Thursday, September 02, 2010

"கேணிவனம்" - பாகம் 10 - [தொடர்கதை]



பாகம் - 10

இரவு 7 மணி...

ANCIENT PARK-ல் வாடிக்கையாளர்கள்... கூடத்தில் அங்குமிங்கும் புத்தகங்களில் முகம் புதைத்திருந்தனர். ஒருவிதமான அமைதி அந்த கூடத்தில் கனத்துக்கொண்டிருந்தது.

லிஷா சடாரென்று அவசர அவசரமாக ANCIENT PARKக்குள் நுழைந்தாள். அவள் அப்படி அவசரமாக நுழைந்ததை, அங்கே கூடத்தில் புக் படித்து கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்கள் கவனம் கலைந்தவர்களாக அவளை மிதமாக முறைத்தனர். அவள் அவர்களை சட்டை செய்யாமல் அங்கிருந்து, தாஸின் ஆஃபீஸ் அறைக்கு சென்று கதவை பதற்றத்துடன் திறந்தாள்... அறை காலியாக இருந்தது...

கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்தாள்... அங்கும் காலியாக இருந்தது... பிறகு டைனிங் ஹாலுக்கு சென்று அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக பார்க்க, பின்புறமிருக்கும் "பீச் வியூ பூங்கா" தெரிந்தது... அங்கே தாஸூம், சந்தோஷூம் சிகரெட் பிடித்தபடி பார்க் பெஞ்ச்சில் அமர்ந்திருப்பதும் தெரிந்தது. உடனே, அங்கிருந்து வேகமாக படியில் இறங்கினாள்.

பின்பக்க வாசல் வழியாக இறங்கி பார்க்கில் இருவரையும் சமீபித்து வந்து நின்றாள்.

'தாஸ், சந்தோஷ்... எங்கூட வாங்க... ஒரு முக்கியமான விஷயம் பேசனும்..' என்று பரபரத்தாள்.
சூழலை ரசித்து புகையை உள்வாங்கிக்கொண்டிருந்த இருவரும் அவளை ஏளனமாக பார்த்தனர்...

சந்தோஷ் அவளிடம், 'ஏன், இங்கேயே பேசேன்..?' என்று நக்கலாக கூற

அவள் பொறுமையிழந்தவளாக அவர்களை நெருங்கி வந்து, அவர்கள் வாயிலிருக்கும் சிகரெட்டை உரிமையோடு பிடுங்கி தூர எறிந்தபடி...

'இப்ப வரப்போறீங்களா இல்லியா..?' என்று முறைத்துக் கேட்க...

இருவரும் அவளை சற்றே மிரட்சியுடன் பார்த்தபடி அங்கிருந்து எழுந்தனர்.

--------------------------

கான்ஃபரன்ஸ் ஹாலில் மூவரும் அமர்ந்திருக்க... லிஷா தொடர்ந்தாள்...

'தாஸ்... நான் ரிச்சர்ட்-ஐ போய் சந்திச்சிட்டு வந்ததுல பல விஷயம் தெரிஞ்சிருக்கு..'

'என்ன லிஷா..?'

'நாம இத்தனை நாளா கிணறு-ன்னு நினைச்சது வெறும் கிணறில்ல..?'

'பின்ன..?'

'அது ஒரு வார்ம்ஹோல்(wormhole)..!' என்று கூற... தாஸூம் சந்தோஷூம் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்...

'வார்ம்ஹோல்னா..?' என்று சந்தோஷ் கேட்க... அவனைப் பார்த்தபடி தொடர்ந்தாள்...

'நாம அந்த கிணறு ஒரு டைம் மெஷின்-னு நினைச்சிட்டிருந்தோமில்ல... அது ஒரு மனுஷனால உருவாக்கப்பட்ட விஷயமேயில்ல... இயற்கையாவே உருவாகியிருந்த ஒரு துவாரம்...'

'ஓ..!'

'லிஷா, அந்த ரிச்சர்ட், வார்ம்ஹோல்னா என்னன்னு ஏதாவது விளக்கமா சொன்னானா..?'

