்டுபாய் நிதின், லிஃப்டில் "G" என்ற 'கிரவுண்டு ஃப்ளோருக்கு' அழைத்து செல்லும் பட்டனை அழுத்த.. லிஃப்ட் வாயை மூடிக்கொள்ள பார்த்தது. திடீரென்று லிஃப்ட் கதவுக்கு நடுவே ஒரு அழகான கையும் ஒரு ரிப்போர்ட் ஃபைலும் உள்நுழையப் பார்க்க லிஃப்ட் மீண்டும் மூடிய வாயை திறந்துக் கொண்டது.

அந்த அழகான கை... நர்ஸ் 'ஸ்வேதா'வுடையது. கைமட்டுமல்ல... அவளும்தான் அழகு... நிதினை பார்த்தும் பார்க்காத்துபோல் வேறுபக்கம் திரும்பிக் கொண்டு ஏற்கனவே அழுத்தியிருந்த "G" பட்டனை மீண்டும் அழுத்தினாள்.

இந்தமுறை கதவு முழுவதுமாய் மூடிக்கொள்ள லிஃப்ட் தனது டிஸ்ப்ளேயில் '7' என்ற பட்டனுக்கு அருகில் ஒரு கீழ்நோக்கு அம்புக்குறியை காட்டியபடி கீழிறங்கியது. லிஃப்டுக்குள்ளே ஏ.ஆர்.ரஹ்மானின் 'காதல் ரோஜாவே' என்ற பாடலின் இன்ஸ்ட்ரூமெண்ட்டல் பாடல் மெலிதாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

வார்டுபாய் நிதின்... தனக்கருகே இருக்கும் ஸ்ட்ரெட்சருக்கு மறுபுறம் நின்றிருந்த நர்ஸ் ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குள்ளே ஓடும் காதல் எபிசோடுக்கு சொந்தக்காரி அவள்.

நிதின் அந்த ஹாஸ்பிடலில் கடந்த 4 மாதங்களாய் வார்டுபாயாக வேலை செய்துவருபவன்.

அவன் வேலைகு சேந்த அன்று, 4வது தளத்தில் ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன்-ஐ சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டு, 4வது தளத்திற்கு வந்தடைந்தான். யார் அந்த சரவணன் என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த போது. இதே லிஃப்டுக்குள்ளிருந்து ஒரு அழகான நர்ஸ் வெளியேறினாள். (ஸ்வேதாதான்) அவளை பார்த்ததும் நிதினுக்கு இந்த ஹாஸ்பிடல் மிகவும் பிடித்துப் போனது. அவளிடம் சென்று  ஃப்ளோர் இன்சார்ஜ் எங்கேயென்று கேட்கலாம் என்று லிஃப்ட்-ஐ நெருங்கவும். அவள் இவனிடம் 'சார் இங்க ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன் எங்கேயிருக்காருன்னு தெரியுமா..' என்று கேட்டாள். நிதின் சிரித்துவிட்டான்.

பின் இருவரும் சேர்ந்து சரவணனை கண்டுபிடித்தனர். ஆனால், அதன்பிறகு அவளுக்கும் நிதினுக்கும் வெவ்வேறு ஷிஃப்ட்-இல் வேலை வாய்த்தது... இவன் வேலை முடிந்து வரும்போது, அவள் வேலையிலிருந்து கிளம்பிக்கொண்டிருப்பாள். அல்லது அவள் வேலைக்கு வரும்போது இவன் ஷிஃப்ட் முடிந்து வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருப்பான். இதனால் ஸ்வேதாவிடம் சகஜமாக பேசி பழக முடியாத நிலை. இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. இவளிடம் தனக்கிருக்கும் ஈர்ப்பு காதல்தான் என்று தனக்கு தெரிந்தாலும், அதை எவரிடமும் பகிர்ந்துக் கொள்ள தைரியமும், சந்தர்ப்பமும் கிடைக்காத ஒரு அசௌகரியமான நிலையில் நிதின் இருந்துவந்தான். ஆனால் இன்று...

இதோ... ஸ்வேதா அவன் எதிரே... யாருமில்லாத இந்த அறையில்... யாருமில்லை என்று சொல்ல முடியாது. தன் முன்னே ஒரு பிணம் அதுவும் கொலை செய்யபட்ட பிணம்... அதனால், நிதினின் மனம், பேசு.. பேசு.. ஸ்வேதாவிடம் உன்னைப்பற்றி ஞாபகப்படுத்தி அறிமுகமாகிவிடு... இம்முறையும் தவறவிட்டால் பிறகு சந்தர்ப்பம் கிடைப்பது அரிதாகிவிடும்.

