Thursday, March 11, 2010

விநோதமாய் ஒரு குற்றம் - [சிறுகதை]


'வேண்டாம்... அவளை விட்டுடு... சுட்டுறாத... ப்ளீஸ்..' நான் கெஞ்சினேன்.

என் கண்முன் அந்த தீவிரவாதி, ஒரு இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பிடித்துக்கொண்டிருந்தான்.

'ஏய்... யாரும் கிட்டவரக்கூடாது... அப்படியே திரும்பி போயிடுங்க... இல்லன்னா இவளை சுட்டுடுவேன்...'

'ஹேய்... நோ... ப்ளீஸ்...' என்று நான் இரண்டடி முன்னால் நகர்ந்தேன்.

அந்த கயவன் அவள் பாதங்களில் சுட்டான்.... டம்....

'ஆஆஆஆஆஆஆஆஆஆஆ..' அவள் கதறினாள்...

'ஹேஏஏ.ஏ.. நோ...'

'சார், ப்ளீஸ்... பின்னாடி வாங்க.. அவன்தான் கிட்டவராதீங்கன்னு சொல்றான்ல..' என்னருகில் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் திராவிடன் என்னை மிரட்டினான்..

அவள் அழுதுக்கொண்டிருந்தாள்.

'ஓ.கே... நான் என் துப்பாக்கியை கீழே வைக்கிறேன். நாம பேசி தீத்துக்கலாம்..'

'நீ துப்பாக்கியை கீழ வச்சிட்டு கிட்ட வந்தா உன்னையும் சேத்து சுட்டுடுவேன்... பின்னாடி போடா.. போலீஸ் நாயே..' என்று அவன் மிரட்டினான். அவன் என் தொழிலை இழிவாக பேசியது கோபம் வந்தது. ஆனாலும், நான் நினைத்தது நிறைவேற வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் கொஞ்சமாக என் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தேன்.

பின்னாலிருந்த இன்ஸ்பெக்டர் திராவிடன், 'சார், நீங்க வாங்க, நாங்க டீல் பண்ணிக்கிறோம். ப்ளீஸ் டோன்ட் மேக் எனி மூவ்ஸ்' என்று என்னை எச்சரித்தான். என்னை இரண்டு கான்ஸ்டபிள்கள் பின்னுக்கு இழுத்துக் கொண்டார்கள். இன்ஸ்பெக்டர் திராவிடன் என்முன் வந்த நின்றுக்கொண்டான். நான் ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் செய்கிறேன் என்று அனைவருக்கும் குழப்பம்.

அந்த பெண்ணைப் ஏறிட்டுப் பார்த்தேன். நிறுத்தாமல் அழுதுக்கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. அவளும் என்னையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள். 21 வயதுதான் அவளுக்கு. அழகின் உச்சம், சாகவேண்டிய வயதா இது...?

என் முன் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் அந்த தீவிரவாதியுடன் பேச ஆரம்பித்தார்.



'டோன்ட் வர்ரி, இங்கப் பாரு... நாங்க எல்லாரும் திரும்பி போயிடுறோம். அந்த பெண்ணை மட்டும் எதுவும் செஞ்சிடாதே... ப்ளீஸ்...' என்று அவர் கூறிமுடிக்க, அனைவரையும் திரும்பி நடக்குமாறு செய்கை செய்தான்...

நான் உட்பட அனைவரும் திரும்பினோம். எனக்கு பயங்கரமாக மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. ஏனோ என்னால் இருப்புக் கொள்ள முடியவில்லை...

'போங்கடா... போங்கடா இங்கிருந்து...******* ' என்று அந்த தீவிரவாதி திட்டுவது முதுகுப்பக்கத்திலிருந்து கேட்க அவ்வளவு வெட்கமாக இருந்தது.

போலீஸ் பூட்சுகள் மெதுவாக நடந்து செல்லும் காலடிச் சத்தம் அந்த புதுக்கட்டிட கூடத்தில் எஃகோ அடித்தது.

திடீரென்று அந்த பெண்ணின் குரல் கேட்டது

'நான் கர்ப்பமா இருக்கேன்...'

நடந்துக் கொண்டிருந்த போலீஸ் அனைவரும் அவளை ஓரே நேரத்தில் திரும்பி பார்த்தோம். அனைவரும் அவளுக்காக பரிதாபப்படுவதை என்னால் உணர முடிந்தது.

அந்த தீவிரவாதி அவளை மிரட்டினான்... 'ஏய் நீ வாயை மூடு... இல்லை! சுட்டுடுவேன்! என்னடா நிக்குறீங்க... போங்கடா... ' என்றான்.

மீண்டும் அனைவரும் திரும்பினோம். கான்ஸ்டபிள் ஒருவன் திடீரென்று தடுக்கி விழுந்தான். அவன் விழுவதைப் பார்த்த தீவிரவாதி அவன் ஏதோ தன்னை சுடுவதற்காக ஸ்டன்ட் செய்கிறான் என்று நினைத்து அந்த கான்ஸ்டபிளை சுட்டான். குறி தவறவில்லை... போலீஸ் அனைவரும் கலவரமடைந்தனர்...

'ஏய்... நாயே...' என்று இன்ஸ்பெக்டர் திராவிடன் கோபமாக அவனை நோக்கி துப்பாக்கியில் குறிவைக்க...

இரண்டு துப்பாக்கி சத்தங்கள் கேட்டது...

ஒன்று.... இன்ஸ்பெக்டர் திராவிடன், அந்த தீவிரவாதியை சுட்டது...

இன்னொன்று... தீவிரவாதி... அந்த பெண்ணை சுட்டது.

இருவரும் சரிந்து விழுந்து இறந்தனர்.

