Showing posts with label கிரகணம். Show all posts
Showing posts with label கிரகணம். Show all posts

Sunday, April 08, 2012

கிரகணம் : எனது முதல் ஆடியோ சிறுகதை

புத்தகங்கள் படிப்பது பெரும் சுகம்... (ஏனோ பாடப்புத்தகம் மட்டும் தூக்கமாத்திரை...) ஆனால் அதே புத்தகங்களை பிறர் படிக்க நாம் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பது அதீத சுகம்...


சிறுவயதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகம் படித்துக் காட்டும் வழக்கம் இன்று மிக மிக குறைந்தேயுள்ளது. உங்கள் தாய் தந்தையர் தலைமுறையினரை கேட்டுப் பாருங்கள்... அவர்கள் சிறுவயதில் ஏதாவது ஒரு புத்தகத்தை அவரவர் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வாசித்து காட்டியதை சொல்லுவார்கள்.


ஆனால் இந்த அனுபவத்தை இப்போதும் நமக்கு தரவல்லது ஆடியோ புத்தகங்கள்...

புத்தகத்தை கண்ணைச் சுருக்கி மெனக்கெட்டு வாசிக்காமல் காதில் Headphones அணிந்தபடி கேட்டுக் கொண்டிருக்கலாம்... இது போல் புத்தகங்களை கேட்கும்போது ஆரம்பத்தில் சிறிது காலம் தூக்கம் வரும்... பிறகு பழகிவிடும்...

உதாரணம், நாம் ஒரு கதைப்புத்தகத்தை படிக்கும்போது வழக்கமாக நாம் படிக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் கற்பனையில் காட்சிப்படுத்தி பார்த்துக் கொண்டிருப்போம்... அப்போது, படித்தல் காட்சிப்படுத்துதல் என்று இருவேறான செயலை நாம் செய்கிறோம். ஆனால், படித்தலைவிட கேட்டல் என்பது எளிய செயல் என்பதால் அதன் அடுத்த நிலையான காட்சிப்படுத்துதல் இன்னும் விஸ்வரூபமெடுக்கும். இதை ஆடியோ புத்தகங்கள் கேட்டவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

ஆங்கில மொழியில் பல புத்தங்கள் ஆடியோ வடிவில் வந்துள்ளன... நம் ஊரிலும், கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்', சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்', போன்ற சில புத்தகங்களின் ஆடியோ வடிவம் வந்து வெற்றியும் பெற்றுள்ளன..

முயற்சித்து பாருங்கள்...

நம்மூர் ரேடியோவில் முன்பெல்லாம் ஒலிச்சித்திரம் போடுவார்கள்... உங்களுக்கும் அது நினைவிருக்கலாம்... ஒவ்வொரு வாரம் ஒரு படம் என்று போடும்போது, குடும்பத்தில் அனைவரும் வேலைகளை துரிதமாக முடித்துக் கொண்டு ஒலிச்சித்திரம் கேட்க அமர்ந்துவிடுவர்...

அடுத்து திரு.எஸ்.வி.சேகர் அவரது நகைச்சுவை நாடகங்களும்  ஒலிநாடாவில் மிக பிரசித்தம்...

'என்னப்பா இது... பொண்ணுக்கு மீசையெல்லாமிருக்கு..?'

'அது ஒண்ணுமில்லடா... பொண்ணு கொஞ்சம் அப்பா ஜாடை... அதான்..'

இப்படி அவரடிக்கும் சிறுவயதில் (இப்போதும் பல சமயம்) லைட்டை அணைத்துவிட்டு கண்ணைமூடிக் கேட்டுக் கொண்டு இருட்டில் சிரித்த நிமிடங்கள் மறக்கமுடியாதவை.

ரேடியோவிலேயே சிறுகதைகளை வாசித்து காட்டுவார்கள்... அதுவும் இப்போது இல்லை... FMகளில் இது போன்ற ஆடியோ புத்தகங்களை (காப்பிரைட்டுடன் ஆடியோ செய்து) ஒலிபரப்பலாம். மக்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

'ஹாய் மதன்' கேள்வி பதில்களையோ அல்லது சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற புத்தகங்களின் கேள்வி பதில்களையோ FMகளில் நிகழ்ச்சியின் ப்ரேக்குகளுக்கு முன்னோ பின்னோ ஒரு கேள்வி என்கிற விகிதத்தில் வாரம் முழுவதும் போடலாம். ஒவ்வொரு கேள்விபதில்களும் முத்தானவை. FMகளின் சப்போர்ட் இல்லாமல் இது போன்ற ஆடியோ புத்தக கலாச்சாரம் தோன்றுவது சற்று சாத்தியக்குறைவே...

'வாக்கிங்' போகும் நேரத்திலோ, ட்ரெய்னிலோ, பஸ்ஸிலோ பயணிக்கும் நேரம், அல்லது தூங்குவதற்கு முன் என்று ஒரு அத்தியாத்திற்கு ஒரு நாள் என்று நேரத்தை சிறந்த முறையில் செலவிடலாம். இது சாத்தியமானால், படிக்க நேரமில்லாத நம் பரபரப்பு வாழ்விலும் ஒவ்வொன்றாய் பல புத்தகங்களை கேட்டு முடிக்கலாம்.