இதற்குள் லிஃப்ட் டிஸ்ப்ளேயில் 5வது தளம் என்று வந்து கீழ்நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. சே.. என்ன இது அவசரம் அதிகபட்சம் பத்து அல்லது இருபது விநாடியெல்லாம் ஒரு சந்தர்ப்பமா.. அவளிடம் பேச நான்கு மாதங்களாக காத்திருந்த எனக்கு இந்த இருபது விநாடிகள்தான் சந்தர்ப்பமா... கடவுளே என்வரையில் நீ ஒரு கஞ்சன். ஒரு PAUSE பட்டன் அழுத்தி என் வாழ்க்கையை இந்த இடத்திலேயே கொஞ்சம் நிறுத்திவைக்கக் கூடாதா என்று அவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கரண்ட் கட் ஆனது... 

ஆண்டவன் செயலல்ல... அரசாங்கத்தின் செயல்...

லிஃப்ட் நின்றது.. உள்ளேயிருக்கும் வெளிச்சம் அணைந்து எமர்ஜென்சி லைட் எரிந்து மிதமான வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

நிதின் சுற்றும் முற்றும் பார்த்து ஸ்வேதாவை பார்த்தான்.. அவளும்தான். 

'இது ரெகுலர் பவர்கட்டா?' என்றாள்.

'ஆஆமாங்க.. 12 to 2' என்றான்

'ஜெனரேட்டர் போட்டுருவாங்கதானே..' என்றாள்

'ஆ...' என்றான்

போடாமல் இருந்தால் நன்றாயிருக்கும் என்றது மனம்.

ஒரு இரண்டு நிமிட மௌனம்.

நேரம் கிடைக்கவில்லை என்று காத்துக்கிடந்தவன் இரண்டு நிமிடத்தை வீணாக்கிவிட்டோமே என்று நினைத்துக் கொண்டான்.

'நீங்க ஸ்வேதாதானே..?' என்றான்

'ஆமா.. உங்களுக்கெப்படி தெரியும்..?'

'என்னங்க... என்னை மறந்துட்டீங்களா..? ரெண்டு பேரும் ஒன்னாத்தான் இங்க வேலைக்கு சேர்ந்தோம்... ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணனை-ஐ ஒண்ணா தேடிட்டிருந்தோமே..?' என்றான்

'ஆ... ஆமாமா... இப்ப ஓண்ணா லிஃப்ட்ல மாட்டிட்டிருக்கோம்..' என்று சொல்லி சிரித்தாள்

கொள்ளை கொள்ளும் சிரிப்பு... போதும்... இது போதும்... கடவுளே... இந்த லிஃப்டில் மேலும் ஒரு பிணம் விழாமல் பார்த்துக்கொள்... 

'அழகா சிரிக்கிறீங்க..' என்றான். ஆனால், அவள் பதிலெதுவும் கூறாமல், ஸ்ட்ரெட்சரில் முகம் போர்த்தியிருந்த பிணத்தை கொஞ்சமாய் போர்வை விலக்கி பார்த்தாள்.

'என்னாச்சு..?'

'இந்தாளு செம கதை... ஹார்ட் பேஷண்ட்.. இவனை பாக்க வந்த விசிட்டருக்கும் இவனுக்கும் ஏதோ தகராறாம்... இரண்டும் அடிச்சிக்கிட்டாங்க... பேஷ்ண்ட் கீழ விழுந்து அதிரிச்சியல் போயிட்டான்... கொன்னவன் ஆள் எஸ்கேப்... ஹாஸ்பிட்டல் ஃபுல்லா தேடிட்டாங்க.. ஆள் எங்கேன்னே தெரியல..'

'நம்ம ஹாஸ்பிட்டல்ல இப்படி ஒரு கொலையா.. கடவுளே..! போலீஸ் வரலையா..?'