எனக்குள் நிம்மதிப் பெருமூச்சு...

நான் கடைசி ஆயுதமாக அந்த கான்ஸ்டபிளை கால் தடுக்கி விழவைத்தது பலித்தது.

என் திட்டம் நிறைவேறியது...

அந்த பெண், விநோதா... என் காதலி... இறந்துவிட்டாள்.

நடந்தது என்ன..?

அன்று என் மகள் ரேஷ்மாவின் 22வது பிறந்த நாள். நான் அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்பதால் பல விஐபிக்கள் பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். வீடே வண்ணமயமாக காட்சியளித்தது. விழா மிகவும் கோலாகலாம நடந்துக் கொண்டிருந்தது. அவளிடமிருந்து ஃபோன் வரும்வரை...

அவள்? விநோதா.. வயது 21.

விநோதா என்னுடைய....

மன்னிக்கவும், சொல்லத் தயக்கமாக இருக்கிறது. கொச்சையாக சின்னவீடு, செட்டப், கீப், வைப்பாட்டி என்று கூற விருப்பமில்லை. விநோதா, என் அந்தரங்க காதலி.

'ஹ..லோ..'

விநோதா கிறக்கமான குரலில் தொடர்ந்தாள், 'நந்து', என் பெயர் நந்தகோபால் அவள் என்னை நந்து என்றுதான் கூப்பிடுவாள், 'இன்னிக்கி வாடா..?'

நான் தாழ்மையான குரலில் 'ஹே, இ..ன்னிக்கி முடியாது. நா..ன் நாளைக்கு வறேன்..'

'முடியாது, நீ இன்னிக்கே வா, இன்னிக்கி நைட் உன்கூட இருக்கணும் போலிருக்கு..'

'இல்...ல விநோ. என்னால் இன்னிக்கி வரமுடியாது..'

'உன் மனைவிக்கூடத்தான் இருப்பியா? என்கூட இருக்கமாட்டியா? நீ இன்னிக்கி இங்க வரலைன்னா நான் அங்க வந்துடுவேன்..'

'வேண்டாம் வேண்டாம்.... நா.. நானே.. வர்றேன்..' என்று ஃபோனை வைத்தேன்.

பர்த்டே பார்ட்டி முடிவதற்குள், முக்கியமான வேலை என்று பொய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அன்றிரவு விநோதாவுடன் வேண்டா வெறுப்பாய் தங்கினேன்.

மறுநாள் காலை, வீட்டில் என் மனைவியும் மகளும் என்மீது பயங்கர கோபம் காட்டினார்கள்.

நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு டாய்லெட்டுக்குள் புகுந்தேன். வெஸ்டர்ன் க்ளாசெட்டில் அமர்ந்து பேப்பரைப் புரட்ட, மனம் அதில் லயிக்கவில்லை... என் தலையெழுத்தை நானே நொந்துக்கொண்டேன்.



3 மாத்திற்கு முன்புவரை இந்த கௌரவமான அஸிஸ்டெண்ட் கமிஷனர் வேலை, மிடுக்கான தோற்றம், அழகான மனைவி, அமைதியான குடும்பம் என்று வாழ்க்கை மிகவும் சுமூகமாக

போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த மாயமோகினியைப் பார்த்து தொலைத்தேன், அட்டகாச அழகுடன், ஜீன்சும் டிஷர்ட்டுமாய், என் முன்பு தனது கல்லூரி விழாவிற்கு சீஃப் கெஸ்ட்டாக என்னை அழைக்க ஸ்டேஷனுக்கு வந்திருந்தாள்.

சே! பார்த்த மாத்திரத்தில், என் வயதையும் வாழ்க்கையையும் மறந்துவிட்டேன். என்ன ஒரு வசீகரம். இப்படியும் ஒரு பெண்ணா..! அவள் கண்கள்... வேண்டாம், நான் அவளை விவரிக்க விரும்பவில்லை, அவள் என்னவள்... கொஞ்சம் தாமதமாய் பிறந்துவிட்டாள்... என்றுதான் தோன்றியது. எனவே, பார்த்த மாத்திரத்தில் நான் சகலத்தையும் விட்டுவிட்டு அவளுடன் வாழத்தயாரானேன்.

விநோதா... என் மகள் ரேஷ்மாவைவிட ஒருவயது சின்னவள்... இருந்தாலும் மதிமயங்கிவிட்டேன். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

எனக்கு வயது 46 என்றாலும் அழகாகத்தான் இருப்பேன். ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் என் நரைகள் பிடித்திருக்கிறதென்று விநோதா பலமுறை இரசித்துக் கூறியிருக்கிறாள். அவளை என் வலையில் விழவைக்க நான் மிகவும் சிரமப்படவில்லை. வசதியான வாழ்க்கையை விரும்பியவளாக அவள் இருந்ததால், இரண்டே வாரத்தில் தனி வீட்டில் அவளும் நானும் இரகசிய வாழ்க்கை வாழத்தொடங்கினோம்.

2 மாதங்களும் ஆகவில்லை, அவள் என் மீது அதிகாரம் செலுத்த ஆரம்பித்தாள். வாடா போடா என்று ஆரம்பத்தில் அவள் என்னை அழைத்தது எனக்கு கிறக்கமாக இருந்தது. பிறகு அதையே அவள் அதிகார தோரணையுடன் அழைக்க ஆரம்பித்ததும் கோபம் வருகிறது. என்னை கிட்டத்தட்ட ப்ளாக்மெயில் செய்கிறாள். இராட்சஸி..!