சவுண்ட் கம்மியாக வைத்து காதுக்கு வசதியான headphonesல் வயது முதிர்ந்து படிக்க முடியாத பெரியவர்களுக்கும் ஆன்மீகம் சம்மந்தமான புத்தகங்களை கொடுத்து கேட்க வைப்பது Hi-Tech புண்ணியம்.

பலருக்கும் (எனக்கும்) விருப்பமான 'பொன்னியின் செல்வன்' நாவலை எப்படியாவது ஆடியோ முறையில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நான் எனது நண்பர்கள் குழுவுடன் 'ஓர் இரவு' திரைப்படம் எடுப்பதற்கு முன் முயற்சித்து கொண்டிருந்தேன்... ஆனால் போதுமான நேரமும் தயாரிப்பு செலவும் கிட்டவில்லை... ஆனால் அதற்குபிறகு, திரு. பாம்பே கண்ணன்  'சிவகாமியின் சபதம்' நாவலை ஆடியோ வடிவில் ஸ்வாதி சாஃப்ட் சொல்யூஷன் ஒருங்கிணைப்பில் வெளியிட்ட செய்தியறிந்து ஆவலாய் சிடியை வாங்கி கேட்டேன். அமோகமாக இருந்தது. நான் 'அம்புலி' திரைப்படத்திற்கு லொகேஷன் பார்க்க போன போது ஊர் ஊராய் சுற்றும் வேளை இந்த 'சிவகாமியின் சபதம்' ஆடியோ புத்தகம் எனக்கு மிகப்பெரியதொரு வரப்பிரசாதமாய் அமைந்தது. 

லேண்ட்மார்க், மியூஸிக் வேர்ல்டு போன்ற ஆடியோ சிடி கடைகளில் வாங்கி கேட்டுப் பாருங்கள்... அல்லது ஆன்லைனில் வாங்குவதற்கு இங்கே க்ளிக்கவும்...

தற்போது இதே குழுவினர்கள் 'பார்த்திபன் கனவு' புத்தகத்தை ஆடியோ எடுத்துக் கொண்டிருப்பதாய் சேதி... கண்ணன் சாரை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும். நிச்சயம் நல்லதொரு முயற்சி...

நான் வலைப்பூவில் எழுதிய முதல் சிறுகதையை ஆடியோ ரீடிங் செய்து முயற்சித்துள்ளேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...



'கிரகணம்' ஆடியோ சிறுகதை... 

இந்த சாம்பிளை திறம்பட ரெக்கார்ட் செய்து இசையமைத்து கொடுத்த இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-க்கும் குரல் கொடுத்த நண்பர்களுக்கும் நன்றி... இதை நாங்கள் 2010ல் ஒலிப்பதிவு செய்தபோது சிறியதாய் இருந்த VIBES என்ற ஸ்டுடியோ தற்போது NXG STUDIO என்று சகல அம்சங்களுடன் விரிவடைந்து.

இந்த சாம்பிளை, எனது நண்பர் ஒருவரிடம் போட்டுக்காட்டி கருத்து கேட்டேன். இது அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே, எனது இந்த சாம்பிளை தன்னுடன் எடுத்துச் சென்று, அவர் பணிபுரியும் ஆன்லைன் சர்வதேச புத்தக விற்பனை நிலையம் ஒன்றில் சொந்த முயற்சியில் போட்டுக் காட்டியிருக்கிறார். இப்போது அந்த நிறுவனம் எனது மற்ற சிறுகதைகளையும் ஆடியோ வடிவில் பதிவு செய்து, ஆடிய புத்தகமாக வெளியிட முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அதை சாம்பிளாக வைத்துக் கொண்டு மற்ற எழுத்தாளர்களிடம் போட்டுக்காட்டி அவர்களது எழுத்துக்களையும் ஆடியோவடிவில் கொண்டுவர முயல்வதாக கூறினார்... திரைப்பட வேலைகளின் நடுவே இதை எந்தளவுக்கு எடுத்து விரைவில் செய்ய முடியும் என்று தெரியவில்லை... இருந்தாலும் நிச்சயம் இந்த ஆடியோ கலாச்சாரத்தை கொண்டு வர நம்மாலான பங்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையுள்ளது.

எனது சுற்றுவட்டாரத்தில் எனக்கு தெரிந்தவர்கள் எழுதியுள்ள புத்தகங்களை ஆடியோ வெர்ஷன் செய்யுமாறு வலியுறுத்தி வருகிறேன். சிலர் முன்வந்து ஸ்க்ரிப்ட்-ஐ டிஜிட்டைஸ் செய்துக் கொண்டிருக்கின்றனர்...

நீங்களும் முயற்சிக்கலாமே..!


Signature

Popular Posts