Friday, April 13, 2012

IMPRESS ME... [சிறுகதை]






---------------------------------------------------------
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்…”
---------------------------------------------------------

டீயில் இனிப்பு ரொம்ப அதிகமாக இருந்தது...

'டீ ரொம்ப நல்லாயிருக்கு..' என்று டீயுறிஞ்சிய கண்ணன், தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் த்ரியாவை பார்த்து பொய் சொன்னான்

அவனருகில் அமர்ந்திருந்த அன்பு (கண்ணனின் நண்பன்) கண்ணனைப் பார்த்து முறைத்தான்.

அவன் முறைப்பின் அர்த்தம் இது டீயா..? பாயாசம்னு வேணும்னா சொல்லு... நல்ல டீய நீ சாப்டதே இல்லையா என்று கேட்பது போல் இருந்தது

த்ரியா கண்ணனின் பாராட்டை பெற்றுக்கொண்டு 'அது நான் வைக்கல... எங்கம்மா செஞ்சது..' என்று அம்மாவை கண்காட்ட... அவள் அம்மா அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள். கண்ணனும் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்

'தம்பி எப்படி..? டீ காஃபி ரொம்ப விரும்பி சாப்பிடுவாரோ..' என்று த்ரியாவின் அப்பா கண்ணனை எடை போட முயன்று கொண்டிருந்தார்.

'அதிகமில்ல சார்... ரொம்ப லிமிட்டா சாப்பிடுவான். அதுவும் ப்ரெண்ட்ஸ்ங்க நாங்க ரொம்ப கம்பெல் பண்ணும்போது மட்டும் லைட்டா சாப்பிடுவான் அவ்ளோதான்..' என்று கண்ணனின் நண்பன் அன்பு உளறினான்

'டேய்... அவர் டீ சாப்பிடுறபத்தி கேட்கறாருடா... நீ வேற ஏதோ சொல்லிட்டிருக்கே' என்று முகத்தில் அவசரமாக புன்னகையை வரவழைத்துக்கொண்டு வருங்கால மாமனாரைப் பார்த்து அசடு வழிந்தான்.

பெண் பார்க்கும் படலம் கண்ணனுக்கு ரொம்ப புதிது... ஒரே சௌகரியம்.. த்ரியாவும் கண்ணனும் ஏற்கனவே காதலர்கள்... கண்ணன் வீட்டில் ஏற்கனவே சம்மதம்... த்ரியா வீட்டில்தான் இன்னும் இழுபறி... எனவே இன்று நடப்பது மாப்பிளையை மாமனார் பார்க்கும் படலம்... இன்றிவன் தேறிவிட்டால்... கல்யாணம் நிச்சயம்...

ஆனால் நிலைமை அவ்வளவு சாதகமாய் இல்லை... கண்ணன், என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான். யார் முகத்தை பார்த்தாலும் அவனை எடை போடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தனர்... யார் கண்ணையும் சந்திக்க தைரியமில்லாமல் டீ உறிஞ்சிக் கொண்டே அவர்கள் ஹாலில் இருக்கும் மீன் தொட்டியை பார்த்தான். அழகாக மீன்கள் கவலையில்லாமல் அங்குமிங்கும் பறப்பது போல் மிதந்துக் கொண்டிருந்தது... அக்காட்சி மனதை சற்றே லேசாக்கியது.

த்ரியா மிகவும் பதற்றமாய் இருந்தாள்...

தன்னைக்காட்டிலும் கண்ணனுக்கு அவள் முகம் பார்க்க கவலையாக இருந்தது... த்ரியாவை நிதமும் சந்தோஷமாய் பார்க்க நினைத்தவன், இன்று தன்னால் அவள் முகம் வாடிப்போயிருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை...

இன்று என்ன நடக்குமோ என்று இருவரின் மனமும் போராடிக் கொண்டிருந்தன...

அங்கிருந்த மௌனத்தை அவன் நண்பன் அன்பு உடைத்தான்

'சார், வரப்போற ‘அப்ரெய்சல்’லருந்து கண்ணன் ரேஞ்சே தனி... கண்டிப்பா இவன்தான் டீம் லீடர்... ப்ரொமோஷன் நிச்சயம்' என்றான்

'இவர் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டா தம்பி..' என்று த்ரியாவின் அப்பா கண்ணனைப் பார்த்து கேட்டார்...

'ஆமா சார்..'

'உங்க பேரென்ன தம்பி..?' என்று அன்பை பார்த்து கேட்டார்

'சார் எ.. என் பேரு.. அன்பு..'

'நீங்க என்ன சம்பாதிக்கிறீங்க..?'

சொன்னான்

'நல்லது... உங்களுக்கு சிகரெட்... லிக்கர்... பழக்கமெல்லாம் உண்டா..?'