அவள் நினைத்த நேரத்தில் நான் சென்று அவளை சந்தோஷப்படுத்தவேண்டும் என்று விரும்புகிறாள். அது எப்படி? நான் ஒரு குடும்பஸ்தனல்லவா... இந்த நினைப்பு அவளுக்கு வலைவிரிக்கும்போது எனக்கு எங்கே போனது என்று பலமுறை என்னை நான் நொந்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், மாட்டிக்கொண்டேன். என்ன செய்ய...!

அன்று பகல் 11 மணிக்கு நான் ஜீப்பில், ஸ்டேஷனுக்கு போய்க்கொண்டிருந்தபோது, செல்ஃபோன் ஒலித்தது.

'சார், திராவிடன் ஹியர்...'

'யெஸ் திராவிட்'

'சார், NORTH வேலாங்கரையில SKYWAY PARKனு ஒரு அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன் பில்டிங்ல. நாம தேடிக்கிட்டிருக்கிற ஒரு தீவிரவாதி தங்கியிருக்கிறதா இன்ஃபர்மேஷன் வந்திருக்கு..!'

'ஓ.. இஸ் இட்?'

'யெஸ் சார்... பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் ஏதோ கோர்ட் ஸ்டேயினால 6 மாசமா நின்னிருக்காம். ஆளே இல்லாம இருக்கிற பெரிய ஸ்பாட்.'


'குட்..'

'என்ன பண்லாம் சார்..' என்று திராவிடன் கேட்டுக் கொண்டிருக்க, எனக்குள் ஒரு விபரீத எண்ணம் தோன்றியது.

'ஒரு ஹாஃபனவர் கழிச்சி நான் ஃபோன் பண்றேன் அப்ப எல்லாரும் அங்க வாங்க..'

'சார், அதுக்குள்ள அவன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிட வாய்ப்பிருக்கு... வி மஸ்ட் பி..'

'எனக்கு சொல்லித்தர்றீங்களா திராவிட்..?'

'அய்யோ... சார்.. ஐ டின்ட் மீன் தட்...'

'அப்போ, இப்போதைக்கு நான் சொல்ற வரைக்கும் யாரும் அங்கே போக வேண்டாம். பில்டிங் எங்கேன்னு எக்ஸாக்டா சொல்லுங்க..?'

'சார், வேலாங்கரை பிரிட்ஜூக்கு கீழே SKYWAY PARKனு ஒரு அண்டர் கன்ஸ்டரக்ஷன் சைட்.. 3rd FLOORல தங்கியிருக்கிறதா தகவல்'

'ஓகே..'

'ஆனா, சார்..' என்று திராவிடன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஃபோனை வைத்துவிட்டேன்.

ஒரு நிமிடம் நன்றாக யோசித்துவிட்டு, தீர்மானமாய், விநோதாவிற்கு டயல் செய்தேன்.

'ஹாய்டா..' குரலில் அதே கிரக்கம்.

'ஹாய் விநோ டால்' நான் சந்தோஷ மூடில் இருக்கும்போது அவளை விநோ டால் என்று அழைப்பேன். ஆனால் இப்போது சந்தோஷமாய் பேசுவது போல் நடித்துக் கொண்டிருந்தேன்.

'என்னடா செம்ம மூட்ல இருக்கியா..'

'ஆமா, லீவ் போட்டு வர்றேன்... படத்துக்கு போலாமா..?'

அவள் ஏளனமாக, 'ஆமா! நீ படத்துக்கு போலாம்னு எங்கேயாவது சப்-அர்பன் ஏரியாவில இருக்கிற டப்பா தியேட்டருக்கு கூட்டிட்டு போவே.. சிட்டிக்குள்ள போலாம்னா சொல்லு... வர்றேன்..'



நான் கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்தபடி, 'ஹ்ம்ம்... இன்னிக்கி நான் எங்கே கூப்பிட்டாலும் நீ வருவே... ஏன் தெரியுமா..? நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் வச்சிருக்கேன்.'

'ஹே... என்னதுடா அது..?'

'உன் பேருல டபுள் பெட்ரூம் ஃப்ளாட் ஒண்ணு புக் பண்ணப்போறேன்..'

'ஹே... எங்கே..?'

'வேலாங்கரை ஏரியாவுல, ஜன்னலைத் திறந்தா கடல் தெரியும்... அப்படி ஒரு சைட்..'

'ஹே... ஐ அம் சோ ஹேப்பி டா..'

'ம்ம்... குட்... பில்டிங் இன்னும் அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன்லதான் இருக்கு..! நீ என்ன பண்ணு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு... நானும் பின்னாடியே வந்துடுறேன்... ஃப்ளாட்-ஐ செலக்ட் பண்ணி புக் பண்ணிடலாம்... ஓகே..?'

'ஓகே..டா.. அட்ரஸை சொல்லு..'

சொன்னேன்.

'ஒரு 20 மினிட்ஸ்ல அங்க இருக்கிறேன். ஓகேவா..?'

'ஓகே, அங்கே பில்டிங்ல யாராவது இருந்து உன்னை யாருன்னு கேட்டாங்கன்னா... போலீஸ் அனுப்பின ஆளுன்னு மட்டும் சொல்லு. என் பேரு மட்டும் சொல்லிடாதே..!'

'அய்யே...! பயந்தாங்கொள்ளி! சரி பயப்படாதே...! சொல்லமாட்டேன்..' என்று கலாய்த்தாள்.

'ஹஹ்ஹா.. ஓகே... விநோ டால்... பை..' என்று ஃபோனை வைத்தேன். பொய் சிரிப்பு என் முகத்திலிருந்து அகன்றது.

வேறு வழியில்லை எனக்கு, அவளை கொல்வதைத்தவிர வேறு என்ன செய்வது. நான் ஒரு போலீஸ் என்பதால் அவளை இரகசியமாக ஆள்வைத்துக் கொன்றுவிடுவது மிகவும் சுலபம்,. ஆனால், நான் இதுவரை அவளுடன் வைத்திருக்கும் உறவு பற்றி யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. எனக்கு என் குடும்பம் முக்கியம்... சமுதாயத்தில் எனக்கிருக்கும் அந்தஸ்து முக்கியம்...