'வந்து ஃபோட்டோல்லாம் எடுத்தாங்க... ச்சீஃப் டாக்டர்ட்டல்லாம் பேசிட்டு போனாங்க... பாடிய ஜி.எச்.க்கு கொண்டு போகணுமாம்... கீழ ஒரு கான்ஸ்டபிள் மட்டும் நிக்கிறாரு..' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரெட்சர் லேசாக ஆடியது... இருவரும் அதிர்ந்தனர்.. பிறகு பிரமை என்று சுதாரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

சிரிப்பொலியுடன் லிஃப்டின் ஃபோன் ஒலித்தது

'ஹலோ..'

'உள்ளே யாரிருக்கீங்க..?'

'சார் நான் வார்டுபாய் நிதின்.. கூட நர்ஸ் ஸ்வேதா இருக்காங்க..'

'டெட்பாடி எங்கே..?'

'அதுவும் லிஃப்ட்லாதான் இருக்கு... ஜெனரேட்டர் இன்னும் போடலியா சார்..?'

'இங்க ஒரு ப்ராப்ளம்.. நேத்து ராத்திரி ஜெனரேட்டர் சர்வீஸ் பண்ண வந்தவங்க... மினிம்ம் பேக்-அப் மட்டும் கொடுத்துட்டு, 4ல இரண்டு லிஃப்ட்க்கு ஜென் பவர் போகாதுன்னு அட்மின்கிட்ட சொல்லிட்டு போயிருக்காங்க.. அந்தாளு ரிப்போர்ட் பண்ணாம போயிட்டான். நீங்க இருக்கிற லிஃப்ட்டும், பக்கத்துல காலியா ஒரு லிஃப்ட் மாட்டிக்கிச்சு... லோக்கல் எலக்ட்ரீசியன்கிட்ட சொல்லியிருக்கோம். வந்துருவாரு.. வந்ததும். லைன்-ஐ மாத்தி கொடுத்து லிஃப்ட்-ஐ ஆன் பண்ணிடலாம். அதுவரைக்கும் பத்திரமா இருங்க..' என்று கூறிவிட்டு ஃபோனை வைத்தான்.

கடவுள் லிஃப்டுக்குள்தான் இருக்கிறாரோ.. நாம் எண்ணப்படி நடக்கிறதே என்று நிதின் ஆச்சர்யப்பட்டான். விஷயத்தை ஸ்வேதாவிடமும் சொன்னான்.

மீண்டும் இரண்டு நிமிட மௌனம்.

'உங்களுக்கு எப்படி என்னை கரெக்டா ஞாபகம் இருக்கு..?' என்று கேட்டாள்

'இவ்ளோ அழகான ஒரு பொண்ணை அவ்ளோ சீக்கிரமா யாராவது மறந்துருவாங்களா என்ன..?!' என்றான். வெட்கப்பட்டு சிரித்தாள்

இதுதான் சமயம்... சொல்.. சொல்லு.. சொல்லிவிடு... மனக்குரல் கேட்டுக்கொண்டேயிருக்க...

'நான்... நான்... உங்களை ரொம்ப லவ் பண்றேங்க..' என்றான்

அவள் முகம் குழப்பமாய் மாறியது...

'கோவிச்சுக்காதீங்க ஸ்வேதா.. எனக்கு தெரியும்... நான் உங்களை லவ் பண்றது தப்புதான்... ஆனா, உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு... நாலு மாசமா உங்ககிட்ட பேசணும், எப்படியாவது ஃப்ரெண்டாயிடனும்னு நிறைய முயற்சி பண்ணேன். சேன்ஸே கிடைக்கல... உங்களை பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்... உங்க பேரு.. நீங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல்-னு.. ஆனா உங்ககூட பேசதான் வாய்ப்பே கிடைக்கல.. இன்னைக்கு கிடைச்சிடுச்சி'

'உங்க பேரென்ன..?'

'நிதின்'

'நிதின்... நான் உங்கள திட்டவோ, இல்ல கம்ப்ளைண்ட் பண்ணவோ போறதில்ல... நீங்க உங்களுக்கு பிடிச்சதா சொல்லியிருக்கீங்க.. ஆனா, எனக்கு உங்களை பிடிக்கிறமாதிரி எதுவுமே நடக்கலியே.. முதல் நாள் நாம ரெண்டு பேரும் சேந்து இந்த ஹாஸ்பிடல்ல ஜாய்ன் பண்ணினோம்... நான் நர்ஸ்.. நீங்க வார்டுபாய்... காம்பினேஷன் கொஞ்சம் கஷ்டம். ஆனா எனக்கு பிடிச்சி போச்சுன்னா, என் வீட்ல எந்த பிராப்ளமும் இருக்காது... நான் சொல்றதுதான். ஆனா, எனக்கு உங்களை பிடிக்கணும். பாக்கலாம், இதே ஹாஸ்பிடல்லதான் ஒண்ணா வர்க் பண்ண போறோம். ஏதாவது எனக்கு பிடிக்கிற மாதிரி ஒரு விஷயம் நடக்காமலா போயிடப்போகுது...' என்றாள்