அன்பு திணறினான். திரும்பி கண்ணனைப் பார்த்தான்.

கண்ணன் சட்டென்று, 'உண்டு சார்.. ஆனா அவங்கிட்ட ஏன் இதெல்லாம் கேக்கறீங்க..?' என்றான்

'பழைய டெக்னிக்தான்... உன் நண்பனை பற்றி சொல்... உன்னைப் பற்றி சொல்கிறேன்... கேள்விப்பட்டதுண்டா..?' என்றார்

'ஆனா, பொண்ணை எனக்குக்குத்தானே கொடுப்பீங்க..?' என்று அசந்தர்ப்பமாய் கண்ணன் கேட்டுவைக்க... அவர் த்ரியாவைப் பார்த்தார்

த்ரியா மனதிற்குள் கண்ணனை திட்டிக் கொண்டாள் 'ஏண்டா அலையறே... ஒழுங்கா பதில் சொல்லு.. நான் உனக்குத்தான்' என்று சொல்லிக் கொண்டாள்

கண்ணன் சட்டென்று எழுந்தான்... 'பாத்ரூம் எங்கயிருக்கு..' என்று த்ரியாவைப் பார்த்து கேட்டான்... அவள் தன் அம்மாவைப் பார்க்க...

அவள், 'இப்படி வாங்க மாப்ள' என்றாள்…

மாப்ள... ஆஹா... கண்ணன் குளிர்ந்தான்... அவள் சுட்டிக்காட்டிய திசையில் சென்றான். கதவை தாழிட்டுக் கொண்டான். அழாத குறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

நான் என் வாழ்நாளில் இப்படி சொதப்பியதில்லை... த்ரியாவிடம் காதல் சொல்லும்போதுகூட இப்படி பயந்ததில்லை... இந்த இண்டர்வியூ மட்டும் சுமூகமாக முடிந்தால்... நானும் த்ரியாவும் கணவன் மனைவி... நினைத்துப் பார்க்கவே டீயை விட இனிமையாக இருந்தது...  கடவுளே.. என்னால் முடியவில்லை... ஏதேனும் அற்புதத்தை நிகழ்த்து... வீட்டுக்கருகில் இருக்கும் கோவிலுக்கு பாத யாத்திரையாய் நடந்து வருகிறேன்... என்று மனதில் வேண்டிக் கொண்டான்.

மீண்டும் ஹாலில்...

த்ரியாவின் அப்பா 'நீங்க என் பொண்ணை இம்ப்ரெஸ் பண்ண மாதிரி என்னை இம்ப்ரெஸ் பண்ணவேயில்லையே தம்பி... அப்புறம் எப்படி..?' என்று தீவிர சிந்தனையுடன் கூறினார்.

'சார்.. நான் உங்க பொண்ணை நல்லா வச்சிப்பேன் சார்.. ஐ மீன் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வச்சிப்பேன் சார்...' என்றான்... டேய் ஏண்டா உளர்றே என்று உள்ளுக்குள தன்னைத்தானே திட்டிக்கொண்டான்

'இல்ல தம்பி.. லவ் வேற.. லைஃப் வேற...' என்று அவர் கிட்டத்தட்ட இல்லை என்பது போல் பதில்கூறவே, கண்ணனுக்கு வயிறு கலக்கியது... அழுகை வரும்போலிருந்தது.. அருகிலிருந்த மீன் தொட்டியில் மீன்கள் அங்குமிங்கும் தாவித்தாவி அசாதாரணமாய் சுற்றியது... கண்ணனுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது...

ஹாலில் அனைவரும் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு கலவரமாயினர்...

'டேய் தலை சுத்துறமாதிரியில்ல..?' என்றான் அன்பு... இவனுக்கு எப்படி தெரியும் என்று கண்ணன் எண்ணும்போது...

'என்னனங்க பில்டிங் ஆடுது' என்று த்ரியாவின் அம்மா கத்தினாள்... 

'ஹய்யோ... பூகம்பம்... பூகம்பம்...' என்று த்ரியாவின் அப்பாவும் கத்தினார்...

கண்ணன் உஷாரானான்... ஆமாம்... தனக்கு வந்த தலைசுற்றல் பூகம்பத்தால்தான் என்று தெரிந்ததும் சுதாரித்துக் கொண்டு எழுந்தான்...

'வாங்க... வெளிய போயிடலாம்..' என்று அங்கிருந்து அனைவரையும் துரிதமாய் ஃப்ளாட்டை விட்டு வெளியே தள்ளிக்கொண்டு தானும் வெளியே வந்தான்... அது 4ஆவது மாடிக்கட்டிடம்... மற்ற ஃப்ளாட்டுகளிலிருப்பவர்களும் வெளியேறிக்கொண்டிருந்தனர்...