யாருடைய உதவியுமில்லாமல், யாருக்கும் தெரியவும் செய்யாமல், நான் அவளை தொடவும் தொடாமல் இதை செயல்படுத்த விரும்பினேன். திராவிடன் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் தீவிரவாதி பயங்கரமானவன். அவனை பல ஊரில் தேடுகின்றனர். அவனை பிடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவனுக்கு உயிரைக் கொல்வது ஒன்றும் புதிதில்லை என்பதால்,


நிச்சயமாக அவன் விநோதாவைக் கொன்றுவிடுவான் என்ற நம்பிக்கையில்... அங்கு போய்க்கொண்டிருக்கிறேன்.

விநோதா... என்னை மன்னித்துவிடு... உன்னுடன் நான் வாழ்ந்தாகிவிட்டது.. இனி நீ எனக்காக சொர்க்கத்தில் காத்திரு...!

என்று நினைத்தபடி அடுத்த 1 மணி நேரம் கழித்தில், அந்த பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்-ல் இருந்தேன்.

திராவிடனுக்கு ஃபோன் செய்து போலீஸ் குழுவை அழைத்து வரச்சொன்னேன்.

அவர்கள் வருவதற்குள் உள்ளே என்ன நிலவரம், விநோதா இறந்தாளா இல்லையா என்று தெரிந்துக் கொள்ள தனியாக நான் உள்ளே சென்றேன்.

3வது தளம்... 6 மாதமாக கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டிருந்ததால், சிமெண்ட் வாசம் சுத்தமாக இல்லை...

அங்குமிங்கும் தேடியலைந்துக் கொண்டிருந்தேன். என்ன நடந்திருக்கும், அந்த தீவிரவாதி அவளைக் கொன்றுவிட்டு தப்பித்துவிட்டிருப்பானா..?

'ஏய்...?' திடீரென்று வந்த குரல் கேட்டு திரும்பினேன்... அந்த தீவிரவாதிதான்

'நி...நீதானே... அந்த..' என்று பேசிக்கொண்டிருக்கும்போதே.... எனக்கருகில் சுட்டான். விலகி தப்பித்துக் கொண்டேன்.

'மரியாதையா இங்கிருந்து போயிடு... இல்லே...!' என்று மீண்டும் துப்பாக்கியால் அருகில் சுட்டான்.

இதற்குள் திராவிடன், நிறைய போலீசுடன் உள்ளே நுழைந்துவிட்டான்.

'ஹே..! நில்லு, நீ இங்கிருந்து தப்பிக்க முடியாது. மரியாதையா சரண்டைஞ்சிடு..' என்று திராவிடன் கூவிக்கொண்டிருந்தான்.

அவன் சட்டென்று ஒரு கதவில்லாத அறைக்குள் நுழைந்தான்.

போலீஸார் அவனை பின்தொடர்ந்தவாறு அந்த அறையை நோக்கி ஓட, அதற்குள் அவனே வெளிவந்தான். இம்முறை, அவனது ஒரு கையில் துப்பாக்கி, இன்னொரு கையில் பணயமாய் விநோதா இருந்தாள்..!

அடக்கடவுளே..! இவள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாளா.. என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.



அவள் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே...! என் திட்டம் சத்தியமாக அவளுக்கு தெரிந்திருக்கிறது. இவள் ஏதாவது இந்த தீவிரவாதியிடம் உளறியிருப்பாளோ..! இல்லையென்றால் ஒரு வேளை!, இப்போது எல்லா போலீசின் முன்னிலையில் ஏதாவது உளறிவிடுவாளோ! இப்படி எனக்குள் மாறி மாறி எண்ணங்கள் பயமுறுத்திக்கொண்டிருந்தது.

'வேண்டாம்... அவளை விட்டுடு... சுட்டுறாத... ப்ளீஸ்..' நான் பொய்யாக கெஞ்சினேன்.

'ஏய்... யாரும் கிட்டவரக்கூடாது... அப்படியே திரும்பி போயிடுங்க... இல்லன்னா இவளை சுட்டுடுவேன்...'

'ஹேய்... நோ... ப்ளீஸ்...' என்று நான் இரண்டடி முன்னால் நகர்ந்தேன்.

அந்த கயவன் விநோதாவின் பாதங்களில் சுட்டான்.... டம்....

'ஆஆஆஆஆஆஆஆஆஆஆ..' விநோதா கதறினாள். எனக்குள் சந்தோஷம் பரவியது.

'ஹேஏஏ.ஏ.. நோ...' என்று நடித்தேன்.

விநோதாவை ஏறிட்டுப் பார்த்தேன். நிறுத்தாமல் அழுதுக்கொண்டிருந்தாள். என் முன் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் திராவிடன் அந்த தீவிரவாதியுடன் பேச ஆரம்பித்தார்.

'இங்கப் பாரு... நாங்க எல்லாரும் திரும்பி போயிடுறோம். அந்த பெண்ணை மட்டும் எதுவும் செஞ்சிடாதே... ப்ளீஸ்...' என்று அவர் கூறிமுடிக்க, அனைவரும் திரும்பி நடக்குமாறு செய்கை செய்தான்...

'போங்கடா... போங்கடா இங்கிருந்து...******* ' என்று திட்டினான்.

நான் உட்பட அனைவரும் திரும்பினோம். எனக்கு பயம்! திரும்பி போனதும், அவன் விநோதாவை உயிருடன் விட்டுவிட்டால் என்ன செய்வது. அதற்குப்பிறகு, என் வாழ்க்கை நரகமாகிவிடுமே..!