இவள் ஆம் என்கிறாளா இல்லை என்கிறாளா..? புரியாமல் நிதின் விழித்தான்

'நான் கரெஸ்பாண்டென்ஸ்ல படிச்சிட்டிருக்கேன்... எப்படியும் நல்லா வந்துருவேன். ஓரளவுக்கு இங்கிலீஷ்ம் தெரியும். நாம ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துவரும்னு எனக்கு தோணுது... இந்த லிஃப்ட்டுக்குள்ள இப்ப நீங்க என்கூட தனியா இருக்கிறதே ஒரு ஸ்பெஷலா அமைஞ்ச சந்த்ர்ப்பம்தான். உங்ககூட மனசுவிட்டுப் பேச கடவுளா பாத்து அமைச்சிகொடுத்த சந்தர்ப்பமாத்தான் நான் நினைக்கிறேன்'

'இருக்கலாம்... நம்புங்க... ஆனா, எனக்கு பிடிக்கிற மாதிரி ஏதாவது நடக்கணுமாயில்லியா..?' என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் லிஃப்ட் டெலிஃபோன் ஒலித்தது.

'ஹலோ.?'

'நிதின்... நிதின்..'

'ஆமா சார் சொல்லூங்க...'

'நிதின் உள்ள எதுவும் ப்ராப்ளம் இல்லியே..?' 

'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்..'

'நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.  நான் சொல்றதை கவனமா கேளுங்க... இங்க செக்யூரிட்டி கேமிராவுல அந்த மர்டர் பண்ண ஆள் யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம்.. அதவிட முக்கியமான ஒருவிஷயம்... நான் சொல்லப்போறத கேட்டு பதறாதீங்க..'

'என்ன சார்..' என்று அவன் முகம் குழம்பியது

'அந்த கொலைகாரன் இப்ப உங்ககூட லிஃப்டுக்குள்ள இருந்தாலும் இருக்கலாம்னு கெஸ் பண்றோம்..' என்றதும், நிதின் வயிற்றில் ஒரு அமில ஆறு ஓடியதுபோல் இருந்தது. 

'என்ன சார் சொல்றீங்க..?'

'பதற்றமா பேசாதீங்க... கேஷூவலா பதில் சொல்லுங்க... நீங்க டெட்பாடிய தள்ளிட்டு வந்திருக்கிற ஸ்ட்ரெட்சர்ல கீழவரைக்கும் பெரிய துணி மூடியிருக்கா..........'

'அ... ஆமா சார்..' நிதினுக்கு வியர்த்தது... ஸ்வேதா அவனை ஆர்வமாக பார்த்தாள்

'அந்தாளு ஸ்ட்ரெட்சருக்கு பின்னாடி போய் மறைஞ்சிக்கிட்டது ரெக்கார்டு ஆயிருக்கு... அதுக்குள்ள அவன் இருந்தாலும் இருக்கலாம்...'

'சார்ர்ர்..'

'பதறாதீங்க.. உங்ககூட இருக்கிற நர்ஸ் கிட்ட ஏதாவது பேச்சு கொடுத்துக்கிட்டு அப்படியே இருங்க... இங்க லோக்கல் எலக்ட்ரீஷியன் வந்துட்டாரு.. 5 நிமிஷத்தலு லிஃப்ட்-ஐ கீழே இறக்கிடலாம்... கிரவுண்ட் ஃப்ளோர் வந்ததும் ஸ்ட்ரெட்சரை அப்படியே லிஃப்டுல விட்டுட்டு, நீங்களும் உங்ககூட இருக்கிற நர்சும் டக்குன்னு வெளிய வந்துடுங்க' என்று கூறி அவர் ஃபோனை வைத்துவிட

நிதின் ஃபோனை இன்னமும் கையிலேயே வைத்துக்கொண்டு ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்

ஸ்வேதா, 'என்னாச்சு நிதின்...?' என்றாள்

'ஓ...ஓண்ணுமில்ல... ரி..ரிப்பேர் பண்ண்... ணிட்டிருக்காங்களாம்...'