'கீழே இறங்குங்க... சீக்கிரம் சீக்கிரம்..' யாரோ கத்தினார்கள்

அன்பு லிப்ட் பட்டனை அழுத்தினான்

'சார் லிஃப்டு வேண்டாம்... படியில இறங்கிப் போங்க...' மீண்டும் ஏதோ குரல்

'ஏன் சார்... லிஃப்ட் கவுந்துடுமா..?' அன்பு கேட்க

'இல்ல... இது கரண்ட் கட் ஆகுற டைம்...' என்று த்ரியா கூறிக்கொண்டே படியிறங்கினாள். கண்னன் துணிச்சலாய் அவள் கையைப் பற்றிக்கொண்டு அவளை கீழே இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தான்.

அடப்பாவி தன்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கீழே ஓடுகிறானே... என்று அன்பு அவனைத் திட்டிக் கொண்டே இறங்கினான்.

படியில் இறங்கும்போதும் த்ரியாவின் அம்மா இன்னொரு ஃப்ளாட் ஆண்டியிடம் 'அதோ பொண்ணு கைய பிடிச்சிட்டு போறாரே... அவர்தான் மாப்ள..' என்று கூறிக்கொண்டிருந்தாள்...

அதற்கு அந்த ஆண்டி... 'அப்படியா.... பையன் என்ன பண்றான்' என்றாள்

அன்பு எரிச்சலுடன் 'பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டு இருக்கான்...' என்றதும் அந்த ஆண்ட்டி அன்பை பார்த்து முறைத்தாள்... 'சீக்கிரம் கீழே போங்க... அப்புறம் பேசிக்கலாம்' என்று எரிச்சலுடன் இறங்கினான்

அந்த அபார்ட்மெண்டில் இருந்த அனைவரும் வெளியேறினர்... இவ்வளவு பேரும் இந்த அபார்ட்மெண்ட்டில் இருந்தார்களா.... என்றெண்ணும்படி ஒரே கூட்டமாய் இருந்தது... அனைவரும் பயத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர்...

பபுள் டாப்பில் தண்ணீர் குலுங்கியதாம்... டேபிள் சேர் குலுங்கியதாம்... சில பொய்யர்கள், கட்டிலிலிருந்து அந்தரத்தில் 5 ஐடி தூக்கிப்போடப்பட்டார்களாம் இப்படி ஏகத்துக்கும் குரல்கள் காதில் விழுந்துக் கொண்டிருந்தது

ரோட்டில் ஓரமாக மூடியிருந்த கார்-ஐ சுட்டிக்காட்டி ஒருவர் உரக்கமாக... 'அங்க பாருங்க... கார் இன்னமும் ஆடுது...' என்றார்... உண்மைதான் கார் அசைந்துக் கொண்டிருந்தது. அனைவரும் சென்று தொட்டுப் பார்த்தனர்...

ஃபோன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் லைவ் அப்டேட் கொடுத்தார்

'சுமித்ரா தீவுல நிலநடுக்கமாம்..'

'சார் அது சுமத்ரா தீவு..'

'நானும் அதான் சொன்னேன்... சுனாமி வார்னிங்காமே...' என்றார்

இதைக்கேட்ட ஒரு கிழவர் 'அய்யோ சுனாமியா..? கண்ணா..?' என்று வானத்தை பார்த்து புலம்பினார்

‘சொல்லுங்க..’ என்று கண்ணன் திரும்பினான்.

‘உன்னையில்ல...’ என்று த்ரியா அவனை தன் பக்கம் திருப்பி பாவமாக பார்த்தாள்... கும்பலில் இருவரும் சற்று தள்ளியே நின்றிருந்தனர்... கண்ணன் இன்னமும் த்ரியாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். 

கண்ணன் அவளைப் பார்த்து 'ஹே சாரிப்பா..' என்றான்

'விடு கண்ணா பரவாயில்ல... நீ என்ன பண்ணுவே... அப்பாதான் பிடிவாதம் பிடிக்கிறாரே... '

'நான் உன்னை இம்ப்ரஸ் பண்ணதுக்கு ஒரு ரீசன் இருக்கு... அவரை எப்படி இம்ப்ரெஸ் பண்றது..?' என்றான். இதற்குள் த்ரியாவின் அப்பாவும் அம்மாவும் இவர்களை நெருங்கி வந்தனர்

கண்ணன் அவரிடம், ‘ஆர் யூ ஆல்ரைட் அங்கிள்..’ என்று கேட்டான்

அவர் பதிலளிக்காமல் த்ரியாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்...