திடீரென்று விநோதாவின் குரல் கேட்டது

'நான் கர்ப்பமா இருக்கேன்...'

திரும்பி நடந்துக் கொண்டிருந்த போலீஸ் அனைவரும் அவளை ஓரே நேரத்தில் திரும்பி பார்த்தனர். அவள் என்னிடம்தான் அதைக் கூறுகிறாள் என்பது எனக்கு புரிந்தது. என்னைச் சுற்றியிருக்கும் போலீசார்கள், இது தெரியாமல், அவளுக்காக பரிதாபப்படுவதை உணர முடிந்தது. எனக்கும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால், பாதி கடல் தாண்டியாகிவிட்டது. வேறு வழியில்லை...

அந்த தீவிரவாதி அவளை மிரட்டினான்... 'ஏய் நீ வாயை மூடு... இல்லை! சுட்டுடுவேன்...! ஏன்டா நிக்குறீங்க... போங்கடா ' என்றான்.

மீண்டும் அனைவரும் திரும்பினோம்.

என்ன செய்ய, என்ன செய்ய..!

பாம்பை கொல்லும்போது முழுவதுமாய் கொல்ல வேண்டும், இல்லையென்றால் ஆபத்துதான், இங்கிருந்து அவளை உயிரோடு விட்டுவிட்டு வெளியேறக்கூடாது. என்று நினைத்துக் கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு யோசனை வந்தது.

எனக்கருகில் நடந்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவனை என் காலால் அவனுக்கே தெரியாதவாறு தடுக்கிவிட்டேன். அவன் திடீரென்று தடுக்கி விழுந்தான். அவன் விழுவதைப் பார்த்த தீவிரவாதி அவன் ஏதோ தன்னை சுடுவதற்காக ஸ்டன்ட் செய்கிறான் என்று நினைத்து அந்த கான்ஸ்டபிளை சுட்டான். குறி தவறவில்லை... போலீஸ் அனைவரும் கலவரமடைந்தனர்...

'ஏய்... நாயே...' என்று திராவிடன் அந்த தீவிரவாதியை நோக்கி துப்பாகியால் குறிவைக்க...

இரண்டு துப்பாக்கி சத்தங்கள் கேட்டது...

ஒன்று.... இன்ஸ்பெக்டர் திராவிடன், அந்த தீவிரவாதியை சுட்டது...

இன்னொன்று... தீவிரவாதி... என் விநோதாவை சுட்டது.

விநோதா... இறந்துவிட்டாள்.

2 நாட்களுக்குப் பிறகு...

விநோதா என் வாழ்விலிருந்து மறைந்த 2வது நாளை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கும் விநோதாவுக்கும் இருந்த உறவைப் பற்றி மிச்சசொச்சமிருந்த ஆதாரங்களையும் எனது போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி அவளது செல்ஃபோன், உடைமைகள் போன்றவற்றை கைப்பற்றி முழுவதுமாக மூடி மறைத்துவிட்டேன்.

அவள் கடைசி நிமிடங்களில் ஏன் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை என்ற விஷயம் மட்டும் என்னை உறுத்தியது. அவள் நினைத்திருந்தால், போலீசார்களிடையே நான் நின்றிருந்தபோது ஏதாவது சொல்லியிருக்கலாம், அல்லது, அந்த தீவிரவாதியிடம் எங்களுக்குள்ளிருந்த உறவைப் பற்றிக் கூறி என்னை ப்ளாக் மெயில் செய்திருக்கலாம். ஏதோ..! தப்பித்தவரை லாபம்.

ஐ லவ் யூ விநோதா..

மனதிற்குள் நிம்மதி...

எனது வீட்டில் (முதல் மனைவியின் வீட்டில்தான்) மாலை 6.30 மணிக்கு கட்டிலில் நிம்மதியாக படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டருந்தேன்.

சேனலை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருக்க, முடிவில் நியூஸ் சேனலை வைத்தேன்.

என் மனைவி காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.

தொலைக்காட்சியில் செய்தியில்...

'2 நாட்களுக்குமுன் வேலாங்கரையில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரபல தீவிரவாதியும், அவனது காதலி விநோதா என்கிற விநோதினியும் சுட்டுக்கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே...! ஆனால், விநோதினி அந்த தீவிரவாதியின் காதலி அல்ல என்றும், பிரபல போலீஸ் அதிகாரி ஒருவரின் அந்தரங்க காதலி என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது..' என்று உச்சரிப்பு பிழையில்லாமல் படிக்கும் அந்த செய்திவாசிப்பாளினி என் வயிற்றில் அமிலங்கலை ஊற்றிக்கொண்டிருந்தாள்.

எனக்கு காஃபி கொண்டுவந்த மனைவி இதைப் பார்த்தும், காஃபியை தரையில் சிந்தியபடி என்னிடம் கப்பை ஒப்படைத்தாள்.

எப்படி..! எப்படி..! இவர்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது...! நான் மிகவும் ஜாக்கிரதையாக, எனக்கும் விநோதாவிற்கும் இருக்கும் தொடர்பைப் பற்றிய ஆதாரங்கள் எதையும் விட்டுவைக்கவில்லையே..! அழித்துவிட்டேனே..!

செய்தி தொடர்ந்தது...

'விநோதாவின் பிரேதத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யும்போது, அவளது உணவுப் பையில் ஒரு திக் ப்ளாஸ்டிக் கவர் கிடைத்ததாகவும் அதற்குள் செல்ஃபோனின் மெமரி கார்டு ஒன்று கிடைத்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.'