'ஓ.. உங்க முகம் ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி வெளிறிப்போயிடுச்சி...' என்றாள்

நிதின் எச்சில் விழுங்கியபடி குனிந்து டெட்பாடியிருந்த ஸ்ட்ரெட்சரை பார்த்தான்

'இ..இல்லியே..'

'நான சொன்னதை கேட்டு வருத்தப்படுறீங்களா..?' என்றாள்

இவள் என்ன சொன்னாள்.. 'அ..ஆமாம்...' என்றான்

நிதினின் பார்வை மொத்தமும் அந்த ஸ்ட்ரெட்சரிலேயே இருந்தது... ஸ்ட்ரெட்சரில் இருந்த வெள்ளைத் துணி மெல்ல அசைந்து கொடுத்தபடி இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்

'நீங்க ஒருவகையில தைரியமானவர்தான் நிதின்' என்றாள்

அவன் அவளை ஏறிட்டு பார்த்துவிட்டு மீண்டும் குனிந்தான்.

'ஏன் சொல்றேன்னா, நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையனை லவ் பண்ணேன். ஆனா, அதை அவங்கிட்ட சொல்றதுக்குள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டேன். பட் அந்த பையன் சிம்பிளா 'நோ' சொல்லிட்டு போயிட்டான். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். அதனாலதான் நான் உங்ககிட்ட பட்டுன்னு 'நோ' சொல்ல்லை...'

'சரி'

'என்ன சரி... நான் மட்டும் நீங்க சொன்னதை ஒரு இஷ்யூ ஆக்கி கம்பளைண்ட் பண்ணியிருந்தா உங்க வேலையே போயிருக்கும்.. இல்லையா..'

நிதின் குனிந்த நிலையிலேயே 'ஆமாமா... போயிருக்கும்... தைரியம்தான்'. திடீரென்று ஃபோன் மீண்டும் ஒலித்தது

'ஆஆஆஆ..' நிதின் லேசாக அலறிவிட்டான்

'ஹ்ஹ்ஹ்ஹலோ..'

'நிதின்.. நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். ஆர் யூ ஆல்ரைட்'

'ம்ம்'

'இங்க ரிப்பேர் இன்னும் லேட்டாவும்னு நினைக்கிறேன். நீங்க இப்போ 3வது 4வது ஃப்ளோருக்கு நடுவுல மாட்டிட்டு இருக்கீங்க... ஒரு கான்ஸ்டபிள் 4வது ஃப்ளோர் கதவை திறந்து உள்ளே இற்ங்கி உங்க லிஃப்டுக்கு மேலே வருவாரு... உங்க லிஃப்ட் ஃபேனுக்கு மேலே ஒரு துவாரமிருக்கு அதுவழியா துப்பாக்கிய வச்சிக்கிட்டு உங்களுக்கு பாதுகாப்பா இருப்பாரு பயப்பட வேண்டாம்' என்றார்

'சரி சார்..' என்றான்

'இப்ப என்னவாம்', ஸ்வேதா கேட்டாள்

'ஒண்ணுமில்ல... ஒரு கான்ஸ்டபிள்..' என்று கூறி நிறுத்திக் கொண்டான்.

'என்ன..?'

'இல்ல.. ஒண்ணுமில்ல..' என்று கூறிக்கொண்டிருக்க.. இப்போது மீண்டும் ஸ்ட்ரெட்சர் அசைந்தது. திடீரென்று அதனுள்ளிருந்து ஒளிந்திருந்த அந்த கொலைகாரன் வெளியே வந்தான்

'ஆஆஆஆஆஆஆஆஆ' இம்முறை ஸ்வேதா மட்டுமே அலறினாள்

'ஏஏஏஏய்... கத்தாத... ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்' என்றபடி ஒரு ஆபரேஷன் கத்தியை கையில் வைத்தபடி கூவினான்

சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி கடைசியாய் நிதினிடம் திரும்பினான்

'ஏய்... மஜ்னு... ஃபோன்ல பேசுனது யாரு..?'

'எ..எலக்ட்ரீசியன்'

'சார்.. சார்..னு பேசினுருந்தே..'