ரோட்டில் செல்பவர் அனைவரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றார்கள்

‘5 மணிக்கு சென்னையிலயும் சுனாமி வருதாம்..’ என்று யாரோ செல்ஃபோன் கேட்டு ஆருடம் சொன்னதும், கூட்டத்தில் முணுமுணுப்பு அதிகமாக கேட்டது...

‘ரோலண்ட் எமரிஃக் வாஸ் ரைட்... 2012 படத்துல காட்டுனதுதான் நடக்கப்போகுது‘ என்று ஒரு டீன் ஏஜ் பையன் ஆரம்பித்தான்...

‘பிரதர்... அது மாயன்ஸ் சொன்னது... நாட் எம்ரிஃக்...‘ என்று கண்ணன் மறுத்தான்

‘வாட்எவர்..’ என்று புலம்பியபடி அந்த விடலையன் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று அனைவரையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்

‘என்னடா பண்றே.. விழுந்துடப்போறே..?’ என்று ஒருவர் அதட்டினார்

‘ஃபேஸ்புக்ல போடுறதுக்கு ஒரு ஃபோட்டோ..’ என்றான்

‘இந்தவாட்டி சுனாமி வந்தா 30 கி.மீ. கடல் வெளிய வந்துருமாம்... கிட்டத்தட்ட ஆவடி வரைக்கும் பீச் இருக்குமாம்..’ என்று ஒருவர் கிலி கிளப்பினார்

உடனே த்ரியாவின் அம்மா அவர் கணவனைப் பார்த்து... ‘ஏங்க, பேசாம உங்கம்மா வீடு ஒண்ணு ஆவடியில இருக்குல்ல... அங்க போயிடலாம்’ என்றாள்

‘டேய்... கவனிச்சியா... த்ரியாவை நீ கட்டிக்கிட்டா, அந்த பீச் ஹவுஸ் உனக்குத்தான்..’ என்று அன்பு கண்ணனின் காதோரம் கிசுகிசுத்தான்

ஒரு பெண்மனி திடீரென்று... ‘ஐயோ..?’ என்று கத்தினாள்...

‘என்னாச்சு..’

‘என் மாமியார் ரூம்லியே இருக்காங்க... பயத்துல நான் மட்டும் இறங்கி வந்துட்டேன்’ என்று அழுதாள்

‘நல்ல மருமகள்..’ என்று அன்பு சொல்லிக்கொண்டான்...

‘அடக்கடவுளே... அவங்களால இறங்க முடியாதே..! யாராவது போய் தூக்கிண்டு வாங்களேன்..?’ என்று கூறிய அந்த பெண் கூட்டத்தில் இளைஞனாய் இருந்த கண்ணன் பக்கம் திரும்ப

கண்ணன் சுற்றும் முற்றும் பார்த்தான். பலரும் இப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

இம்ப்ரஸ் செய்ய இதுதான் நேரமோ.. என்று மனதில் நினைத்துக்கொண்டு

‘எந்த ஃப்ளாட்டு..’ என்றான்

‘9th ஃப்ளோர் ஃப்ளாட் நம்பர் N7’

‘ஓகே..’ என்று கண்ணன் வீரமாக கிளம்ப, த்ரியா அவன் கைகளைப் பிடித்தாள்

‘த்ரியா.. ஐ வில் பி ஃபைன்... டோண்ட் ஒர்ரி...’

‘வரும்போது அப்படியே என் ஃப்ளாட்லருந்து செல்ஃபோனையும் எடுத்துட்டு வந்துருங்களேன்... விட்டுட்டு வந்துட்டேன்’ என்றாள்.

அன்பு சிரித்தான். கண்ணன் அவனையும் இழுத்துக்கொண்டு ‘வாடா போலாம்...’ என்று வீரமாக அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான்.

அன்றுகாலைவரை கலகலவென்று இருந்த அந்த அபார்ட்மெண்ட்... இப்போது யாருமேயில்லாமல் கரண்ட்டும் இல்லாமல் காலியாக இருந்தது... படிக்கட்டில் மெல்ல ஏறிக்கொண்டிருந்தார்கள்

‘டேய் என்னை ஏண்டா இழுத்துட்டு வந்தே..’ என்று அன்பு கோவப்பட்டான்

‘த்ரியா அப்பாவை எப்படியாவது இம்ப்ரெஸ் பண்ணனும்டா...’ என்றான்

‘நீ உன் ஆளோட அப்பாவை இம்ப்ரெஸ் பண்றதுக்கு என்னை ஏண்டா உள்ளே இழுத்தே... பில்டிங் விழுந்தா மூணு பேரும் கம்ப்ரெஸ் ஆயிடுவோம்..’

‘மூணு பேரா..?’

‘மாடியில இருக்கிற ஆயாவையும் சேத்து சொன்னேன்..’

‘அவங்க ஆயா இல்லடா பாட்டி...’