'சொன்னான் தாஸ்... நீங்க 4ஆவது பரிமாணத்தைப் (4th Dimensions) பத்தி என்ன நினைக்கிறீங்க..?'

'4ஆவது பரிமாணமா..? மொத்தம் 3தானே இருக்கு..? X Y Z...'

'இல்ல, 4ஆவது பரிமாணம் இருக்கு... அதுதான் டைம்... அதுல நாம எக்ஸிஸ்ட் ஆகத்தான் முடியுதே தவிர, அதுல முன்னுக்கோ இல்ல பின்னுக்கோ போக முடியறதில்ல...'

'லிஷா பேபி, கொஞ்சம் புரியற மாதிரி சொல்லும்மா..' என்று சந்தோஷ் குழம்ப...

'சேண்டி (Sandy)... இதை புரியவைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்டா.  இது... இயற்கையோட இன்னொரு அதிசயம்தான்... இந்த 4ஆவது பரிமாணத்துக்கான வாசல்தான், வார்ம்ஹோல்-ங்கிற துவாரம்... அதாவது... தாஸ் போயிட்டு வந்த அந்த கேணிவனம்...' என்றவள் கூறிமுடித்து தாஸையே பார்த்துக் கொண்டிருக்க... அவன் தொடர்ந்தான்...

'லிஷா? இதுவரைக்கும் வேற யாரும் இதைப்பத்தி ரிசர்ச் பண்ணதில்லியா..?'

'கிட்டத்தட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அத்தனை பேரும் இந்த வார்ம்ஹோலைப் பத்தி மண்டைய பிச்சிக்கிட்டு இருக்காங்களாம்... ஐன்ஸ்டீன்கூட இதைப்பத்தி நிறைய ரிசர்ச் பண்ணியிருக்காராம்... இந்த வார்ம்ஹோல் பத்தி அவரோட தியரி ரொம்ப ஃபேமஸ்.  இந்த வார்ம்ஹோலுக்கு இன்னொரு பேரே 'ஐன்ஸ்டீன் ரோஸன் ப்ரிட்ஜ்'-ன்னு வச்சிருக்காங்க... ஆனா, எல்லாம் வெறும் தியரியாதான் இருக்கு... இதுவரைக்கும் இந்த வார்ம்ஹோல் இருக்குன்னு யாருமே ப்ரூவ் பண்ணதில்லியாம்... இன்னிவரைக்கும் பல பேர் தேடிக்கிட்டு சுத்திக்கிட்டிருக்காங்களாம். இதுவரைக்கும் யாருக்கும் எதுவும் சிக்கலை...' என்று லிஷா கூற...

தாஸூக்கு ஆச்சர்யம் தாளமுடியவில்லை.  இப்படி உலகமே தேடிக்கொண்டிருக்கும் ஒரு அரிய விஷயத்தை அவன் பார்த்தது மட்டுமின்றி ... அதனுள் இறங்கி பயணப்பட்டிருப்பதையும் நினைக்க அவனுக்கு மிகவும் பெருமையாகவும், பயமாகவும் இருந்தது.

'லிஷா... ஆர் யு ஷ்யூர், யாரும் இதை இதுவரைக்கும் கண்டுபிடிச்சதில்லியா..?'

'வெரி ஷ்யூர் தாஸ்... நீங்களும் குணாவும்தான் கண்டுபிடிச்சிருக்கீங்க...'

'இல்ல லிஷா... இதுல எங்க பங்கு ஒண்ணுமேயில்ல... ஒண்ணு யோசிச்சி பாத்தியா..?'

'என்னது..?'

'இன்னிக்கி எவ்வளவோ உயரத்தை எட்டியிருக்கிற மாடர்ன் சைன்ஸ்-னால இன்னமும் கண்டுபிடிக்கமுடியாத ஒரு விஷயத்தை, எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி, நம்ம நாட்டுல வாழ்ந்த மனுஷங்க கண்டுபிடிச்சிருக்காங்க... அதுமட்டுமில்லாம, அதுல தேவைக்கேத்தமாதிரி குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு போற வர்ற மாதிரி கஸ்டமைஸ்டு கண்ட்ரோல்ஸ்லாம் வடிவமைச்சியிருக்காங்க... அதுவும் வெறும் கல்லை வச்சிக்கிட்டு பண்ணியிருக்காங்க... இதையெல்லாம் நினைக்கும்போது... ரொம்பவும் ஆச்சர்யமா இருக்கு... மை குட்னஸ்...' என்று பெருமிதப்பட்டான்.