'நான் எல்லாரையும் மரியாதையாதான் கூப்பிடுவேன்... சார்..' என்றான்

'பொய் சொல்லாத... போலீஸ் கீழே ரெடியா இருக்குன்னு இவகிட்ட சொன்னேல்ல..?'

'ஆமா..'

'நான் இங்கருந்து தப்பிக்கனும்... எனக்கு உதவி பண்ணு... இல்லன்னா..'

'இல்லன்னா..?'

'இதோ உன் லைலாவ கொன்னுடுவேன் என்று அவளை பிடித்து கட்டிக்கொண்டு கழுத்தில் கத்தி வைத்தான்

'ஆஆ' ஸ்வேதா பயந்தாள்

'ஐயோ.. சார்.. ப்ளீஸ். அவங்களை விட்டுடுங்க...' என்றான்

'சும்மா டைம் வேஸ்ட் பண்ணாத.. எனக்கு ஹெல்ப் பண்ணு... அதோ... அந்த ஃபேனுக்கு மேலே கேப் தெரியுது பாரு... ஃபேனை கழட்டிட்டு அந்த கேப்புல என்னை ஏத்திவிட்டுடு... நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.. நீங்க கல்யாணம் பண்ணின்னு நல்லாருங்க... ஏதாவது ராங்கு பண்ணா... நீ கல்யாணம் பண்ணாமலே விதவையாயிடுவே' என்று நிதினைப் பார்த்து கூவினான்

நிதினுக்கு உண்மையிலேயே என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்

'ச..சரி..' என்றான்

ஆனால் ஸ்வேதா தடுத்தாள்... 'நிதின் வேண்டாம்.. இவன் ஒரு கொலை பண்ணியிருக்கான்... இவனுக்கு நாம ஹெல்ப் பண்ணக்கூடாது' என்றாள்

'ஏஏ... ரொம்ப பேசாத... கொரவள துண்டாயிடும்' என்று கத்தியை அழுத்தினான்

'ஆஆஆ...'

'டேய்.. பொம்பள பேச்ச கேட்டுகுனு தப்பா ஏதாச்சும் பண்ணே... மவனே இவ பொணத்தைத்தான் பாப்பே..' என்றான்

நிதின் யோசித்தான்... எப்படியும் அந்த கான்ஸ்டபிள் கையில் துப்பாக்கியுடன் லிஃப்டுக்கு மேலே வரப்போகிறார். இவனை தப்பிக்க வைத்தாலும், அங்கே இவன் கைது செய்யபடுவான் அல்லது சுடப்படுவான். எனவே, முடிவெடுத்தான்

'சாரி ஸ்வேதா, நான்... ச..சாருக்கு... ஹெல்ப் பண்ணத்தான் போறேன்' என்றபடி ஸ்ட்ரெட்சரை லிஃப்டுக்கு நடுவே இழுத்தான்...

அதன்மேலே ஏறிக்கொண்டு ஃபேனை கழட்டப்பார்த்தான். ஃபேன் எட்டவில்லை... வேறுவழியின்றி பிணத்தின்மேல் ஏறி நின்று ஃபேனை எட்டிப்பிடித்தான்...

'சார்.. உ..உங்க... க..கத்திய கொடுங்க..?' என்றான்

'ஏய்..?'

'ஸ்க்ரூவை கழட்டனும் சார்.. வெறும் கையால எப்படி கழட்டறது' என்றான்

கொடுத்தான்

கத்திமுனைக்கும் ஸ்க்ரூவுக்கும் சற்றே இடைவெளி இருந்தது. குதிகாலை தூக்கி மேலும் எம்பினான்... இன்னும் கொஞ்சம்

கொஞ்சமாய் ஜம்ப் செய்தபடி ஸ்க்ரூவை எட்டினான். பிடிபட்டது.

திருகினான் பிடி தளர்ந்தது

மேலும் பிணத்தின் மேலிருந்தபடி ஒரு குட்டி ஜம்ப் எம்பி பிடித்தான்

ஃபேனில் தொங்கியபடி ஸ்க்ரூவை கழட்டிக்கொண்டிருக்க.. திடீரென்று பிடி தளர்ந்து தொப்பென்று பிணத்தின்மீது விழுந்தான்.