‘ரொம்ப முக்கியம்... சீக்கிரம் ஏறு..’

ஒன்பதாவது மாடியில் ஃப்ளாட்டிற்குள் நுழைந்தனர்...

அறை திறந்தே இருந்தது...

டிவி ஓடிக்கொண்டிருந்தது... (இண்வர்டர் உபயம்)

டிவியில் LIVE என்று போட்டிருந்தது… கடல் அலை உயரே கிளம்பி ஊருக்குள் புகுந்து கார், பஸ், என எதையும் விட்டு வைக்காமல் துவம்சம் செய்ய… தொடர்ந்து வந்த அலைகள் மக்கள் கூட்டத்தை ஒரே வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு… என்று காட்சி படுமோசமாக தெரிய… 

அன்பு அதைப்பார்த்து பதறினான்... ‘போச்சுடா... 5 மணிக்கு வரவேண்டிய சுனாமி சீக்கிரமா வந்திடுச்சு போலருக்கு...’ என்றான்

கண்ணனும் உறைந்தான்... அடக்கடவுளே... த்ரியாவுடனான வாழ்க்கை வெறும் கனவுதானா...

டிவியில் ‘நேயர்களே இதே போல் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் மீண்டும் சுனாமி வரும் அபாயம் உள்ளது... இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 2004ல் சுனாமி தமிழகத்தை தாக்கிய ஒரு காட்சி..’ என்றான்

அன்பு கடுப்பானான்…

‘அதை ஏண்டா இப்போ காட்றீங்க... தியேட்டர்ல புதுப்படம் பொட்டி வரலைன்னா பழைய படத்தை போடுவாங்கல்ல.. அந்தமாதிரி போடுறாங்க பாரு’ என்று திட்டிக்கொண்டே அன்பு டிவியை அணைத்தான்... 

ஃப்ளாட்டில் கண்ணன் அங்குமிங்கும் தேடினான்... அறையில் பாட்டி கட்டிலில் படுத்திருந்தாள்...

‘இதோ இருக்காங்க.. அப்படியே தூக்கிடலாம் வாடா...’ என்று கண்ணன் அவளை தூக்க போக, பாட்டி கையிலிருந்து ஊசியால் கண்ணனின் கையில் குத்தினாள்

‘ஆஆ...’ என்று விலகினான்

‘என்னடா ஆச்சு..?’

‘குத்துறாங்கடா..? கையில ஊசியிருக்கு ‘ என்றான்

‘டேய்.. யாருடா நீங்க...’ என்று பாட்டி அதட்டினாள்

‘ஐயோ... பாட்டி.. நாங்க உன்னை காப்பாத்த வந்துருக்கோம்..’

‘தனியாய இருக்கிற பொம்பளை கிட்ட கலாட்டா பண்றீங்களா..?’

‘ஆமா... ஈவ் டீசிங் பண்றாங்க... பாட்டி உனக்கே இது ஓவரா இல்ல...’ என்று கண்ணன் அவள் கையிலிருந்த ஊசியை பிடுங்கி தூர எறிந்தான்

‘தூக்குடா பாட்டிய..’  என்று இருவரும் அவளைத் தூக்கி கொண்டு நடக்க...

பாட்டி அவர்களிடம், ‘டேய் இருங்கடா... 5 மணிக்கு டிவியில கைலாச யாத்திரை போடுறாங்க நான் பாக்கணும்..’ என்றாள்

‘5 மணிக்கு கைலாசத்துக்கே போய் பாக்கலாம் பாட்டி... சுனாமி வருதாம்...’ என்றான்

‘என்னடா உளர்றே...’ என்றாள்

‘உனக்கு என்ன வயசு பாட்டி..?’ என்று அன்பு கேட்டான்

'படிச்சவன்தானே நீ... பொம்னாட்டிகிட்ட வயசு கேக்க கூடாதுன்னு தெரியாதா உனக்கு..' என்றாள்

'என்ன ஒரு 90 இருக்குமா..'

‘அடப்பாவி 84தான்டா ஆறது...’ என்றாள்

‘டேய்... நம்ம ரெண்டு பேரு வயசை கூட்டினாலும் இவங்க வயசு வரலை... இவங்களை காப்பாத்துறதுக்கு நம்ம ரெண்டு பேரு உசுர பணயம் வைக்கணுமா..?’ என்றான்

‘டேய் பாவம்டா..’ என்று கண்ணன் கருணை காட்டினான்

திடீரென்று அன்பு கால்கள் குறுகுறுத்தது ஒருவிதமாக அதிர்ந்தது...