'பாஸ், இது இப்போ ரொம்ப பெரிய மேட்டரா தெரியுது... பேசாம, இந்த வார்ம்ஹோலோட டீடெய்ல்ஸை ஏதாவது ஒரு ஃபாரின் சைன்டிஸ்ட் கிட்ட சொல்லிடலாம். அவங்க நம்மளை இந்த ஜென்மத்துக்கும் பணக்காரனாக்கிடுவாங்க பாஸ்...' என்று கூற... தாஸ் அவனை சட்டென்று ஏறெடுத்து பார்த்து முறைத்தான்.

'வாட் நான்சென்ஸ்... இது கிட்டத்தட்ட இண்டியன் சீக்ரெட்..'

'என்ன பாஸ் சொல்றீங்க..?'

'ஆமா... ரேடார் எங்கருக்கு, மிலிட்டரி வெப்பன்ஸ் எங்கருக்கு... நாட்டுல எவ்வளவு தங்கமிருக்குங்கிறது மட்டும் இண்டியன் சீக்ரெட்ஸ் இல்ல... நம்ம ஊருல இந்த மாதிரி மிதிக்கல் விஷயங்களும், அதுக்கான ஆதாரங்களும் எங்கேயிருக்கு என்பதும் ஒரு வகையில இந்திய ரகசியம்தான்... இதை வெளிநாட்டுக்கு காட்டிக் கொடுக்கக் கூடாது... ரொம்ப தப்பு... ரொம்ப ரொம்ப தப்பு..' என்று அவனிடம் தீர்மானமாக கூற...

'சாரி பாஸ், ஒரு ஆர்வத்துல சொல்லிட்டேன்...' என்று வருத்தபடும் சந்தோஷின் தோள்களை தாஸ் தட்டிக்கொடுத்தான்.  பிறகு லிஷாவிடம் திரும்பி...

'லிஷா, அந்த ரிச்சர்ட்கிட்ட நீ, கேணிவனத்தை பத்தி அதிகமா டீடெய்ல்ஸ் எதுவும் சொல்லலியே..?'

'இல்ல, அவன்கிட்ட, நான் கதை எழுதப்போறதாவும், அதுக்காக இந்த தகவல்கள் வேணும்னு சொல்லிதான் கேட்டிருக்கேன்..'

தாஸ், லிஷாவின் தோள்களை தட்டியபடி... 'அருமையான தகவல்களை கொண்டுவந்திருக்கே...  லிஷா... எனக்கு இப்ப பயமெல்லாம் ஒண்ணுதான்..'

'என்ன தாஸ்?'

'நாம மூணு பேரும்... இந்த விஷயத்தை வெளியில சொல்லாம கான்பிடன்ஷியலா வச்சிக்கலாம்... ஆனா, குணா ஏதாவது செஞ்சிடுவானோன்னு பயமா இருக்கு..! அவன் எங்க தங்கியிருக்கான், எங்கே வர்க் பண்றான்னு ஒண்ணும் தெரியல... நம்மகிட்ட இருக்கிறது... அவனோட மொபைல் நம்பர் ஒண்ணுதான்... அதைவச்சி ஏதாவது அவனைப்பத்தி டீடெய்ல்ஸ் திரட்டமுடியுமான்னு பாரு' என்று கூற...

'அதுக்கு அவசியமே இல்ல... அவன் எங்க வேலை பாக்குறாங்கிற டீடெய்ல் எனக்கு தெரியும்...' என்று சந்தோஷ் கூற, லிஷாவும் தாஸூம் அவனை அதிசயமாக  பார்க்கின்றனர்...

'எங்கே வர்க் பண்றான்..?'

'கே.ஸி.ஆர் இன்ஃபோடெக்ல வர்க் பண்றான்... அவன் எம்ப்ளாய் ஐ.டி.நம்பர் - 2774' என்று கூற, லிஷா ஆச்சர்யமாக...