அடிப்பாவி..! இப்படி ஒரு சாமர்த்திய எண்ணம் உனக்கெப்படி வந்தது... இப்படி செய்துவிட்டாளே..! என் வேலைக்கும், வாழ்வுக்கும், அனைத்துக்கும் உலை வைத்துவிட்டாளே..!

'அடப்பாவி..! இப்படியுமா மனுஷங்க இருப்பாங்க...' என் மனைவி அந்த செய்தியில் பேசப்படும் நபர் நான்தான் என்று தெரியாமல் புலம்பினாள். எனக்கு அந்த ஏ.சி. அறையிலும் வியர்த்துக் கொண்டிருந்தது....

என் மனைவியின் செல்ஃபோன் ஒலித்தது.. எடுத்து பேசியவாறே அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் நான் உடனே ரிமோட்டை எடுத்து ஒலியைக் கூட்டினேன்.

செய்தி தொடர்ந்தது...

'ஒருமுறைக்கு பலமுறை ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிறகே இந்த தகவலை வெளியிடுகிறோம். பிரபல போலீஸ் அதிபரின் அந்தரங்க காதலியாக விநோதா நடத்திய வாழ்க்கைக்கு ஆதாரமாய் அந்த மெமரி கார்டில் உல்லாச வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன... அந்த காட்சி இதோ...'

என்று கூற, அதில் நானும் விநோதாவும்... சே..! சொல்வதற்கே வெட்கமாய் இருக்கிறது...

என் மனைவி உள்ளே நுழைந்தாள்...

காட்சியை அவளும் பார்த்தாள்...

கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாய் அந்த வீடியோவில் என் முகத்தை மட்டும் தெரியாதபடி மறைத்திருந்தார்கள். அரையிருட்டில் மொபைல் ஃபோனில் எடுத்த காட்சியாதலால் என் மனைவியும் என்னைக் கண்டுபிடிக்கவில்லை..!

ஆனாலும், எனக்கு மீண்டும் பயங்கரமாக வியர்த்துக் கொண்டிருந்தது.

'என்னங்க..?'

'என்ன?' என்றேன்.

என் ஃப்ரெண்சுங்க எல்லாம் எனக்கு ஃபோன் பண்ணி கேக்குறாங்க... உங்க டிபார்ட்மெண்ட் ஆளுதானே.! உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்குமாம். அதனால, உங்ககிட்ட கேட்டு சொல்லச் சொல்றாங்க..! யாருங்க அது..!' என்று என்னிடமே கேட்டாள்.

'என...க்கு... தெரியாதுமா..! டிபார்ட்மெண்ட்ல ஒருத்தர் ரெண்டு பேரா, எவ்வளவு பேரு இருக்கோம்..' என்று கஷ்டப்பட்டு சிரித்தவாறே சொன்னேன்.

'இவங்களையெல்லாம் நிக்க வச்சி சுடணும்..' என்றாள்.

சுட்டது...

'சாதுர்யமாக கட்டத்தை நகர்த்திய அந்த போலீஸ் அதிகாரி யார்..? இன்று இரவு பத்து மணி செய்தியில்... காணத்தவறாதீர்கள்..'

என்று அத்துடன் அந்த செய்தியறிக்கை முடிந்தது.

அந்த தொலைக்காட்சியின் நோக்கம் இப்போது எனக்கு புரிந்தது. இவர்கள் முகம் மறைத்து வீடியோவை ஒளிபரப்பியது என்னை காப்பாற்றும் நோக்கமோ அல்லது போலீஸ் என்கிற பயமோ அல்ல, இவர்கள் என் முகத்தையும் பெயரையும் வைத்து வியாபாரம் செய்யவிருக்கிறார்கள். இவர்கள் கண்டிப்பாக 10 மணி செய்தியில் என்னைக் காட்டத்தான் போகிறார்கள்.

என்ன செய்வதென்று தெரியவில்லை...! வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

விநோதாவும் நானும் வாழ்ந்த வீடு... வந்தடைந்தேன்.

உள்ளே சென்றேன். அவள் இன்னும் அங்கு வாழ்வது போலவே இருந்தது. அவள் புகைப்படத்தில் என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை வீசிக்கொண்டிருந்தாள்.

உண்மையிலேயே சாதுர்யமானவள் என்று நினைத்துக் கொண்டேன்.

பாத் டப்பில் சுடுதண்ணீரை நிரப்பினேன். அவளது புகைப்படத்தை எடுத்துவந்து அருகில் வைத்துக் கொண்டேன். உடைகளை களைந்து, தொட்டியினுள் இறங்கினேன். கதகதப்பான நீருக்குள் மூழ்கியபடி அவளது புகைப்படத்தை ஆசைதீர பார்த்துக் கொண்டிருந்தேன்.

பணம்... வசதியான வாழ்க்கை என்று எவ்வளவிருந்தாலும், நீ என்னுடன் சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டாய்... என்னால் அதை கொடுக்க முடியவில்லை மன்னித்துவிடு... நீ ஏன் மிகவும் தாமதாக பிறந்தாய். முன்னமே பிறந்திருந்தால், இருவரும் கணவன் மனைவியாய் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாமே..!

இப்படி ஏதேதோ பேசியபடி அவள் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க...

மணி 10 என்று எனது கைக்கடிகாரம் காட்டியது...

மீண்டும் அவளது புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

துப்பாக்கியை எடுத்து நெற்றியில் வைத்தேன்.

மணி 10.03...

என் செல்ஃபோன் ஒலித்தது.

என் மனைவிதான் அழைத்தாள்....

எடுத்தேன்...

விநோதாவின் புகைப்படத்தைப் பார்த்தபடி ஃபோனில் மனைவியிடம்

'என்னை மன்னிச்சிடும்மா..' என்று இருவரிடமும் ஒரே நேரத்தில் மன்னிப்பு கேட்டபடி, ட்ரிக்கரை அழுத்தினேன்.