‘ஐயோ.. மறுபடியும்... ஆடுது... ஆடுது..’ என்று கத்தினான்

‘என்னடா... என்னாச்சு..’ என்று கண்ணனும் பதறினான்

‘சே.. சாரிடா, பேண்ட் பேக்கெட்ல மொபைல் வைப்ரேட் ஆச்சா... நான் பயந்துட்டேன்’ என்று அமைதியானான்

‘முட்டாப்பய..’ என்றாள் பாட்டி

இருவரும் நாலாவது ஃப்ளோருக்கு வந்தடைந்து த்ரியாவின் ஃப்ளாட்டில் நுழைந்தனர்... கண்ணன் த்ரியாவின் மொபைலை தேடி எடுத்துக் கொண்டான்

அந்த ஃப்ளாட்டின் மெயின் கதவில் ஏதோ வித்தியாசமான எல்க்ட்ரானிக் பூட்டு பொறுத்தப்பட்டிருக்க... அதை ஆர்வமாய் பார்த்த அன்பு ‘என்னடா லாக் சிஸ்டம் இது.. வித்தியாசமாயிருக்கு...’ என்று கூறியபடி கதவை மூடினான். பட்டென்று மிகத்தீவிரமாக அது மூடிக்கொண்டது...

‘என்னடா பண்ணே..?’ என்று கண்ணன் அதிர்ச்சியுடன் வந்து கதவை திறக்க முயல... திறக்க முடியவில்லை... அந்த எலக்ட்ரானிக் நம்பர் சிஸ்டத்தில் கால்குலேட்டர் நம்பர் பேட் போல் எண்களைக் காட்டியது...

‘அடப்பாவி... இது நம்பர் லாக்டா... நம்பர் தெரியாம துறக்க முடியாது...’ என்று கண்ணன் கோபமாக கத்தினான்

‘அழகான பொண்ணு இருக்கிற வீட்டுக்கெல்லாம் இப்போ நம்பர் லாக்-லாம் வைக்கிறாங்கன்னு எனகெப்படிடா தெரியும்..’ என்று அன்பு புலம்பினான்

‘5 மணி ஆச்சாடாப்பா..?’ என்று அந்த பாட்டி விபரீதம் புரியாமல் கேட்டது... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்... திடீரென்று மீன் தொட்டி மீண்டும் ஆட்டம் கண்டது... சுற்றும் முற்றும் பார்க்க... ஹால் மீண்டும் அதிர்ந்தது.

‘அய்யோ... ரெண்டாவது ஷேக்... மறுபடியும் பூகம்பம்..’ என்று அன்பு கத்தினான். கண்ணன் அந்த கதவை திறக்க முயன்று முடியாதவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான்... பால்கனி தெரியவே... ஓடிச்சென்று அதை எட்டிப் பார்த்தான். அந்த பால்கனி, கட்டிடத்தின் பின்பக்கத்தில் அமைந்திருந்தது... ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி... யாரையும் உதவிக்கும் கூப்பிட முடியாது... என்ன செய்யலாம் என்று பயந்த நிலையில் நின்றிருந்தான்..

இம்முறை ஆட்டம் அதிகமாக இருக்கவே... அன்பைப் பார்த்து ‘டேய் உள்ள இருக்கிறது ரிஸ்க்… தூக்குடா பாட்டிய..?’ என்றான்

…………………

அதே நேரம் வெளிப்புறத்தில்... இரண்டாவது முறையாக பில்டிங் அதிர்ந்துவிட்டு பிறகு அமைதியானதைப் பார்த்து வெளியே நின்றிருந்த அனைவரும் அய்யோ.. அய்யோ.. என்று அலறிக்கொண்டிருந்தனர்...

த்ரியாவும் பயத்தில் கிட்டத்தட்ட அழுதுக் கொண்டிருந்தாள்... 

'அழாதேம்மா... வந்துருவாங்க’ என்று அவள் அப்பா தேற்றிக்கொண்டிருந்தார்...

அதோ பாருங்க கார் இன்னும் ஆடுது... என்று மீண்டும் காரை வைத்து நிலநடுக்கத்தை அளந்து கொண்டிருந்தனர்.

‘இரண்டாவது தடவை ட்ரெமர் வர்றது ரொம்ப ஆபத்து... பில்டிங்க்கு உள்ள போனவங்களுக்கு என்னாச்சோ..?’ என்று ஒருவர் சங்கூதினார்...

‘ஐயோ... என் மாமியாருக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவர் என்னை தொலைச்சிடுவார்...’ என்று பாசமான மருமகளும் புலம்பிக்கொண்டிருந்தாள்...

இதைப் பார்த்து மேலும் பொறுமையாயிருக்க மனம் வராமல், த்ரியா அருகிலிருக்கும் ஒருவரிடம் மொபைல் வாங்கி கண்ணன் நம்பருக்கு டயல் செய்தாள். லைன் கிடைத்தது

‘கண்ணா..?’