'எப்படிடா..?' என்று அவனை பார்த்து கேட்க...

'இன்னிக்கு மதியம், அவன் ஓடிப்போயிட்டான்னு தேடும்போது, உன் கார்ல, அவன் ரயில்வே ஸ்டேஷன்லருந்து கொண்டு வந்த Bag இருக்குன்னு சொன்னேனே நினைவிருக்கா..?'

'ஆமா..?'

'அதுல அவன் ஐ.டி. கார்டு இருந்தது... சிம்பிள்... அதை வச்சிதான் சொன்னேன். ஆனா பாஸ்... நீங்க அவனை பத்தி கவலைப்படாதீங்க... நாளைலேருந்து அவனை நான் கழுகு மாதிரி வாட்ச் பண்றேன். அவன் ஏதாவது சந்தேகப்படுறமாதிரியான மூவ்ஸ் கொடுத்தான்னா... உங்களுக்கு இமீடியட்டா தெரிவிக்கிறேன்.' என்று கூற... இருவரும் முகம் மலர்ந்தார்கள்...

இரவு கூடிக்கொண்டே போகவே... Ancient Park-ல் வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக புத்தகங்களை விட்டுப்பிரிய மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கூடம் முழுவதும் காலியாக இருந்தது...

லிஷாவும், சந்தோஷூம் விடைபெற்றுக் கொண்டு ஒரே பைக்கில் கிளம்ப... தாஸ் கூடத்திற்கு வந்தான். தன்னந்தனியாக அங்கிருந்த புத்தகங்களில் தேடிப்பிடித்து வார்ம்ஹோல் சம்மந்தமாக இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு தனது அறைக்கு நுழைந்து படிக்க ஆரம்பித்தான்.

அதே நேரம்...

குணா, தனது வீட்டில் எதிரே ஒரு பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு சுழலும் ஃபேனை பார்த்தபடி எதையோ யோசித்தபடி ரசித்து குடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்த கோவிலும், அந்த கோவிலில் அவன் செலவழித்த திகில் நிமிடங்களும், அன்று மதியம், அந்த கோவிலைப் பற்றி தெரிந்து கொண்ட செய்திகளும்... அவனுக்கு எதிரிலிருந்த பீர் பாட்டிலுக்குள் மாறி மாறி தெரிந்துக்கொண்டிருந்தது.
எதிரில், டிவியில் ஏதேதோ விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தது... ஆனால், டிவியில் அவன் மனம் லயிக்கவில்லை..!

அன்று மதியம், தாஸிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவந்ததிலிருந்து ஏதாவது செய்துவிட வேண்டுமென்று அவன் மனம் துடித்து கொண்டிருந்தது. அவன் வீட்டுக்கு வந்ததிலிருந்து, மாலை முழுவதும் இணையதளத்தில், 'ஜான் டைட்டர்' என்ற, புகழ்பெற்ற முதல் டைம் டிராவலர் பற்றிய பிரசங்கத்தை முழுவதுமாக அலசிப் படித்திருந்தான்.

ஜான், 2036ஆம் ஆண்டிலிருந்து வந்தவனாக கூறி, இணையத்தில் மிகவும் சுலபமாக புகழ்பெற்றிருக்கிறானே..?! எத்தனை ஸ்பான்ஸர்கள்... கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் மட்டுமே கிட்டும் அந்த நட்சத்திர வாழ்க்கை, இவனுக்கும் கிட்டியிருக்கிறதே..! இப்படியே நாமும் செய்தாலென்ன... எத்தனை நாளுக்குத்தான் இந்த சாஃப்டுவேர் கம்பெனியில், ரெஸெஷன் பிரச்சனைக்கு பயந்துக்கொண்டு வேலை செய்வது... எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை  எப்படியாவது உபயோகித்துக்கொண்டு வாழ்வில் செட்டிலாகிவிட வேண்டும்...