'ஹெஃப்ஃப்ஃப்' என்று கேவலமாக இருமியபடி அந்த பிணம்(?) உயிருடன் எழுந்து அமர்ந்தான்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அனைவரும் ஒன்றாக அலறினார்கள்

'கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..?' என்றான் கொலைகாரன்

'கா.. கா.. காளிதாசு... காளி...' என்று பெருமூச்சு வாங்கியபடி எழுந்தமர்ந்த ex-பிணமான கணேஷ் பேசினான்

"கணேஷ்... முழிச்சிட்டியா... யப்பா... யப்பா...' என்று சந்தோஷப்பட்டான்

தானே கொன்ற ஒருவன் பிழைத்துக் கொண்டதற்கு கொலைகாரன் சந்தோஷப்படும் அந்த அதிசய காட்சியை ஸ்வேதாவும், நிதினும் பார்த்தவண்ணமிருந்தனர்

காளிதாஸ் தொடர்ந்தான், 'கணேஷ் என்னை மன்னிச்சிடுப்பா, நான் உன்னை கொன்னது தப்புதான், என்னதான் கந்துவட்டி விடுறவனா இருந்தாலும், கொலையெல்லாம் நான் செஞ்சதேயில்லப்பா, உன்ன கொன்னுட்டு அழாத குறையா, போலீஸ்கிட்ட மாட்டிக்குவோமோன்னு பயந்துட்டிருந்தேன். அப்படி மாட்டியிருந்தா என் பொண்டாட்டி பசங்க கதி என்னாயிருக்கும், ஊர்ல அவங்களுக்கு எவ்ளோ கெட்ட பேரு... வேண்டாம்பா, என்க்கு நீ பணமே திருப்பி கொடுக்க வேண்டாம். என் வாழ்க்கைய திருப்பிக் கொடுத்தியே அதுவே போதும்' என்றான்

'இல்ல காளி...  தப்பு என் பேர்லதான், சின்னவயசுலருந்தே ஊதாரித்தனமா செலவு செஞ்சி பழகிட்டேன். அதனால கடனும் நிறை ஆயிருச்சு... திருப்பிக் கொடுக்க முடியாம எல்லாரையும் ஏமாத்தினுருந்தேன். நான் செத்ததும், ஒண்ணுமே புரியல, ஒரே கரும்புள்ளியா போச்சு, ஏதோ வெளிச்சம் மாதிரி தெரிஞ்சுது, அந்த வெளிச்சத்தை பாத்ததும் மனசெல்லாம் லேசாகி சும்மா பூ கணக்கா பறந்தேன்... திடீர்னு என் மேல ஒரு பெரிய பாரத்தை தூக்கி வச்ச மாதிரி இருந்துச்சு... அந்த பாரத்தோட என்னால அந்த வெளிச்சத்த எட்டவே முடியல... அந்த வெளிச்சத்தை பாத்ததுலருந்து நான் ஒரு குழந்தை மாதிரியாயிட்டேன்ப்பா... நான் பண்ணதுதான் தப்பு... உன் பணத்தை திருப்பி கொடுத்துடுறேன். சத்தியமா கொடுத்துடுறேன். ஆனா, அந்த வெளிச்சம்..' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்

ஸ்வேதாவும், நிதினும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, லிஃப்ட்-ல் பெரிய லைட் வந்தது. லிஃப்ட் இயங்கியது...

மீண்டும் காதல் ரோஜாவே பாடல் இசை ஆரம்பத்திலிருந்து ஒலிக்க துவங்க

காளிதாஸ் புலம்பினான் 'ஐயோ, கீழே போலீஸ் எனக்காக காத்துட்டிருக்காங்களே..? என்ன செய்ய..' என்று பதறினான்

'காளி சார், அதான் நீங்க கொலையே பண்ணலியே... செத்தவரே பிழைச்சிக்கிட்டாரு.. போலீஸ் என்ன செய்ய போவுது' என்றான் நிதின்

'ஆ...ஆமால்ல..'

'ஆமா காளிதாஸ்... நானே போலீஸ்கிட்ட உன்னிய விட்டுறச்சொல்றேன்..' என்றான்

'விட்டுருவாங்களா..? விட்டுருவாங்களா..? அப்படி விட்டுட்டா.. உங்க ரெண்டு பேரு கல்யாணத்தை நானே ஜாம்ஜாம்னு நடத்தி வைக்கிறேன்' என்று ஸ்வேதாவையும் நிதினையும் பார்த்து சொன்னான்.