‘த்...த்... த்ரியா.. சொல்லு..?’

‘எங்கேப்பா இருக்க..? மறுபடியும் நிலநடுக்கம் வந்துச்சு... சீக்கிரமா வெளியே வா..?’ என்றாள்

‘ந... நான் பில்டிங்கலருந்து வெளியே வந்துட்டேன்... ஜஸ்ட் தட்... இ... இன்னும் லேண்ட் ஆகலை..’ என்றான்

‘என்னடா குழப்பறே..?’ என்றாள்

‘உ... உங்க.. ஏரியாவுல எவ்வளவு நேரம் கரண்ட் கட்...?’ என்றான்

‘இப்போ 4.40 ஆகுது... 5 மணிக்கு வந்துடும்...’

‘பெட்டர் 5 மணிக்கே வரட்டும்...’ என்றான்

‘ஏன் கேக்குறே..?’

‘ஏன்னா.. உங்க அபார்ட்மெண்ட் பவர் லைன்லருந்துதான் கி...கீழ இறங்கிட்டு இருக்கோம்..’ என்றான்

‘வாட்..?’

-------------

பாட்டியை கண்ணன் உப்பு மூட்டை போல் தூக்கியிருக்க... மூவரும் அந்த அபார்ட்மெண்டின் பவர் கனெக்ஷன் கொண்டு செல்லும் பைப்லைனில்... டூம் போன்ற பாதையில் இறங்கிக் கொண்டிருந்தனர்... இதற்குள் அங்கு த்ரியாவும் வந்து சேர அவளைத் தொடர்ந்து இன்னும் சிலரும் வந்தடைந்தனர்... மேலே அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்

மணி 4.50...

‘கரண்ட் வர்றதுக்கு இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு... சீக்கிரம் இறங்குங்க..’ என்று ஒருவர் கீழிருந்து கத்திக்கொண்டிருக்க...

கண்ணன் முதுகில் அமர்ந்திருந்த பாட்டி அவன் கழுத்தை இறுகப்பற்றியிருந்ததால் திணறினான்

‘பாட்டி... க... க... கழுத்து....’

‘ஏண்டா... நான் பாட்டுக்கு சிவனேன்னு ரூமுல படுத்துட்டிருந்தேன்... இந்த வயசுல என்னை தூக்கிட்டு போறியே நியாயமா..?’ என்றாள்

‘ஆமா பாட்டி... உன்னை கடத்திட்டு போய் கல்யாணமா பண்ணப்போறோம்... பேசாம வா..?’ என்று அன்பு அந்தரத்திலிருந்தே அதட்டினான்...

‘இன்னும் 8 நிமிஷம்தான் இருக்கு...’ என்று மீண்டும் தரையிலிருந்து குரல்

‘ஏன் சார்... யாரு சார் அது.. ரன்னிங் கமெண்ட்ரி குடுக்கிறது... இ... இங்க சொல்றதுக்கு பதிலா... E.B.ஆஃபீசுக்கு ஃபோன் ப.. பண்ணி சொல்லலாமில்ல..?’ என்று கண்ணன் கூறவே

‘அட ஆமால்ல... இ.பி. நம்பர் உங்கிட்ட இருக்காப்பா..’ என்று கீழே முணகல் கேட்டது...

‘சரியாப் போச்சு..’ என்று மீண்டும் இறங்க ஆரம்பித்தனர்...

ஒருவழியாக தரையைத் தொட்டு பாட்டியை பத்திரமாக இறக்கி விட்டதும்... பட் என்று சத்தத்துடன் கரண்ட் வந்தது... அனைவரும் தன்னையறியாமல் கைதட்டினர்...

மீண்டும் அனைவரும் கூடியிருந்த வெளிப்புற இடத்துக்கு வந்தனர்... வீட்டிற்குள் செல்ல விருப்பமில்லாமல் (பயம்தான்..) அனைவரும் அங்கேயே ஆளுக்கொரு திட்டிலும், மேட்டிலும் அமர்ந்தனர்...

‘சார் டீ..’ என்று ஒருவன் வந்து டீயை நீட்டினான்

‘வேண்டாம்ப்பா..’ என்று கண்ணன் மறுத்தான்

‘சார்... பாட்டிய காப்பாத்தியிருக்கீங்க... இந்த ரோட்லியே இன்னிக்கி நீங்கதான் ஹுரோ... உங்களுக்காகவே சூப்பரா செஞ்ச ஸ்பெஷல் சுனாமி டீ... சார்.. வேண்டாம்னு சொல்லாதீங்க...’

‘சுனாமி டீயா... ஹாஹ்ஹா...’ என்று சிரித்தபடி வாங்கி குடித்தான். அவனது வருங்கால மாமியார் போட்ட டீயை விட நன்றாகவே இருந்தது...