அதற்கு என்ன செய்யலாம்..! இணையதளத்தில், Blog ஒன்றை ஆரம்பித்து, அதில், இந்த கேணிவனத்தை பற்றியும், அந்த கிணற்றில் நான் பயணம் செய்து திரும்பியதைப் பற்றியும் எழுதினாலென்ன..? இல்லை... இல்லை... வலைதளத்தில் போடுவது அவ்வளவு பாதுகாப்பானதில்லை... வேறு ஏதாவது வழியிருக்கும்... யோசி குணா... யோசி... என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது...

கடிகாரம் மணி 10.30... என்று காட்டியது...

அவனுக்கு எதிரே ஓடும் டிவியில், 'மிஸ்ட்ரி டிவி' என்ற சேனலின் லோகோ ஓடிக்கொண்டிருந்தது...

அது ஏனோ அவன் கவனத்தை கலைத்தது...

அந்த 'மிஸ்ட்ரி டிவி' லோகோவை தொடர்ந்து, 'நிஜத்தை தேடி..' என்ற ஒரு நிகழ்ச்சி ஆரம்பமானது... இரவு தோறும் 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி சமீப காலமாக இந்த சேனலில், மிகவும் பிரசித்தி பெற்று வருவதை குணா நினைத்துப்பார்த்தான்... "ஐந்து தலை நாகம் இருக்கும் கிராமம்...", "குரங்குகள் வந்து வழிபடும் மலைக்கோவில்..." என்று இதுபோன்ற அதிசயமான விஷயங்களை காட்டியும் காட்டாமலும் இந்த நிகழ்ச்சி ஏகப்பட்ட பார்வையாளர்களை ஈர்த்திருந்தது.

அன்றும், அந்த நிகழ்ச்சி மிக சுவாரஸ்யமாக ஒளிபரப்பப்பட்டது... அந்த நிகழ்ச்சியை பார்த்தும், குணாவின் மனதில் ஒரு விபரீத எண்ணம் தோன்றியது... நாம் சுலபமாக புகழடைய இந்த நிகழ்ச்சிதான் ஒரே வழி... தாஸூக்கு முன் நாம் முந்திக்கொள்ள வேண்டும்... என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க... நிகழ்ச்சி முடிந்து, இறுதியில் அந்த நிகழ்ச்சிக்கான தொலைபேசி எண்ணும், இமெயிலும் காட்டப்பட்டது. சட்டென்று, தனது மொபைலை எடுத்து அந்த நம்பரை அழுத்தினான்...

அந்த நம்பருக்கு டயல் செய்தான்...

(தொடரும்...)


Signature

22 comments:

kathir said...

nanthan first padichittu comment ealuthanumnu ninaichean.....neenka oru reserchea pannittinka sir

அருண் பிரசாத் said...

நல்லா போகுது தல... தொடருங்கள்

Aba said...

சொன்னோம்லே வார்ம்ஹோல்-னு... (ஆனா அது பூமில இருக்க வாய்ப்பில்ல.. ஏன்னா ஆப்படி ஒண்ணு உருவானா, சுத்தி இருக்கற எல்லாத்தையும் உள்ள இழுத்துக்கும்...) (இரண்டு ப்ளாக் ஹோல்களுக்கிடையிலான இணைப்பே இந்த வார்ம் ஹோல்)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

4ஆவது பரிமாணமா... வார்ம்ஹோல்? வாவ்...என்ன ஒரு தாட்? எக்கசக்கமான டீடைல்ஸ்... great work...
குணா என்ன செய்ய போறான்னு ஒரே சஸ்பென்சா இருக்கு...சீக்கரம் அடுத்த பார்ட் போடுங்க...

Chitra said...

"ஐந்து தலை நாகம் இருக்கும் கிராமம்...", "குரங்குகள் வந்து வழிபடும் மலைக்கோவில்..." என்று இதுபோன்ற அதிசயமான விஷயங்களை காட்டியும் காட்டாமலும் இந்த நிகழ்ச்சி ஏகப்பட்ட பார்வையாளர்களை ஈர்த்திருந்தது.


.....தொடர்கதையில், ஆங்கே ஆங்கே இப்படி உள்குத்தும் வைக்கிறீங்களே! சூப்பர்!