டம்ம்ம்ம்................

- முடிவு -


Signature

14 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கொஞ்சம் நித்யானந்தரின் பாதிப்பு தெரிந்தாலும், விறுவிறுப்பான கதை. எல்லா அநியாயங்களுக்கும் சாவு தான் முடிவாகிறது. அது இல்லாத வேறு முடிவை யோசிச்சு பாருங்க sir,
meeeeeeeeeee firssssssssssst

சீமான்கனி said...

கதை நல்லா விறுவிறுப்பா போகுது ....
அவரின் வில்லத்தனம் தான் மேலோங்கி நிற்குது கதையில்.....நல்லதொரு பகிர்வு

Raghu said...

இதென்ன‌ புதுசா ந‌ந்த‌கோபாலான‌ந்தா மேட்ட‌ர் :))

ஃப்ளோ ந‌ல்லாருக்கு ஹ‌ரிஷ், ஆனா ந‌ந்துவுக்கு விவ‌ர‌ம் ப‌த்த‌லை. அது கிராபிக்ஸ், விஷுவ‌ல் எஃபெக்ட்ஸ், "அவ‌தார்" டீம்தான் இந்த‌ ச‌திக்கான‌ பிண்ண‌ணின்னு பீலா விட்டிருக்க‌ணும். ஹும்..சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் காக்கிக‌ளைவிட‌ காவிக‌ள் ந‌ன்றாக‌ சிந்திக்கிற‌து!

//இன்ஸ்பெக்டர் திராவிடன் என்முன் வந்த நின்றுக்கொண்டான்//

என்ன‌தான் உய‌ர‌திகாரியா இருந்தாலும், "நின்றுகொண்டான்"னுக்கு ப‌தில் "நின்றுகொண்டார்"னு இருந்தா ந‌ல்லாருக்கும்:)

செந்தில் நாதன் Senthil Nathan said...

அருமையான கதை...விருவிருப்பா போச்சு...

செந்தில் நாதன் Senthil Nathan said...

ஒரு கேள்வி...கட்டடத்தில் நடந்ததை ரெண்டாவது தடவ விளக்கனும்மா? அத வாசகரின் கற்பனைக்கு விட்ட்ரலாமே..

என்னடா இப்படி எல்லாம் கேள்வி கேக்குறான்னு யோசிக்காதிங்க..ஒரு ஆர்வக்கோளாறுனு வச்சுக்கோங்க!!

சைவகொத்துப்பரோட்டா said...

திரில்லர் படம் பார்த்த மாதிரி இருக்கு ஹரீஷ்.
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து உள்ளேன், நேரம் கிடைக்கும் பொழுது
எழுதுங்களேன்.

DREAMER said...

வாங்க ராஜ்குமார் (நாய்குட்டி மனசு)
வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி...

//கொஞ்சம் நித்யானந்தரின் பாதிப்பு தெரிந்தாலும் விறுவிறுப்பான கதை...//
ஒரு முக்கிய பதவியிலோ அல்லது அந்தஸ்திலோ இருக்கும் நபரின் மோசடி விஷயங்கள் தொலைக்காட்சியில் காட்டப்படும்போது மக்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்ற விளைவை சமீபத்தில்தான் மக்கள் உணர்ந்திருப்பதால் அந்த நித்தி விஷயத்தை உபயோகித்துக்கொண்டேன்...

கதையின் இந்த முடிவுக்கான காரணத்தை எழுதியிருக்கேன். இந்த பதிலிடுகையின் கடைசி பகுதியைப் பார்க்கவும்...
-------------------------------


வாங்க seemangani
கதை நாயகனின் வில்லத்தனம் உங்களுக்கு பிடித்துபோனதில் மகிழ்ச்சி... தொடர்ந்து வாருங்கள்...

-------------------------------

வாங்க ரகு
க்ரைம் எழுதுங்கன்னு நீங்க ரொம்ப நாளா சொன்னதால ஏதோ முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ணியிருக்கேன்...

ஒரே ஒரு சின்ன வீடு வச்சிருக்கிறது ஒரு குற்றமா..? அவரு என்ன ஊருக்கு ஒரு சின்ன வீடா வச்சிருந்தாரு... அந்நியாயத்துக்கு நந்தகோபாலனந்தான்னு ஒரு பட்டப் பெயர் வேற கொடுத்துட்டீங்க...

// என்ன‌தான் உய‌ர‌திகாரியா இருந்தாலும், "நின்றுகொண்டான்"னுக்கு ப‌தில் "நின்றுகொண்டார்"னு இருந்தா ந‌ல்லாருக்கும் //
சாரி... எழுத்துப்பிழை... மாற்றிக்கொள்கிறேன். அதே காட்சியில் மற்ற இடங்களில் அவரை 'ர்' போட்டுத்தான் அழைத்திருக்கிறேன்.

அடுத்ததா உங்க பேரை நாயகமா வச்சி ஒரு ஹாரர் கதை எழுதிட்டிருக்கேன்.

கதையின் இந்த முடிவுக்கான காரணத்தை எழுதியிருக்கேன். இந்த பதிலிடுகையின் கடைசி பகுதியைப் பார்க்கவும்...
-------------------------------

வாங்க செந்தில்நாதன்
வருகைக்கும், வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி...!