அன்பு அவனருகில் வந்தான்... ‘ஏண்டா... சும்மாயிருந்த பாட்டிய தூக்கி தோள்ல போட்டுட்டு வந்துட்டு... ஹுரோவா  நீ... இதை  வெளிய சொல்லாத…’ என்றான்

இப்போது த்ரியாவின் அப்பா வந்தார்...

‘தம்பி இங்க எதுக்கு உக்காந்துக்கிட்டு... அதான் ஒண்ணும் ஆபத்து இல்லன்னு ஆயிடுச்சே... வாங்க வீட்டுக்குள்ளேயே போய் பேசுவோம்...’

‘இருக்கட்டும் சார்... காலையிலியே உங்களுக்கு ரொம்பவும் தொந்தரவு கொடுத்துட்டேன்... ரொம்ப சாரி சார்... ஆனா மறுபடியும் வருவேன் சார்... உங்களை எப்படி இம்ப்ரெஸ் பண்றதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்... ஏன்னா எனக்கு த்ரியா ரொம்ப முக்கியம்’ என்று அவளையே பார்த்தான்

‘வரவேண்டியது நீயில்லப்பா நாங்கதான்... வாழ்கையே தற்காலிகம்னு ஆயிடுச்சி... இன்னிக்கி வராத சுனாமி வந்திருந்தா... நான் என்னத்தை கட்டிக்கிட்டு போயிருப்பேன்... சீக்கிரமே உங்கப்பா அம்மாவை பாக்க நாங்க வர்றோம்...’ என்று கூற... த்ரியா வெட்கப்பட்டாள்...

‘ஹே..!’ என்று சந்தோஷத்தில் கண்ணனும் குதித்தான்...

கூட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து அனைவரும் மீண்டும் கான்க்ரீட் கூண்டில் சென்று அடைப்பட்டுக்கொண்டதும்...

த்ரியாவும் கண்ணனும் மட்டும் அவர்களின் பைக் பார்க்கிங் இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்...

சற்று தொலைவில் நின்றிருந்த அன்பு... ‘அதான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்கள்ல... போதும் வாங்க கண்ணன் சார்..’ என்று அலுப்புடன் கூப்பிட

‘சரி.. நான் கிளம்புறேன்... பை குட்நைட்’ என்று திரும்பி திரும்பி பார்த்து வெட்கப்பட்டு கொண்டே அன்பு ஏறியிருந்த பைக்-ஐ வந்தடைந்தான்.

த்ரியா உள்ளே சென்று மறைந்தாள்

அன்பும், கண்ணனும் கிளம்பி போகும்போது...

அன்று அடிக்கடி ஆடிக்கொண்டிருந்த அந்த பூகம்ப கார்... மீண்டும் ஆடிக்கொண்டிருந்தது...

அந்த காரை இருவரும் ஆர்மவாக நெருங்க சடாரென்று அந்த கார் கதவு திறந்து கொண்டது... அதிலிருந்து ஒரு புடவை அணிந்த பெண் விறுவிறுவென்று நடந்து எதிரில் இருக்கும் இன்னொரு தெருவில் சென்று மறைந்துவிட... காருக்குள்ளிருந்து கண்ணாடியணிந்த ஒருவன் கீழே இறங்கி சுற்றும் முற்றும் பார்த்து காரை மீண்டும் பூட்டிவிட்டு எதுவும் தெரியாதபடி நடந்து அபார்ட்மெண்டுக்குள் நுழைந்து சென்றான்...

அன்பு கண்ணனைப் பார்த்து ‘இப்ப தெரியுதா… ஏன் ஊருக்குள்ள பூகம்பம்லாம் வருதுன்னு..’ என்றான்

- நிறைவு -



Signature

3 comments:

Raghu said...

//‘ஃபேஸ்புக்ல போடுறதுக்கு ஒரு ஃபோட்டோ..’ என்றான்//

ரொம்பவே அப்டேட்டடா இருக்கீங்க ஹரிஷ்..சாப்பாட்டுல ஈ இருந்தா கூட போட்டோ எடுத்து போட்டுடறாங்க!

அன்பு கேரக்டர் சந்தானத்தை நினைவுபடுத்துது. ஹ்யூமர் நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கு ஹரிஷ் :)

DREAMER said...

வணக்கம் ரகு,
நீங்க ரொம்ப நாளா சொன்ன கேட்டிகரில இன்னிக்குதான் கதை எழுத முடிஞ்சுது... நல்ல வேளை ஹ்யூமரா இருக்குன்னு சொன்னீங்களோ நான் தப்பிச்சேன்... நன்றி..!

bossigloo said...

sema timeing story sir

Popular Posts