VampireVaz said...

from mystery the tale is veering towards sci-fi... bravo

வேங்கை said...

ஹரிஷ் நீங்க சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க இல்லைனா குணா போன் பண்ணிற போறாரு

இந்த பாகம் - கூர்மை

Anonymous said...

சீமான்கனி said...

அருமை ஹரீஷ் ஜி கற்பனை மாதிரியே தெரியலை ஒவ்வொரு நிகழ்வும் ரீசனபிலா இருக்கு...குணா,தாஸ்,லிசா,சந்தோஷ்...
இவர்களோடு நானும் பயணிக்கிறேன்...ஒரு புது உலகிற்கு...

DREAMER said...

வணக்கம் கதிர்,
முதலில் வந்து படித்திடும் உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் அருண்பிரசாத்,
அடுத்த பாகத்தை எழுத ஆரம்பிச்சிருக்கேன்... இன்னும் 3 நாட்களுக்குள் போட்டுவிடுகிறேன்..!

வணக்கம் கரிகாலன்,
நீங்க கரெக்டா Guess பண்ணியது அருமை..! கதையின் சுவாரஸ்யத்துக்காக வார்ம்ஹோல் பற்றி கொஞ்சம் கூடுதலாக சித்தரிக்க வேண்டியுள்ளது...! பின்னால் வரும் கதாபாத்திரங்கள் விரைவில் இதை வேறுவிதமாக கையாளுவார்கள்..! உங்கள் விளக்கம் மிகவும் உபயோகமாகயிருந்தது. நன்றி!

வணக்கம் அப்பாவி தங்கமணி,
டீடெய்ல்ஸ்களை ரசித்து படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி! அடுத்த பாகம் இன்னும் 3 நாட்களில் போட்டுவிடுகிறேன்..!

வணக்கம் சித்ரா,
தொடரில் இந்த உள்குத்துக்கு எதுக்குன்னா, நானும் 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் இது போன்ற நிகழ்ச்சிகளை(நம்பினால் நம்புங்கள்) இயக்கியிருக்கிறேன் என்ற காரணம்தான்.

வணக்கம் Vaz,
Sci-Fi-தான்... ஆனால் முடிந்தவரை, நம்ம ஊரு Ancient Technolgy-களை சித்தரித்து ப்ரெஸன்ட் பண்ண உத்தேசம்..! உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவினால்... முடிந்தவரை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்..!

வணக்கம் வேங்கை,
அடுத்த பதிவுல இன்னும் ஒரு கேரக்டர் உள்ளே வராரு... அதனால், குணாவை கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்..! இன்னும் 3 நாள்ல போட்டுவிடுகிறேன்..! //இந்த பாகம் - கூர்மை// உங்களின் ஒரு வார்த்தை விமர்சனம் அருமை..

வணக்கம் சீமான்கனி,
குணா, தாஸ், லிஷா, சந்தோஷ் - எல்லார் பேரும் போட்டீங்க... ஆனா, என் பேரை மறந்துட்டீங்களே நண்பா... நானும் உங்ககூட Journey-யில Join பண்ணிக்கிறேன். சீட் பெல்ட் கட்டிக்கொண்டு கிளம்பிவிடலாம்...

-
DREAMER

Ramesh said...

தொடர் ஏற்படுத்தற ஆச்சரியத்தை விட...அதுக்காக நீங்க கலெக்ட் பண்ண டீடெய்ல்ஸ்தாங்க ஆச்சரியப்படுத்துது....கலக்கல் தொடருங்க....

சைவகொத்துப்பரோட்டா said...

உங்கள் உழைப்பிற்கு சபாஷ்!! ஹரீஷ்.

நாடோடி said...

அடுத்த‌ ப‌குதிக்கு வெயிட்டிங் ஹ‌ரீஸ். தொட‌ருங்க‌ள்.

Unknown said...

புதுசு புதுசா நிறைய விசயங்களை தெரிஞ்சுக்க முடியுதுங்க ஹரீஷ்..

சூப்பர் தொடருங்க..

Unknown said...

waiting for the next part!!

Gayathri said...

hai...rombha svarasiyamaapoguthu...continue please

DREAMER said...

வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
டீடெய்ல்ஸ்களை ரசித்து படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
தொடர் வருகைக்கும் வாசிக்குப்புக்கும் மிக்க நன்றி நண்பா..!

வணக்கம் நாடோடி நண்பரே,
அடுத்த பாகம் பாதி முடிந்துவிட்டது... திங்களுக்குள் போட்டுவிடுகிறேன்..!

வணக்கம் பதிவுலகில் பாபு,
இன்னும் நிறைய விஷயங்களை கதை முடிவதற்குள் பகிர்கிறேன். வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் Gomy,
Next Part is half done... will post it by Monday. ThanQ..!

வணக்கம் காயத்ரி,
தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி!

-
DREAMER

செம்மொழியான் said...

வணக்கம் ஹரீஸ், நீங்க இந்த கேணிவனம் தொடருக்காக நிறைய அறிவியல் பூர்வமான விசயங்களை படிச்சு சுருக்கமா தர்ரிங்க. இந்த தொடர் இன்னும் நல்லா விருவிருப்பா போக என் மணப்பூர்வமான வாழ்த்துக்கள்

அன்புடன்
செம்மொழியான்

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
**'இன்னிக்கி எவ்வளவோ உயரத்தை எட்டியிருக்கிற மாடர்ன் சைன்ஸ்-னால இன்னமும் கண்டுபிடிக்கமுடியாத ஒரு விஷயத்தை, எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி, நம்ம நாட்டுல வாழ்ந்த மனுஷங்க கண்டுபிடிச்சிருக்காங்க... அதுமட்டுமில்லாம, அதுல தேவைக்கேத்தமாதிரி குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு போற வர்ற மாதிரி கஸ்டமைஸ்டு கண்ட்ரோல்ஸ்லாம் வடிவமைச்சியிருக்காங்க... அதுவும் வெறும் கல்லை வச்சிக்கிட்டு பண்ணியிருக்காங்க... இதையெல்லாம் நினைக்கும்போது... ரொம்பவும் ஆச்சர்யமா இருக்கு... மை குட்னஸ்...' என்று பெருமிதப்பட்டான்.***
ஆதிதமிழர்களின் படைப்புகள் நமக்கும் அறியாமல் நிறைய புதைந்துகிடக்கின்றன நம்மண்ணில் புகழரியாமலே புதைக்கவும்படுகின்றன
இந்த தொடரின் நாயகன் தாஸ் என் கற்பனைக்கு உங்கள் உருவமே தெரிகிறது ஹரீஷ் ஒரு வேலை இது உண்மையாகவும் இருக்கலாமென்றும் தோன்றுகிறது..........

எஸ்.கே said...

விறுவிறுப்பாக இருக்கு சார். அடுத்து என்ன ஆகுமோ!

Cinema Paiyyan said...

very nice, waiting for next part.. keep rocking hareesh sir

Unknown said...

daily vandhu next part potachanu atleast 4 times check pannitu irukken...very interesting....

DREAMER said...

வணக்கம் செம்மொழியான்,
நம்ம கதையை படித்தால், அதிலிருந்து வாசகர்கள் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் தகவல்களை சேர்த்து வருகிறேன். அதை விரும்பி படித்துவருவதற்கு மிக்க நன்றி!

வணக்கம் தினேஷ்குமார்,
தாஸ் கதாபாத்திரத்துக்கு என் உருவை கற்பனை செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி! தாஸ் எனக்குள்தான் வாழ்ந்து வருகிறார் என்பதால், உங்கள் வாழ்த்தை அவரிடமே தெரிவித்துவிடுகிறேன். வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் எஸ்.கே,
அடுத்த பாகம் நாளைக்கு கண்டிப்பா போட்டுடறேங்க...

வணக்கம் கோபி,
கதையை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

வணக்கம் Gomy,
அடுத்து பாகத்துக்காகவும் நிறைய தகவல்கள் சேர்க்க வேண்டியிருக்கு, அதனால்தான் தாமதம், நாளை மாலை 4 மணிக்கு கண்டிப்பாக போட்டுவிடுகிறேன்.

-
DREAMER

Popular Posts