//ஒரு கேள்வி...கட்டடத்தில் நடந்ததை ரெண்டாவது தடவ விளக்கனும்மா? //

முதல்முறை அந்த பெண் துப்பாக்கியால் காலில் சுடப்பட்டு அழும்போது, நந்தகோபாலின் முகம் பரிதாப்படுவதுபோல் நடித்துக்கொண்டிருக்கும். அதே காட்சியை அடுத்த முறை படிக்கும்போது அதே இடத்தில் உள்ளுக்குள் 'நான் மழிழ்ந்தேன்' என்ற அவரின் சாடிஸம் தெரியும். இதை தெளிவு படுத்த விரும்பியதால், ஒரே காட்சியை இரண்டு முறை நந்தகோபாலின் மனநிலையை விளக்குவதற்காய் எழுதினேன். படிக்கும்போது அதை ஸ்கிப் செய்தாலும் கதையின் போக்கு மாறாது.

//என்னடா இப்படி எல்லாம் கேள்வி கேக்குறான்னு யோசிக்காதிங்க..//
ப்ளீஸ் அந்தமாதிரியெல்லாம் நினைக்காதீங்க... எதுவாயிருந்தாலும் நாம பகிர்ந்துக்கலாம்...

-------------------------------

@ சைவகொத்துப்பரோட்டா

நண்பா வணக்கம்

//திரில்லர் படம் பார்த்த மாதிரி இருக்கு ஹரீஷ்//

மிக்க நன்றி... உங்கள் பாராட்டுக்கள் ஊக்கமளிக்கிறது. தொடர்ந்து வாருங்கள்...

//உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து உள்ளேன், நேரம் கிடைக்கும் பொழுது
எழுதுங்களேன்.//

அருமையான தலைப்பின் கீழ் எழுத அழைப்பு கொடுத்திருக்கிறீர்கள்... கண்டிப்பாக எழுதுகிறேன்...

-------------------------------

கதையின் முடிவு பற்றிய கருத்துக்கள்.

நாய்க்குட்டி மனசு :-
//எல்லா அநியாயங்களுக்கும் சாவு தான் முடிவாகிறது. அது இல்லாத வேறு முடிவை யோசிச்சு பாருங்க//

ரகு :-
//ஆனா ந‌ந்துவுக்கு விவ‌ர‌ம் ப‌த்த‌லை. அது கிராபிக்ஸ், விஷுவ‌ல் எஃபெக்ட்ஸ், "அவ‌தார்" டீம்தான் இந்த‌ ச‌திக்கான‌ பிண்ண‌ணின்னு பீலா விட்டிருக்க‌ணும்.//

இந்த முடிவுக்கு காரணம்...

ஏ.ஸி. நந்தகோபால் அடிப்படையில் நல்லவன் (3 மாதத்திற்கு முன்பு வரை), அவர் ஒரு பக்கா வுமனைஸராக இருந்திருந்தால் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க முயலலாம். அவர், இந்த கொலையை மறைக்க நினைத்ததின் முக்கியமான காரணம், தனது குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரியக்கூடாது, அடுத்ததாக சமுதாயத்தில் தனக்கிருக்கும் பெயர் கெடக்கூடாது என்பதுதான். ஆனால் தொலைக்காட்சியில் காட்டும் விஷயத்தை மறுதளிப்பதால் அவர் தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர, அவரின் அமைதி வாழ்க்கை கண்டிப்பாக பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, தனது குற்றத்தை நியாயப்படுத்த விரும்பாதவர்போல் சித்தரித்ததால் இந்த முடிவு.

ஒருவகையில் ரகு கூறியது போல் //ந‌ந்துவுக்கு விவ‌ர‌ம் ப‌த்த‌லை//. தொடர்ந்து பல 'விநோதா'க்களை கையாண்டிருந்தால், ஃப்யூச்சரில் அவரும் சாமியாராகியிருக்கலாம்.

அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்...

-
DREAMER

வேங்கை said...

ஹரிஷ் super story ...விநோதா சாகும் வரை இருந்த ஸ்பீட் அபாரம், ஆனால் அப்பறம் கொஞ்சம் குறைஞ்சது...
but flow and climax நல்லா இருக்கு ....

( ஹரிஷ் இந்த கதைய விநோதா சாகும் வரை ஒரு கதை then next part ய் இன்னொரு கதையாவும் சொல்லி இருக்கலாம் )

வாழ்த்துக்கள்

DREAMER said...

நன்றி வேங்கை...
விநோதாவை நெஞ்சில் பதியவைக்க கடைசியில் கொஞ்சம் நிதானம் தேவைப்பட்டது...

//ஹரிஷ் இந்த கதைய விநோதா சாகும் வரை ஒரு கதை then next part ய் இன்னொரு கதையாவும் சொல்லி இருக்கலாம்//

அடுத்தமுறை நீளம் அதிகமாக இருந்தால், கண்டிப்பாக தொடர்கதையாக்கிவிடுகிறேன்... ஆலோசனைக்கு நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!

-
DREAMER

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

குட் thriller , எதிர்பாராத திருப்பம். ஆனா நாட்டுல நடக்கறதை தான் சொல்லி இருக்கீங்க. சூப்பர்

DREAMER said...

வாங்க தங்கமணி... அதென்ன அப்பாவி அடைமொழி?
முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி..! தொடர்ந்து வாருங்கள்...

-
DREAMER

Kiruthigan said...

அருமையா கரத சார்
நல்லாருக்கு

SHORT FILM MAKING said...

வணக்கம். உங்க கதையை நான் குரும்படமாக எடுக்கலாமா. உங்கள் தொலைபேசி எண் தாருங்கள். எனது எண் 9003924682

DREAMER said...

வணக்கம் பிரதர், தாமதமானதற்க்கு மன்னிக்கவும்... இப்போதுதான் உங்க கமெண்ட்ஸ் பார்த்தேன். இந்த கதை உங்களுக்கு உபயோகப்படுமென்றால் எடுத்துக்கொள்ளவும்...

Popular Posts