இதற்குள் 'கிரவுண்ட் ஃப்ளோர்' என்று கணினி குரல் அழைக்க, லிஃப்ட் திறந்துக் கொண்டது

வெளியே ரெண்டு மூன்று காக்கிச்சட்டைக்காரர்கள் துப்பாக்கியுடன் நின்றிருக்க, அவர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த ஹாஸ்பிட்டல் கூட்டமும் நின்றிருந்தது

மேலும் 2 மணி நேரத்திற்கு பிறகு

ஹாஸ்பிடல் ரிசப்ஷன் டேபிளுக்கு அருகே நின்றிருந்த ஸ்வேதா சிரித்தாள். 

எதிரே வார்டுபாய் உடையிலிருந்து கலர் உடைக்கு மாறியிருந்த நிதின் நின்றிருந்தான்

'ஏன் ஸ்வேதா சிரிக்கிறீங்க..'

'நான் இன்னும் உங்களை லவ் பண்றேன்னே சொல்லலை... அதுக்குள்ள அந்தாளு நம்மளை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னானே..?'

'என்ன ஸ்வேதா... அப்போ உங்களுக்கு என்னை இன்னும் பிடிக்கலியா..?'

'என் உயிர் போவக்கூடாதுன்னு கிரிமனலுக்கே ஹெல்ப் பண்ண துணிஞ்சதால கொஞ்சமா பிடிச்சிருக்கு... பார்க்கலாம்... இன்னும் டைம் இருக்கு... நாம இங்கே ஒண்ணாத்தானே வர்க் பண்ணப்போறோம்..' என்று கூறிக்கொண்டிருக்க, அருகில் ஒருவர் வந்து

'மேடம், லிஃப்ட் சர்வீசுக்கு வந்திருக்கோம்... 4த் ஃப்ளோர் டோர் டேமேஜாமே... ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன் எங்கருக்காரு..' என்றான்


- நிறைவு -


Signature

13 comments:

ராகவ் said...

Nice, interesting, thrilling, suspense, romantic story :)...

ரஹீம் கஸ்ஸாலி said...

சில நிமிடங்கள் நானே அந்த லிப்டில் மாட்டிக்கொண்டதுபோல் ஒரு த்ரிலை உணர்ந்தேன். அருமை.

Madhavan Srinivasagopalan said...

கதை அருமை சார்..
இதுபோல அடிக்கடி எழுதுங்க...

DREAMER said...

வணக்கம் ராகவ்,
படித்து ரசித்து பாராட்டியதற்கு நன்றி...

வணக்கம் ரஹீம் கஸாலி,
லிப்டில் பயணித்தபடி கதையை ரசித்தமைக்கு நன்றி...

வணக்கம் மாதவன் சார்,
மிக்க நன்றி... நிச்சயம் அடிக்கடி எழுதுகிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Unknown said...

hareesh avargale ungal kathaiyil aandavanilley arasiyal endru current cut aanatharku antha edathil kurippitrinthathu nandraga irunthathu matrum nithin kaalidasan mel jump seithu vizunthathum avan uyirudan ezunthathum kathaiyil oru niraivan thiruppam

harshithadolly said...

ungal pathilai endrum avaludan eyhir nokiyum eno varavillai= harishh

DREAMER said...

வணக்கம் காளிதாஸ் கணேஷ்,
கதையின் திருப்பத்தை உங்கள் பெயருடன் தொடர்புடைய கதாபாத்திரங்களினூடே நின்று ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி..!

வணக்கம் ஹர்ஷிதாடாலி,
பதில் சொல்ல என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Unknown said...

Hareesh, back with a bang :)

Sarakaari said...

வணக்கம் ஹரீஷ் நாராயண்
மிகவும் நல்ல சஸ்பெஸ்ன் சிறுகதை....
i am saravanan from coimbatore. i would like to take a good short film.
i wand to make a short film in this story. can you permit me?
my mobile no 8015550002
mail id saravanansagayam@gmail.com
i am waiting for your replay
regards
saravanan

ISR Selvakumar said...

நிறைய வருடங்களாகிவிட்டது, இது போல சுவாரசியமான சிறுகதைகள் வாசித்து. சபாஷ்!

DREAMER said...

வணக்கம் செல்வகுமார்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Aba said...

எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கு. கேணிவனம் எழுதுபோது படிச்சதைவிட இன்னும் பீட்டா இருக்கு. தொடருங்க...

DREAMER said...

வணக்கம் அபரஜிதன்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..!

Popular Posts